Thursday, April 29, 2010

இனையத்தில் வேகமாக உலவ டிப்ஸ்...

நம்மிடம் குறைந்த திறன் கொண்ட கணினி இருக்கும் அதனால் நாம் வேகமாக இனையத்தில் உலவ முடியாது கணினியில் மெமரியின் அளவை அதிகரித்தால் கொஞ்சம் மாற்றம் கிடைக்கும் இருப்பினும் பணம் செலவில்லாமல் சில மாற்றங்கள் கணினியில் செய்வதன் மூலம் கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் இந்த தகவல் இனையத்தில் உலவும் திறனை மட்டுமே மேம்படுத்தும்.

இங்கு நான் இரண்டு வழிமுறைகள் வழியாக கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் டெஸ்க்டாப்பில் இருக்கும் மை கம்ப்யூட்டரின் Properties தேர்ந்தெடுக்கவும் இப்போது புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Hardware என்பதை கிளிக்கி Device Manager என்பதை திறக்கவும்.

இனி Device Manager என்பதை கிளிக்கிய பிறகு மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் Communication Port என்பதை டபுள் கிளிக் செய்தால் இப்போது மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் Port Settings என்பதை தேர்ந்தெடுத்து அதில் Bit Per Second என்பதில் 128000 என மாற்றவும் அடுத்து கீழே இருக்கும் Flow Control என்பதில் Hardware என மாற்றவும்.

என்ன அப்படியே செய்து விட்டீர்கள்தானே இனி ஓக்கே கொடுத்து வெளிவரவும் இனி அடுத்து என்ன செய்வது என பார்க்கலாம், இனி Start -> Run -> என்பதில் gpedit.msc என டைப் செய்து ஒக்கே கொடுக்கவும் இப்போது ஒரு விண்டோ திறக்கும் அதில் Local Computer Policy என்பதன் கீழே இருக்கும் Computer Configuration பகுதியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுக்கவும் அதில் Network என்பதை கிளிக்கி அடுத்ததாக QOS Packet Scheduler கிளிக்கவும் இனி வலது பக்கம் பாருங்கள் Limit Reservable Bandwidth என்கிற பெயர் இருக்கிறதா அதை டபுள் கிளிக் செய்யுங்கள் திறக்கும் விண்டோவில் செட்டிங்ஸ் டேப் திறந்து அதில் இருக்கும் Bandwidth Limit என்பதில் 0 என மாற்றிவிடுங்கள் அப்ளை கொடுத்து ஓக்கே கொடுத்து வெளியேறுங்கள் அவ்வளவுதான்.

இனி என்ன முன்பு இருந்த வேகத்திற்கும் இப்போது இருக்கும் வேகத்திற்கும் ஏதாவது மாற்றம் தெரிகிறதா பெரிய அளவில் மாற்றம் இல்லையென்றாலும் நிச்சியம் நீங்கள் அந்த மாற்றத்தை உணர்வீர்கள்.

Tuesday, April 27, 2010

ஸ்லிப்ஸ்ட்ரீமிங் (Slipstreaming) என்றால் என்ன???

சிலர் இப்படி அலுத்துக் கொள்வார்கள் – போன வாரம் இரவில் விண்டோஸ் சிஸ்டத்தை ரீ இன்ஸ்டால் செய்தேன். போதும் போதும் என்றாகிவிட்டது என்று சொல்லிவிட்டு, அவரே ஸ்லிப் ஸ்ட்ரீமிங் இருந்தால் கொஞ்சம் ஈஸியாக இருந்திருக்கும். சீக்கிரம் படுக்கைக்குப் போயிருக்கலாம் என்பார்.

விண்டோஸ் மிக ஈஸியாக இன்ஸ்டால் ஆகிவிடும். ஆனால் அதன் பின்னர், சர்வீஸ் பேக், லேட்டஸ்ட்டாக வந்த ஹாட் பிக்ஸ், அண்மையில் வந்த டிரைவர் தொகுப்புகள். என கணக்கிலடங்காத பின்னூட்டுகளை சிரமப்பட்டுத் தேடி இன்ஸ்டால் செய்திட வேண்டி இருக்கும். இல்லையேல் உங்கள் புரோகிராம்கள் இயங்காது. விண்டோஸ் முன்பு போலக் காட்சி அளிக்காது.

ஸ்லிப் ஸ்ட்ரீமிங் என்பது இந்த அலைச்சலுக்கும் தேடலுக்கும் ஒரு முடிவு கட்டுகிறது. ஸ்லிப் ஸ்ட்ரீமிங் என்பது ஒரு பூட்டபிள் சிடியில், நமக்குத் தேவையான லேட்டஸ்ட் டிரைவர் தொகுப்புகள், முழுமையான ஒரிஜினல் இன்ஸ்டலேஷன் பைல்கள், அப்போதைய சர்வீஸ் பேக் என அனைத்தையும் பதிந்து வைக்கும் செயல்பாடாகும். இந்த சிடியை வைத்துக் கொண்டால், விண்டோஸ் சிஸ்டம் தொகுப்பை ரீ இண்ஸ்டால் செய்வது முதல் அனைத்து வேலைகளையும் தானே மேற்கொண்டு விடும். இதனை எப்படி தயாரிப்பது?

இதற்கு முதலில் நமக்குத் தேவை விண்டோஸ் ஒரிஜினல் சிடி. இதனை முதலில் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் சி (C:/XP) டிரைவில் காப்பி செய்திடவும். உங்களுடைய சிஸ்டம் டிஸ்க்கில் லேட்டஸ்ட் சர்வீஸ் காப்பி இருந்தால் நல்லது. இல்லையேல் மைக்ரோசாப்ட் தளம் சென்று அதனையும் காப்பி செய்து அந்த டிரைவில் தனியான போல்டரில்பேஸ்ட் செய்திடவும். மைக்ரோசாப்ட் தளத்தில் என்ன என்ன ஹாட் பிக்ஸ் பைல்கள் கிடைக்கின்றனவோ, அவை அனைத்தையும் காப்பி செய்து பேஸ்ட் செய்திடவும்.
விண்டோஸ் சிஸ்டம் சிடியில் இல்லாத டிரைவர்கள் ஏதேனும் உங்களுக்குத் தேவை என்றால், அவற்றின் தளங்களுக்குச் சென்று அவற்றையும் இதே போல அந்த இரண்டாவது போல்டரில் காப்பி/பேஸ்ட் செய்திடவும்.

இப்போது ஸ்லிப் ஸ்ட்ரீமிங் செயல்பாடு இந்த இரண்டு போல்டரையும் ஒரு ஐ.எஸ்.ஓ. இமேஜ் மூலம் உருவாக்குவதன் மூலம் இணைக்கும். இதற்கு உதவக் கூடிய புரோகிராம் ஆட்டோ ஸ்ட்ரீமர் (AutoStreamer 1.0.33) என்பதாகும். இதனை கீழே உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
இதனை டவுண்லோட் செய்து ஸ்லிப் ஸ்ட்ரீமிங் செய்திடப் பயன்படுத்தவும். இந்த வேலைகளை எல்லாம் மேற்கொள்ள சிறிது சிரமம் என்றாலும், விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்திடுகையில் மேற்கொள்ள வேண்டிய வேலைகளை எல்லாம் சுலபமாக மேற்கொள்ளலாமே.


கணவன்-மனைவி மோதல் நல்லதே..!

எந்த ஒரு உறவிற்கும் அடிப்படைத் தேவை நேர்மை தான். அதற்கு உங்கள் துணையிடம், `எப்போதும் நான் எதையும் மறைக்காமல் நேர்மையுடன் தைரியமாக செயலாற்றுபவர்’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். அப்போது தான் மனைவி, மக்களிடம் இருந்தும் நீங்கள், நம்பிக்கையை பெற முடியும்.

உங்கள் துணை உங்களிடம் உள்ள சிறுசிறு குறைகளை வெளிபடுத்தும் போது, அதை மறுக்காமல் பணிவுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். அதற்கு மாறாக கோபத்தை வெளிபடுத்தாதீர்கள். பதிலுக்கு அவர்களிடம் குறை கண்டுபிடிக்காதீர்கள். உதாரணமாக, காலதாமதம், நேர்த்தியாக உடை அணியாதது போன்ற சிறு சிறு குறைபாடுகளைக் கூட, அவர் உங்கள் நடத்தைகளில் கண்டிருக்கலாம்.

சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் ஏற்படும்போது இருதரப்பினருக்கும் பொதுவான வகையில் இருந்து நேர்மையுடன் பிரச்சினையை அணுகுங்கள். தேவையில்லாமல் யாருடைய மனதைம் புண்படும் படியான வார்த்தைகளை பேச வேண்டாம்.

உங்கள் துணையிடம் எந்த பிரச்சினையையும் மனம் விட்டு பேசி, பகிர்ந்து கொள் ளுங்கள். அப்போது தான், `உங்கள் ஆழமான நம்பிக்கையை தன் மீது வைத்திருக்கிறீர்கள்’ என்று அவர் சந்தோஷபடுவார். இதன் முலம் உங்கள் துணைடன் நீண்ட நாட்களுக்கு புரிதலுடன் கூடிய நல்லுறவை ஏற்படுத்தலாம்.

எப்போதும் சுதந்திரமாக இருந்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள். எந்த வேலையையும் செய்ய கட்டளையிடாதீர்கள். சுதந்திரமாகவும், அன்பாகவும் அந்த வேலையை எப்படி செய்யலாம் என்று வழிகாட்டுங்கள். இது உங்கள் நம்பிக்கையை எப்போதும் அவர் பெற உதவியாக இருக்கும்.

நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உங்கள் துணைக்கு மிகவும் முக்கியமானவை. அதனால் பிரச்சினைகள் குறித்து பேசும்போது மிக கவனமுடன் வார்த்தைகளைக் கையாளுங்கள். அவை அறிவுபூர்வமாக இருக்கட்டும். அப்போது தான் உங்கள் துணைக்கும் உங்கள் மீது நல்ல ஒரு அபிராயம் ஏற்படும்.

Sunday, April 25, 2010

ஐ.பி.எல்., எனும் அட்சய பாத்திரம்...

முதல் விக்கெட் விழுந்துவிட்டது.அடுத்தது எப்போது விழும் என, நகத்தைக் கடித்தபடி 'டிவி' ÷ஷாரூம் முன்னால் நிற்கும் ரசிகர்களைப் போல, ஆவலோடு காத்திருக்கிறது இந்தியா.விழுந்தவர் சசி தரூர். விளிம்பில் நிற்பவர் லலித் மோடி.ஒருபுறம், அவரை 'அவுட்'டாக்க ஏகப்பட்ட பந்து வீச்சாளர்கள் காத்திருக்கின்றனர். மறுபுறம், 'நம்மையும் 'அவுட்'டாக்கிவிடுவாரோ' என்ற பயம் கொண்டவர்கள், அவருக்கு பதிலாக, 'பை ரன்னராக' ஓடிக் கொண்டிருக் கிறார்கள்.


அணிகளுக்கான விலை நிர்ணயம், புதிய அணிகளுக்கான கட்டணம், அதிபர்களின் நிதி ஆதாரம், பின்னணி பைனான்சியர்கள் பற்றிய விபரம், ஐ.பி.எல்.,லின் துபாய் தொடர்பு, போட்டிகளின் வெற்றி, தோல்வி நிர்ணயத்தில் விளையாடிய பணம் என ஏராளமான விஷயங்கள் சந்திக்கு வந்துவிட்டன.இந்த ஐ.பி.எல்., காமெடியில் எத்தனை ஆயிரம் கோடி பரிமாற்றம் நடந்திருக்கும் என்பது, புலனாய்வுத் துறைக்கே புரியாத புதிராய் இருக்கிறது. விஞ்ஞானப்பூர்வ ஊழல் நடந்திருக்கிறது என்பதில், யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. அதை எப்படி வெளிக்கொணர்வது என்பதில் தான், மத்திய அரசும், வருமான வரித்துறையும் மண்டையைப் பிய்த்துக் கொண்டு இருக்கின்றன.

மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு, அடிப்படை முகாந்திரங்கள் ஆயிரம் இருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான கோடிகள் புரளும் மையமாக, ஐ.பி.எல்., திகழ்கிறது. வரம்பில்லா பணமும், முடிவில்லா வறுமையும் தானே சமூகத்தின் எல்லா பிரச்னைகளுக்கும் காரணமாக அமைகின்றன.ஐ.பி.எல்.,லின் இன்றைய சந்தை மதிப்பு, ஒன்றல்ல... இரண்டல்ல... 18 ஆயிரம் கோடி ரூபாய்.

2008ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி துவக்கப்பட்ட முதல் போட்டி, மிகச் சரியாக இரண்டே ஆண்டுகளில் இந்த உயரத்தை எட்டியுள்ளது. லாட்டரியில் கூட இப்படி ஒரு பம்பர் பரிசு கிடைத்ததாக பதிவு இல்லை.இதுமட்டுமின்றி, பல்வேறு மாநில அரசுகள் இந்த விளையாட்டுக்கும், அணிகளுக்கும், வீரர்களுக்கும், டிக்கெட்டுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வரிவிலக்கு அளித்திருக்கின்றன. யார் வீட்டு பணத்துக்கு யார் விலக்களிப்பது?

இத்தனை ஆயிரம் கோடிகள் புரண்டும், இந்த ஐ.பி.எல்.,காரர்களுக்கு எந்தச் சமூகப் பொறுப்புணர்வும் கிடையாது. சாலையில் தூய்மைப் பணி மேற்கொள்வது போல், தொழிலாளர்களுடன் மண் சுமப்பது போல், அரசியல்வாதிகள் ஒப்புக்கு, 'போஸ்' கொடுப்பார்கள். ஐ.பி.எல்., அதிபர்கள் அந்த வேலையைக் கூட செய்தது கிடையாது.

விளையாட்டு வீரரின் நெற்றியைத் தவிர, கிடைத்த இடத்தில் எல்லாம் விளம்பரத்தைப் போட்டு, ரசிகனின் பாக்கெட்டில் இருந்து பணம் பறிப்பதையே அடிப்படைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனர்.

கடந்த 2009ம் ஆண்டு, இந்தியாவில் பொதுத் தேர்தல் நடந்த சமயம். 'கொஞ்சம் ஒத்தி வையுங்கள்' என மத்திய அரசே கெஞ்சிக் கேட்டது. 'அதெல்லாம் முடியாது; வட்டிக் கணக்கு என்ன ஆவது?' என அலட்சியப்படுத்திவிட்டு, அந்த ஆண்டுக்கான போட்டிகளை தென்னாப்பிரிக்காவுக்கு கடத்திச் சென்றார் லலித் மோடி. அவ்வளவு ஏன்? ஐ.பி.எல்.,லை ஆரம்பித்ததிலேயே நல்ல நோக்கம் கிடையாது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவை முன்னிலைப்படுத்தி, இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,) ஆரம்பிக்கப்பட்டது. 'நல்ல வீரர்கள், இளைஞர்கள், இந்திய அணியில் புறக்கணிக்கப்படுகின்றனர்; அணிக்கு ஆள் சேர்ப்பதில் பணம் பாதாளம் வரை பாய்கிறது' என்ற புகாரின் காரணமாக, இளம் வீரர்களை நாட்டுக்கு அடையாளம் காட்டும் விதமாக, ஐ.சி.எல்.,லுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது.

அது நடந்துவிட்டால், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் குட்டு உடைந்துவிடுமே. உடனடியாக, அவசரத் தீர்மானம் நிறைவேற்றி ஆரம்பிக்கப்பட்டது தான் ஐ.பி.எல்.,மொத்த நோக்கமும் பாழ். வீரர்களைச் சேர்க்கும்போது, அதன் முதல் நிபந்தனையே, 'ஐ.சி.எல்.,லோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது' என்பது தான். அதோடு ஐ.சி.எல்., ஊத்தி மூடப்பட்டது; ஐ.பி.எல்., செழித்து வளர்ந்தது.

அணியைச் சொந்தமாக்கிக்கொள்ள நூற்றுக்கணக்கான கோடிகள் பேரம் பேசப்பட்டன. அந்த அணிகளுக்கான வீரர்கள், ஆடு, மாடுகள் போல் ஏலம் எடுக்கப்பட்டனர். அவர்களது விலையும் கோடிகளில் கொளுத்தியது. கண், மண் தெரியாமல் பணம் விளையாடியது; இன்றைய சர்ச்சையில் வந்து நிற்கிறது.

இப்போது எல்லா விரல்களும், லலித் மோடியை நோக்கி பாய்கின்றன. அத்தனைக்கும் காரணகர்த்தா அவர் தான் என்றாலும், அத்தனையையும் அவரே அள்ளிப் போட்டிருக்க வாய்ப்பில்லை. எந்த இடத்திலாவது ஊழல் நடந்தால், இரண்டு காரணங்களுக்காக அது வெளியில் தெரியும். ஒன்று, நியாயவான்கள் கொதிப்பது. இரண்டு, கூட்டாளிகளுக்கு உரிய பங்கு கிடைக்காதது.

ஐ.பி.எல்.,லில் நியாயஸ்தர்களும் இல்லை; பங்கு கிடைக்காதவர்களும் இல்லை; 'அத்தனை பேருக்கும் ஆனந்தம்' என்பது தான் லலித் மோடியின் அடிப்படை தத்துவம். தான் சம்பாதித்தது மட்டுமின்றி, அணி அதிபர்களும், உறவினர்களும், நண்பர்களும், அதிகார வர்க்கத்தினரும், ஆளும்கட்சியினரும் சம்பாதிக்க வழிவகுத்துக் கொடுத்தார் மோடி. அதனால் ஒருவரும் வாய் திறக்கவில்லை.

இப்போது இந்த விவகாரம் வெளியில் வந்தது கூட, யாருக்கு எவ்வளவு என்ற மோதல் எழுந்ததால் தான். தன் மூன்றாவது தோழிக்காக சசி தரூர் சண்டை பிடிக்க, லலித் மோடி முரண்டு பிடிக்க, கத்திரிக்காய் முற்றி கடைக்கு வந்துவிட்டது.'பிப்டி பிப்டி' என்பது வர்த்தகர்களின் வார்த்தை. அவர்கள் அணி திரண்டு அமைத்தது தான் ஐ.பி.எல்., என்பதால், இந்த விளையாட்டுக்கும், 'டுவென்டி டுவென்டி' என்றே பெயர் வைத்தனர் போலும்.

அணிகளின் அதிபர் பட்டியலைப் பாருங்கள். ரிலையன்ஸ் அம்பானி, விஜய் மல்லையா, இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், ஷாரூக் கான், பிரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி... அத்தனை பேரும் நம்பர் ஒன் கோடீஸ்வரர்கள். அல்லது, அந்த இடத்தை அடையத் துடிப்பவர்கள்.அப்போதே இது, விளையாட்டு என்ற அந்தஸ்தை இழந்து, வர்த்தகமாக பரிணமித்துவிட்டது. வியாபாரம் என்றால், லாபம் - நஷ்டம் தான் அளவீடே தவிர, வெற்றி - தோல்வி அல்ல.

போதாத குறைக்கு, அரசியல்வாதிகளின் நேரடி, மறைமுகத் தலையீடு வேறு. சரத் பவார், பிரபுல் படேல், சசி தரூர், லாலு பிரசாத், நிதிஷ் குமார், நரேந்திர மோடி என மத்திய, மாநில கிரிக்கெட் வாரியங்களின் அரசியல்வாதிகளின் நேரடி அல்லது மறைமுகப் பங்களிப்பு இருக்கிறது. இவர்கள் எல்லாம் சேர்ந்தால், விளையாட்டு வினையாகாமல் வேறு என்ன செய்யும்?இன்னொரு கிசுகிசுவும் ஓடிக்கொண்டிருக்கிறது. 'இந்திய கிரிக்கெட் வாரியமே சரத் பவாரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அவருடைய தீவிர ஆதரவாளர் லலித் மோடி. பவார், தேசியவாத காங்கிரஸ்காரர். தரூர், காங்கிரஸ்காரர்.

தரூரை காவு வாங்கிவிட்டார் பவார். ஏற்கனவே ஏகப்பட்ட குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் பவாரின் பவரைப் பிடுங்க இதுவே தருணம் என நினைத்த காங்கிரஸ், புழக்கடை வழியாகப் பாய்கிறது' என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.'அதற்காகத் தான் லலித் மோடிக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது; அடுத்ததாக, மத்திய அமைச்சர் பிரபுல் படேல் சிக்கவைக்கப்படுகிறார்' என்கின்றனர் அவர்கள். இன்னும் என்னென்ன ரகசியங்கள் எல்லாம் வெளிவரப் போகின்றனவோ!

இவற்றுக்கெல்லாம் தீர்வென்ன?:மோடியை பதவி நீக்கிவிடலாமா? நீக்கலாம்; நீக்காமலும் போகலாம். அது, மோடியின் பையில் எவ்வளவு சரக்கு இருக்கிறது; அது வெளியில் வந்தால் யார் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதைப் பொறுத்தது. ஒருவேளை மோடி தொடராவிட்டாலும், மோசடி தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

கிரிக்கெட் வாரியத்தை தேசிய மயமாக்கிவிடலாமா? எனக்கு அதில் உடன்பாடில்லை. உடனடியாக, 'அதிலும் இடஒதுக்கீடு வேண்டும்' என போர்க்கொடி தூக்கிவிடுவர். தலித்களுக்கு ஐந்து, பிற்படுத்தப்பட்டோர் மூன்று, இதர பிற்படுத்தப்பட்டோர் இரண்டு; பழங்குடியினருக்கு ஒன்று; மற்றவர்கள் எல்லாம், 'சப்ஸ்டிட்யூட்'கள்.

வர்த்தகர்களாவது இரண்டு அணிகளை, நேரடியாக மோதவிட்டு கல்லா கட்டுகின்றனர். காளை மாட்டில் பால் கறக்கும் அரசியல்வாதிகளின் கையில் போய்விட்டால், 'வீடியோ கேம்சி'லேயே வசூலைப் போட்டுவிடுவர். அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பை வழங்கலாகாது.

வீரர்களுக்கும், அணி அதிபர்களுக்கும், ஐ.பி.எல்.,லுக்கும், கிரிக்கெட் வாரியத்துக்கும் கடுமையான வரி விதிக்க வேண்டும். அவர்களது வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை கிராமப்புற விளையாட்டு மேம்பாட்டுக்கு வழங்க வேண்டும். வாரியத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும். தேர்தல் கமிஷன் போல, சுதந்திரமான அமைப்பின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். வாரியத்தின் அத்தனை முடிவுகளும், அந்தக் கமிஷனின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.இதெல்லாம் நடந்தால், ஒழுங்கான கிரிக்கெட் ஓரளவு சாத்தியம்.

ஆர்.ரங்கராஜ் பாண்டே

- பத்திரிகையாளர் -

Friday, April 16, 2010

வேடிக்கை!!!

உங்கள் சினேகிதனை ஏதவது ஒரு புஸ்தகத்தை எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள் . அதில் ஏதாவது ஒரு பக்கத்தை எடுத்துக்கொண்டு , அதில் முதல் ஒன்பது வரிகளுக்குள் ஒரு வரியை எடுத்துக்கொள்ளச் சொல்லுங்கள் . அந்த வரியில் முதல் ஒன்பது வார்த்தைகளுக்குள் ஒரு வார்த்தை எடுத்துக்கொள்ளச் சொல்லுங்கள் . இப்பொழுது உங்கள் நண்பனை ஒரு காகிதமும் பென்சிலும் எடுத்துக்கொண்டு , இந்தக் கணக்கைப் போடச் சொல்லுங்கள் .

அவன் எந்தப் பக்கம் எடுத்துக் கொண்டானோ அந்தப் பக்கத்தின் எண்ணைப் பத்தால் பெருக்கவும் . அத்துடன் 25 - ஐக் கூட்டவும் . அதோடு , எந்த வரி எடுத்துக் கொண்டானோ அந்தவரியின் எண்ணையும் கூட்டிக்கொள்ளவும் . வந்ததொகையைப் பத்தால் பெருக்கி , அத்துடன் எந்த வார்த்தை எடுத்துக் கொண்டானோ , அந்த வார்த்தையின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொள்ள வேண்டியது . கடைசியில் கிடைத்த விடையைச் சொன்னால் , அவன் எந்த வார்த்தையை எடுத்துக் கொண்டான் என்று நீங்கள் சொல்லிவிடலாம் .

உதாரணமாக , விடை 2124 வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் . இதிலிருந்து 250 ஐக் கழிக்க வேண்டும் . 1874 வருகிறதா ? இந்த விடையின் கடைசி எண்தான் ( அதாவது 4 ) வார்த்தையின் எண்ணிக்கை . அடுத்த எண் ( அதாவது 7 ) வரியின் எண்ணிக்கை . பாக்கி இருக்கும் 18 - தான் பக்க எண்ணிக்கை . ஆக , அவன் என்ன வார்த்தை எடுத்துக்கொண்டான் என்று சொல்லிவிடலாம்தானே ?

--- காலப்பெட்டகம் . 1938 . ஆனந்தவிகடன் . 14 - 10 - 2009 .

அசத்தல் ஐடியா !

* துளசி இலையைச் சிறிது எடுத்து ஒரு மெல்லிய துணியில் சிறு மூட்டையாகக் கட்டி ஸ்டவ்விற்குள் போட்டு வைத்தால் , மண்ணெண்ணெய் விரைவில் தீராது !

* கோடைக் காலத்தில் கோழி முட்டைகள் விரைவில் கெட்டு விடும் என்பதால் வேப்பிலைக்குள் முட்டைகளை போட்டு வைத்தால் அதிக நாள் கெட்டுப் போகாமல் இருக்கும் .

* நிறம் மங்கி டல்லடிக்கும் சப்பாத்தி குழவிகளை அதிக கனமில்லாத உப்புத்தாள் கொண்டு தேய்த்து தண்ணீரில் கழுவி வைத்தால் , புதிது போல் ஆகிவிடும் .

* மோதிரம் , மிஞ்சி போன்றவற்றைக் கழற்ற முடியவில்லையா ? சிறிது ஐஸ் கட்டியை விரல் மீது வைத்து பின் கழற்றினால் உடனே ஈஸியாக கழன்றுவிடும் .

* கண்ணாடி வளையல் நீண்டநாள் வர வேண்டுமானால் கைகளில் மாட்டுவதற்கு சற்று முன்பு சிறிது நீரில் கொதிக்க வைத்து பின் அணிந்தால் உடையாமல் பல நாட்கள்

உழைக்கும் !

* மீன் துண்டுகளை எண்ணெயில் வறுக்கும்போது , அசைவம் சாப்பிடாத அக்கம்பக்கத்தவர் இருந்தால் அவர்களுக்கு கஷ்டமாக இருக்கலாம் . இதைத் தவிர்க்க , மீன் பொறிக்கும் போது அடுப்பின் அருகில் ஒரு பெரிய மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள் . மீன் வாடை அடிக்காது .

* கற்பூரத்தை எவ்வளவு டைட்டான டப்பாவில் போட்டு வைத்தாலும் கூட சில நாட்கள் கழித்து கரைந்துவிடும் . கற்பூரம் கரையாமல் இருக்க , டப்பாவில் கொஞ்சம் அரிசியை போட்டு வைத்தால்

போதும் . கற்பூரம் கரையவே கரையாது .

* பிஸ்கட்டுகளை என்னதான் டைட்டான டப்பாக்களில் போட்டு வைத்தாலும் அது இரண்டு , மூன்று நாட்களில் நமுத்துப் போய்விடும் . இதைத் தடுக்க , பிஸ்கட் வைக்கும் டப்பாக்களில் கொஞ்சம் சர்க்கரையைத் தூவி விட்டு பிறகு அழுத்தி மூடிவிட்டால் போதும் , ஒரு வாரம் கழித்து திறந்து பார்த்தால்கூட , பிஸ்கட் மொறுமொறுவென்று புத்தம் புதிதாய் இருக்கும் .

* சிக்கன் வாங்கி அதை கட் பண்ணும்போது வாடை அதிகமாக இருக்கும் . எனவே , வாடை குறைய வேண்டுமென்றால் , சிக்கன் மீது கொஞ்சம் மஞ்சள் தூளை தூவி விட்டு , பத்து நிமிடம் கழித்து கட் பண்ணினால் வாடை ஓரளவு குறைந்திருக்கும்

சோர்வில்லாமல் காலையில் எழணுமா ?

திபேத்திய புத்த பிட்சுக்கள் பின்பற்றும் ஒரு மகத்தான ரகசிய வழி . திபேத்தில் புத்தபிட்சுக்கள் நம்மைப்போல் காலையில் அரக்கப்பரக்க எழுந்திருப்பதில்லை . மாறாக , படுக்கையில் படுத்துக் கொண்டே சில உடற்பயிற்சிகளைச் செய்கிறார்கள் . இதனால் உடலின் அசதியும் சோர்வும் போவதோடு , உடல் முழுக்க சக்தி ஒரே சீராகப் பரவுகிறதாம் . இது காலையில் புத்துணர்ச்சியையும் , சுறுசுறுப்பையும் கொடுக்கிறதாம் . இதில் நல்லதொரு விஷயம் என்னவென்றால் , இந்தப் பயிற்ச்சிகளை கண்களை மூடிக்கொண்டு , படுக்கையில் படுத்தவாறே செய்யலாம் .

ஸ்டெப் - 1 . முதலில் கண்களை மூடிக்கொண்டே , காதுகளை உங்கள் கைகளால் அழுத்திக் கொண்டு , உள்ளங்கைகளை மேலும் கீழுமாக 20 தடவைகள் அசைக்கவும் .

பயன்கள் : இது முகத்திற்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுப்பதோடு , ஈறுகளை வலுவடையவும் செய்யும் . நெற்றிப் பொட்டில் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும் .

ஸ்டெப் - 2 . வலது கையை முன் நெற்றியில் வைத்து அதன் மேல் இடது கையை வைக்கவும் . பிறகு இந்த் நிலையில் கைகளை மேலும் கீழுமாக 20 தடவை அசைக்கவும் .

பயன்கள் : இது காலைய்ல் தலைவலி வராமல் தடுப்பதோடு எழுந்தவுடன் , சில சமயம் இருக்கும் தலைச் சுற்றலையும் போக்கிவிடும் .

ஸ்டெப் - 3 . கண்களுக்கு வாருங்கள் . இரண்டு கட்டை விரல்களை நடக்கிக் கொண்டு இறகால் தடவுவதுபோல் மென்மையாக கணகள் இரண்டையும் , 15 முதல் 20 தடவைகள் மசாஜ் செய்யவும் .

பயன்கள் : இது நரம்பு மண்டலம் சரியாக வேலை செய்ய உதவுவதோடு , கண் பார்வை தீர்க்கமாக இருக்கவும் உதவி செய்கிறது .

ஸ்டெப் - 4 . வயிற்றுப் பகுதிக்கு வாருங்கள் . உள்ளங்கைகளை வயிற்றின் மேல் வைத்துக் கொண்டு முழ்ங்கால்களை சற்று மடக்கிக் கொள்ளவும் . பிறகு மெல்ல வயிற்றுப் பகுதியை உள்லங்கைகளால் , 30 - 50 தடவைகள் வரை மசாஜ் செய்யவும் ( Clockwise ) .

பயன்கள் : வயிற்றுத் தசைகளை இது பலப்படுத்துவதோடு , கணையத்தையும் சுறுசுறுப்பாக்குகிறது . கல்லீரலுக்கும் நல்ல பயிற்சி இது . காலையில் சில சமயங்கள் ஏற்படும் வயிற்றுப் புரட்டலையும் போக்கும் . முக்கியமாக பெருங்குடலின் அசைவுகலை சீராக்குகிறது .

ஸ்டெப் - 5 . 20 தடவைகள் வயிற்றை வெளியே தள்ளி , உள்ளே இழுக்கவும் .

பயன்கள் : இதனால் சிறு நீரகங்கள் , கல்லீரல் , ஜீரண உறுப்புகள் பயனடைகின்றன . மேலும் வயிற்றுப் பகுதியில் அதிகமாக இருக்கும் கொழுப்புச் சத்து கரையவும் இந்தப் பயிற்சி உதவுகிறது .

ஸ்டெப் - 6 . படுத்த நிலையிலேயே முழ்ங்கால்களை கைகலால் கட்டிக்கொண்டு அவற்றை மார்புக்கு மேலே கொண்டு வரவும் .

பயன் : இது வயிறு , இதயம் போன்ற உறுப்புகளின் உள்ளே இருக்கும் தசைகளுக்கு நல்லதொரு மசாஜ் .

ஸ்டெப் - 7 . இப்போது மெல்லக் கண்களைத் திறந்து , எழுந்து உட்காரவும் . உட்கார்ந்தவாறே , குனிந்து பாதங்களையும் , உள்ளங்கால்களையும் இரு கைகளால் மசாஜ் சய்யவும் .

பயன் : முதுகுத் தண்டுக்கு நல்ல பயிற்சி இது .

--- இந்திரா வெங்கடராமன் , ஹைதராபாத் . குமுதம் சினேகிதி . ஆகஸ்ட் 1 - 15 , 2009 .

தெரிந்து கொள்வோம்...

* இந்தியாவிலேயே முதல் பெண்கள் பள்ளிக்கூடம் 1707 - ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியில் தொடங்கப்பட்டது .

* கத்தரிக்கோலைக் கண்டுபிடித்தவர் , மோனலிசா ஓவியத்தை வரைந்த லியோனார்டோ டாவின்சிதான் .

* ஜன கண மன முதன் முதலில் பாடப்பட்ட நாள் 1911 - ம் ஆண்டு டிசம்பர் 27 ( கல்கத்தாவில் ) .

* ஜன கண மன தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு 1950 ஜனவரி 24 .

* எந்தப் பத்திரிகையும் வெளி வராத இந்திய பகுதிகள் அருணாசலப் பிரதேசம் , லட்சத்தீவு .

*சைலண்ட் கில்லர் எனப்படும் நோய் - ரத்த அழுத்த நோய் .

* நமது உடலில் மிகப்பெரிய உறுப்பு - கணையம் .

* பற்களை பாதிக்கும் நோய் - கேரிஸ் .

* புரோட்டீனின் முக்கிய பொருள் - அமினோஆசிட் .

* மிகச்சிறந்த ஞாபகசக்தி ' பாராமென்சியா ' என அழைக்கப்படுகிறது .

* மருத்துவ அறிவியலின் தந்தை - ஹிப்போகிரேடஸ் .

* மலேரியா என்பதன் பொருள் - சுத்தமற்ற காற்று .

--- தினத்தந்தி , 04 - 07 - 2009 .

உங்களுக்குத் தெரியுமா ? வைரமுத்து !

உங்களுக்குத் தெரியுமா ?

உங்களுக்கு ஒன்று தெரியுமா ? மாவீரன் நெப்போலியன் , ஜூலியஸ் சீஸர் , ஹனிபால் , பதினான்காம் லூயி ... இன்னும் பல மாவீரர்கள் எல்லாம் பிறக்கும்போதே பற்களுடன் பிறந்தவர்கள் .

--- ஆனந்தவிகடன் . 26 . 09. 1999 .

வைரமுத்து !

கள்ளிக்காட்டு இதிகாசத்தின் 5 பிரதிகளை வாட்டர் ஃப்ரூப் செய்து வைகை அணை நீரில் வீசி எறிந்திருக்கிறார் வைரமுத்து . நாளை அணையே தூர்ந்துபோனாலும் , அந்த மண்ணின் ஆவணமாக அது இருக்குமாம் .

பச்சையப்பன் கல்லூரி மாணவராக இருந்தபோது வெளியிட்ட ' வைகறை மேகங்கள் ' என்ற முதல் கவிதைத் தொகுதி , இவர் மாணவராக இருந்தபோதே ஒரு மகளிர் கல்லூரியில் பாடமாக இருக்கும் பெருமை பெற்றதாம் . இப்போது விற்பனையாகிக்கொண்டு இருப்பது வைகறை மேகங்களின் 29 -ம் பதிப்பு .

' அமெரிக்கன் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் ' இவரது கவிதைகளை , இவரது குரலில் ஒலிப்பதிவு செய்து , உலக இலக்கிய ஆவணங்களில் ஒன்றாக வாஷிங்க்டன் டி. சி- யில் பாதுகாத்து வருகிறது .

கனடா நாட்டு அரசாங்கத்தோடு இணைந்து ஒரு தமிழ் அமைப்பு , இவர் உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது . இவரது அஞ்சல் தலை ஒட்டப்பட்டு , இவருக்கு வந்த தபாலை இவரே பிரித்தார் .

--- ஆனந்தவிகடன் , 18 . 11 . 2009 .

Tuesday, April 13, 2010

நெஞ்சே நெஞ்சே - அயன் படப்பாடல்...

விழி மூடி யோசித்தால் - அயன் படப்பாடல்...

Wednesday, April 7, 2010

அரைக்கீரை தொக்கு...

தேவையானப் பொருட்கள்:


அரைக்கீரை - 2 கட்டு
சிறிய வெங்காயம் - 20
பூண்டு - 10 பற்கள்
புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
வெல்லம் - சிறிய கட்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கீரையை நன்கு சுத்தம் செய்து நறுக்கி பின் வாணலியில் சிறிது எண்ணெயை ஊற்றி சிறிய வெங்காயம், பூண்டு சேர்த்து பின்பு கீரையை சேர்த்து நன்கு வதக்கிப் புளி சேர்த்து மிக்ஸியில் வீழுதாக அரைத்து அடுப்பில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் கடுகு சேர்த்து வெடித்த பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு சுருள வதக்கி தேவையான உப்பு சேர்த்து வெல்லம், மிளகாய் தூள் 2 டீஸ்பூன், வெந்தயம், பெருக்காயம் 1/2 டீஸ்பூன் சேர்த்து நன்கு வதங்கி எண்ணெய் மேலே வந்த பின் இறக்கி ஆற வைத்து பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

கறிவேப்பிலைத் தொக்கு...


தேவையானப் பொருட்கள்:

கறிவேப்பிலை - 100 கிராம்
புதினா - 100 கிராம்
மல்லி இலை - 100 கிராம்
பூண்டு - 20 பற்கள்
சிறிய வெங்காயம் - 20
இஞ்சி - 10 கிராம்
பிரண்டை - 10 கிராம்
பச்சை மிளகாய் - 50 கிராம்
புளி - 50 கிராம்
வெல்லம் - 20 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முரை:

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைப்போட்டுவதக்கி, பூண்டு, இஞ்சி, பிரண்டை, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, புதினா, மல்லி, புளி போட்டு நன்கு வதக்கி, ஆறியபின் உப்பு சேர்த்து, மிக்ஸியில் நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து கடுகு போட்டு வெடித்த பின், மஞ்சத்தூள் 1 டீஸ்பூன் சேர்த்து, அரைத்த விழுதைச் சேர்த்து, கை விடாமல் கிளறி வெல்ல்ம்ச் சேர்த்து, உப்பு, வெந்தயம்ப்பொடி போட்டு, நன்கு சுருள வதக்கி, ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். சுவையான கறிவேப்பிலைத் தொக்கு தயார். இது உடலுக்கு மிகவும் நல்லது.

பூண்டு தொக்கு...

தேவையானவை:

பூண்டு-1/2 கிலோ,
புதியப்புளி-1/4 கிலோ,
மிளகாய்தூள்-200கிராம்,
உப்பு தேவையானது,
வறுத்த வெந்தயம், பெருங்காயம்- 1/4 ஸ்பூன்,
வெல்லம்- சிறியகட்டி,
எண்ணெய் தேவையானது,

செய்முறை:

பூண்டை தோல் நீக்கி பாதியை, சுத்தபடுத்திய புளியுடன்,உப்பும் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். அடுப்பில் எண்ணெய் கொஞ்சம் ஊற்றி காய்ந்த பின் கடுகை போட்டு வெடித்தபின் 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து பூண்டை போட்டு வதக்கவும். சிறிது நேரம் கழித்து அரைத்த விழுதை போட்டு நன்கு சுருள வதக்கவும். நன்கு வதங்கிய பின் மிளகாய்தூள், வெந்தயபொடி, பெருங்காயதூள், வெல்லம், சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து மேலே வரும் சமயம் இறக்கி ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைக்கவும். புளிப்பும், காரமுமாக இந்த தொக்கு லேசான தித்திப்பு சுவையுடன் சூப்பராக இருக்கும்.

ருசியான சமையலுக்கு சில குறிப்புகள்...

சமையல் ருசியாக இருக்க, செய்யும் குழம்பு, பொரியல், கூட்டு, கிரேவி,சட்னி,எதுவாக இருந்தாலும் செய்யும் அளவுக்கு தகுந்த படி மற்ற பொருள்களை சேர்க்க வேண்டும். அதிகமாக போனாலோ, குறைவாக இருந்தாலோ அதன் ருசி மாறிப் போகும். எல்லாவற்றுக்கும் இஞ்சிம் பூண்டு சேர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. மசாலா பொருட்கள் பிடிக்காதவர்கள் அதை சேர்க்காமலே ருசியாக செய்யலாம். சமையல் ஒன்றும் பெரிய விஷயமிலை. செய்ய தெரியாதவர்கள் கூட பயப்படாமல் தைரியமாக செய்தால் சமையல் ரொம்ப ஈஸி தான். செய்ய, செய்யதான் சமையல் வரும்.

அடுப்பை எரியவிடும்போது அதில் வைத்து சமைக்கும் பாத்திரத்திற்க்கு மேல் தீ எரிய கூடாது.தீ அதிகமானால் செய்யும் பொருட்கள் வேஸ்ட் ஆகிபோய்விடும்.ரொம்ப சிறியதாக எரிந்தாலும் சீக்கிரம் வேகாது.

செய்யும் பதார்த்தங்களை பொருத்து அடுப்பு மிதமாக எரிய வேண்டும்.

குக்கரில் காய்கள் வேகவைப்பதாக இருந்தால் மிதமாக எரியவிட்டு விசில் வரும்முன்பு [ அதாவது 1 நிமிடம்] காய்களின் அளவுகளை பொருத்து அடுப்பை அணைத்துவிட்டால் அதன் சூட்டிலேயே வெந்துவிடும்.

கீரைகள் செய்யும்போது கீரைகளை நன்கு கழுவி, பிழிந்து தேவையான வெந்தபருப்புடன், பச்சைமிளகாய்,வெங்காய், [தக்காளிபோடுவதாக இருந்தால்] கலந்து 1நிமிடம் விசில் வராமல் அடுப்பை அணைத்துவிட்டு திறந்தால் அதன் பச்சைகலரும் மாறாது. சத்தும் அப்படியே இருக்கும். சீக்கிரமே வெந்து இருக்கும்.

சாம்பாருக்கு சேர்க்கும் காய்களையும் பருப்பு தண்ணீரில் கொஞ்சம் உப்பு போட்டு சிறிய குக்கர் [அ] ஃப்ரஷர் பேனில் வைத்தாலும் ஹையில் வைத்து விசில் வரும் முன்பே [1நிமிடம் போதும் ] அணைத்து விட்டால் வெந்துவிடும்.

குறைவான நபர்கள் இருக்கும் வீட்டில் மசாலா பொருட்களை கொஞ்சமாக போடனும். அதிகமானால் கசக்கும். ருசியும் மாறி போகும்.பூண்டு வாசனை பிடிக்காதவர்கள் சேர்க்காமலேயே செய்யலாம். ருசி வரும்.

கொஞ்சம் பொறுமையாகவும், யோசனையுடனும் சமையல் செய்தால் நம் வீட்டு சமையல் ஹோட்டல் சமையலைவிட சூப்பராக வரும். எதுவுமே நம் கையில்தான் இருக்கு. போடும் அளவு, செய்யும் முறை, பக்குவம் இதுதான் சமையல் ரகசியம்.

உப்பு எப்போதுமே குறைவாக போட்டு பின் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம். அதிகமானால் அதற்கு எதையாவது கலந்தால் அதன் ஒரிஜனல் தன்மை போய் விடும். கொஞ்ச நாளில் சமையல் செய்ய அதுவும் சரியாகிபோகும். எந்த சமையல் செய்தாலும் அதுக்கு என்ன பொருட்கள் சேர்க்கவேண்டுமோ அதை மறக்காமல் சேர்த்தால் எல்லார் வீட்டு சமையலும் சூப்பர்தான்.

Thursday, April 1, 2010

பிக் பேங் சோதனை : புரோட்டான் கதிர்கள் சாதனை வேகத்தில் மோதல்

பிரப‌ஞ்ச‌‌ம் தோ‌ன்‌றிய ரக‌சிய‌த்தை‌க் க‌ண்டு‌பிடி‌க்கு‌ம் முய‌ற்‌சி‌யாக ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் உருவா‌க்‌கியு‌ள்ள '‌பி‌க்-பே‌ங்' சோதனை சாலையில், உலகளவில் இதுவரை இல்லாத வகையில் புரோட்டான் கதிர்களை அதிவேகமாக விஞ்ஞானிகள் மோதச் செய்துள்ளனர்.

இதுவரை அதிவேகம் எனக் கருதப்பட்ட வேகத்தை விட இன்று விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் 3 மடங்கு வேகமாக புரோட்டான் கதிர்கள் நேரெதிரே மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‌பி‌‌க்-பே‌ங் ஆ‌ய்வு: சுமா‌ர் 14 ‌பி‌ல்‌லிய‌ன் (ஒரு பில்லியன்=100 கோடி) ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்னா‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌மிக‌ப்பெ‌ரிய அணு‌மோதலினால் ஏற்பட்ட பெருவெடிப்பின் விளைவாகவே ‌பிரப‌ஞ்ச‌ம் தோ‌ன்‌‌றியது எ‌ன்ற ‌பி‌க்-பே‌ங் (பெரு வெடி‌ப்பு) கோ‌ட்பாடே இ‌ன்றளவு‌ம் ந‌ம்ப‌ப்ப‌ட்டு வரு‌கிறது. பூ‌மி உருவா‌கி அதில் உ‌யி‌ர்க‌ள் தோ‌ன்றவு‌ம் இதுவே காரண‌ம் எ‌ன்று கருத‌ப்படு‌கிறது.

இ‌ந்‌நிலை‌யி‌‌ல் ‌பிரப‌ஞ்ச‌ம் தோ‌ன்‌றிய போது உருவான அணு மோதலை செயற்கையாக உருவா‌க்‌கி, அத‌ன் மூல‌ம் ‌பிரப‌ஞ்ச‌ம் தோ‌ன்‌றிய ரக‌சிய‌‌த்தை‌க் க‌ண்ட‌றிய 80க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட நாடுகளை‌ச் சே‌ர்‌ந்த பல ஆயிரம் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளு‌ம், பொ‌றியாள‌ர்களு‌ம் பல ஆண்டுகளாக முய‌ற்‌சி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.

சுமார் 5.95 பில்லியன் டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு தற்போது 10 பில்லியன் டாலர் என்ற அளவை நெருங்கியுள்ளது. இந்த ஆய்வுக்காக ‌பிரா‌ன்‌ஸ்-சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து எ‌ல்லை‌யி‌ல் பூ‌மி‌க்கு அடி‌யி‌ல் 100 ‌மீட்டர் ஆழ‌த்‌தி‌ல் 27 ‌‌கி.‌மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையை அமைத்து, அதில் பி‌ங்-பே‌ங் சோதனை‌யை கடந்த 2008 செப்டம்பரில் துவக்கினர்.

சுரங்கத்தின் 2 இடங்களில் இரு‌ந்து புரோ‌ட்டா‌ன் கதிர்களை செலு‌‌த்‌தி நேரு‌க்கு நே‌ர் மோத‌வி‌ட்டு, அ‌‌ப்போது உருவாகு‌ம் மா‌ற்ற‌ங்களை ஆ‌யிர‌க்கண‌க்கான கரு‌விக‌ள் மூல‌‌ம் ஆ‌ய்வு செ‌ய்து ‌பிரப‌‌ஞ்ச‌ம் தோ‌ன்‌றிய ரக‌சிய‌த்தை‌க் க‌ண்டு‌பிடி‌க்க விஞ்ஞானிகள் ‌திட்டமிட்டனர்.

இதற்காக உருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடர் (Large Hadron Collider-LHC) இயந்திரத்தில் இன்று 7 டிரில்லியன் எலக்ட்ரான் வோல்ட் அளவில் புரோட்டான் கதிர்களை மோதச் செய்தனர்.

முன்னதாக புரோட்டான் கதிர்களை மோதச் செய்யும் பணியில் கோளாறு ஏற்பட்டதால் விஞ்ஞானிகள் சில மணி நேரம் தவித்தனர். எனினும், கோளாறுகளை சீரமைத்து அடுத்த சில மணி நேரத்திலேயே மீண்டும் புரோட்டான் கதிர்களை அதிவேகத்தில் மோதச் செய்து விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008இல் நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில் 2.36 டிரில்லியன் எலக்ட்ரான் வோல்ட் வேகத்திலேயே புரோட்டான் கதிர்கள் மோதல் நடைபெற்றது.

வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ?

மலையாள சமூக நல அமைப்பிடமிருந்து ஒரு செய்தி வருகிறது, அதாவது தமிழகத்தைச் சார்ந்த ஒருவர் துபாயிலுள்ள பிரபல அரசு மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லாத நிலையில் நீண்ட நாட்களாக உள்ளார், அவரை தாயகத்திற்கு அனுப்ப வேண்டும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நோயாளியினுடைய நிலையைத் தெரிந்துக் கொள்ள மருத்துவமனையில் அவரது வார்டில் சென்று விசாரிக்கும்போது அவர் பெயர் ராஜகோபால் எனவும், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மருத்துவமனையில் இருக்கிறார் எனவும், தெரிய வந்தது.

யாரும் வந்து பார்க்கவுமில்லை: மாரடைப்பு என யாரோ இங்கே சேர்த்துவிட்டு சென்றிருக்கிறார்கள் எனவும், இப்போது மாரடைப்பு சரியாகிவிட்டது ஆனால் அவரது மன நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது, அதன் பின் ஒரு கை, ஒரு கால் செயலிழந்துவிட்டது என்று தகவலும் கிடைத்தது. அவரை சென்று பார்த்தோம், அவர் உறங்கிக் கொண்டிருந்தார், மீண்டும் ஒருநாள் முயற்சி செய்து அவர் விழித்திருக்கும் போது சென்று அவரிடம் பேசியபோது அவருக்கு மன நிலை பாதிக்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிந்தது. ஒரு சில விஷயங்களைத் தெளிவாக பேசினாலும் பல விஷயங்களில் முன்னுக்குப் பின் முரணாகவும், தவறாகவும் பேசுகிறார். உதாரணத்திற்கு, தான் தினந்தோறும் இரவு நேரங்களில் துபாயிலுள்ள வீட்டுக்கு சென்று விடுவதாகவும், பகல் நேரங்களில் மருத்துவமனைக்கு வந்துவிடுவதாகவும் சொல்கிறார். ஆனால் விசாரணையின் போது நம்முடன் இருந்த நர்சு அவர் மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து யாரும் வந்து பார்க்கவுமில்லை, இதுவரை மருத்துவமனையை விட்டு இவர் சென்றதுமில்லை எனக் கூறினார்.

நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது என்கிறார் : அவரிடம் பல விஷயங்களைப் பற்றி பேசி அவரைப் பற்றிய விபரங்களைத் தெரிந்துக் கொள்ள முயற்சி செய்யும் போது ஏதாவது தொடர்பு எண் அவருக்கு நினைவுக்கு வருகிறதா என சோதிக்கும் போது துபாயிலுள்ள ஒரு லோக்கல் நம்பரைச் சொன்னார் அதை ஆர்வமாக டையல் செய்துப் பார்த்தால் அந்த எண் தவறாக இருந்தது. ஊரில் ஏதாவது எண் நினைவில் இருக்கிறதா என கேட்கும் போது கொஞ்ச நேரம் யோசித்து ஒரு நம்பரைச் சொன்னார் அதை நம்பிக்கையில்லாமல் டையல் செய்யும்போது அது ரிங் ஆனது, அதில் அவரது மகள் வசுமதி பேசினார்.

இவரைப் பற்றி சொல்லும்போது நிதானமாக கேட்டுவிட்டு அவருடன் கடந்த 25 வருட காலமாக தொடர்பில் இல்லை எனவும், ஆகையால் நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது எனவும் கூறிவிட்டார். மேலும், தனது தம்பி சுந்தரிடம் பேசுங்கள் என சொல்லி ஒரு நம்பரைத் தந்தார். சுந்தரைத் தொடர்புக் கொள்ளும்போது அவரும் கடந்த 25 வருட காலமாக எங்களுக்குள் எந்தவித தொடர்புமில்லை எனக் கூறினார். அதனைத் தொடந்து சுந்தர் சொன்ன விஷயங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. துபாய்க்கு டிரைவராக வந்து, பிறகு சொந்தமாக 3க்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்து தொழில் செய்து செல்வச் செழிப்போடு இருந்த ராஜகோபால், தன் வாழ்க்கையில் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்திருக்கிறார். நன்றாக இருந்த காலத்தில் தந்தையாக இருந்து செய்யவேண்டிய எந்த கடமையையும் ராஜகோபால் செய்யவில்லையெனவும், அவசர தேவைக்குக் கூட பண உதவி செய்ததில்லை எனவும் வேதனையோடு சுந்தர் கூறினார்.

முதல் மனைவியைத் திருமணம் செய்து சிறிது நாட்களில் விட்டுவிட்டு இரண்டாவது மனைவியைத் திருமணம் செய்திருக்கிறார். அதன் பின் கிருத்துவ மதத்தைச் சார்ந்த ஒரு பெண்ணை கோயம்புத்தூரில் திருமணம் செய்திருக்கிறார். அதன் பின் கடைசியாக துபாயில் ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார், முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்யும் போது ராஜகோபாலும் முஸ்லிமாக மாறியிருப்பதாகவும் சுந்தர் கூறினார். மேலும், ராஜகோபால் கடைசியாக அதிகமாக தொடர்பில் இருந்தது திருச்சியிலுள்ள இரண்டாவது மனைவியிடத்தில்தான் எனவும், சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் இரண்டாவது மனைவியின் பேரில்தான்; உள்ளது எனவும், அவர்கள்தான் அவரை கவனிக்க வேண்டுமெனவும் கூறி முடித்துக் கொண்டார்.

திருச்சியிலுள்ள இரண்டாவது மனைவியின் தொடர்பு எண்ணை சுந்தரிடமிருந்து வாங்கி அவரிடம் பேசும் போது சம்பாதித்து எங்களுக்கு தந்தது உண்மைதான் ஆனால் இந்த வீட்டைத் தவிர எந்த சொத்துமில்லை அவருக்கு மருத்துவ செலவு பார்க்க, கவனிக்க எங்களால் முடியாது எனக் கூறிவிட்டார். ஆகையால் இப்போது தாயகத்திற்கு அனுப்பினாலும் அவரை ஏற்பதற்கு யாரும் தயாரில்லை.

கோயம்பத்தூரில் திருமணம் செய்த மனைவியைப் பற்றியும், துபாயில் வைத்து திருமணம் செய்த மனைவியைப் பற்றியும் எந்த தகவலும் இல்லை. நான்கு மனைவிகள், 12க்கும் மேற்பட்ட குழந்தைகள், துபாயில் செல்வச் செழிப்பான வாழ்க்கை, ஊரில் சொத்துக்கள் என அனைத்தும் இருந்தாலும் ராஜகோபாலுக்கு கை கொடுக்கவில்லை!

நெஞ்சில் காயத்தை ஏற்படுத்தியது: மனைவிகளிடத்தில் நீதமாக நடந்துக் கொள்ளாதது, பெற்ற பிள்ளைகள் மீது அக்கறை செலுத்தாதது போன்ற செயல்களால் ராஜகோபாலைப் பார்க்க யாரும் முன் வரவில்லை என புரிய முடிந்தது. வாழ்க்கையின் நோக்கம் எதுவென்றே தெரியாமல் பயணிக்கின்றவர்களுக்கு ராஜகோபால் ஒரு பாடம்.

கடைசியாக ராஜகோபாலை மருத்துவமனையில் சந்தித்துவிட்டு திரும்பும்போது அவர் சொன்ன வார்த்தைகள் கண்களை ஈரமாக்கின. என் பொண்டாட்டி, புள்ளைங்கல்லாம் தினமும் என்னை வந்து பார்த்துட்டுதான் போறாங்க, நீங்க அடிக்கடி வந்து போங்க என்று வெகுளியாக சொன்னது நெஞ்சில் காயத்தை ஏற்படுத்தியது.

- தினமலர் வாசகர் ஹுசைன் பாஷா .