அனிதா பிரேம்சாயி, குரோம்பேட்டை, சென்னையிலிருந்து அனுப்பிய, "இ-மெயில்' கடிதம்: பொருளாதார மேதைகளின் பொலிவற்ற அரசியல் உலகத்தின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பார்லிமென்ட், வெற்றிகரமாக முடக்கப்பட்டுள்ளது. "ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காரணம் உண்டு' என்பது அறிவார்ந்த பழமொழி. அந்த வகையில், இமாலய ஊழலுக்கு தீர்வு காண, பார்லிமென்ட் உறுப்பினர்களின் இச்செயல் நியாயமானதே! விஞ்ஞான பூர்வமாக நடைபெற்ற ஊழலுக்கு தீர்வு காண்பதில், ஆளுங்கட்சி ஏன் தயக்கம் காட்டுகிறது?"பணம் பாதாளம் வரை பாயும்' என்பது அந்தக் காலம். சிகரம் உயரத்திற்கு பாய்ந்து, பின்பு கடலைத் தாண்டியும் பாய்வது இந்த காலம். "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான், அன்றைய நிதியமைச்சர், "விவசாயிகளுக்கான கடன் தொகை 70 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி' என, பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தில் முழங்கினார். ஆனால், அந்த அறிவிப்பு, பெயரேடுகளில் உள்ள கணக்குகளை நேர் செய்வதற்கும், மக்களின் ஓட்டுகளை, "கவர்' செய்வதற்கும் என்று, பாமரனுக்கு தெரிய வாய்ப்பு இல்லையே. தள்ளுபடிக்கு பிறகு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி சதவீதம் பற்றி, குப்பனும், சுப்பனும் அறியவில்லையே. நடுத்தர மக்களும் திண்டாடினரே அன்றி, காரணத்தை அறியவில்லையே. தற்காலிகமாக, 40 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்தில் விடப்பட்டு சமாளிக்கப்பட்டது. இந்த மேஜிக் வேலையெல்லாம், எந்த பாமரனுக்கும் தெரியாது என்ற தைரியம் தான், அரசியல்வாதிகளை மேலும், மேலும் தவறுகளை செய்ய தூண்டுகிறது. நாளையே பார்லிமென்ட் கூட்டுக்குழுவை கூட்ட, ஆளும்கட்சி முற்படுமேயானால், கடந்த சில நாட்களாக, பார்லிமென்ட் நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க வைத்தமைக்கு முழு பொறுப்பையும் தனதாக ஏற்றுக் கொள்ளுமா அரசு? இந்த நாட்களின் வெட்டிச் செலவுகளையும், ஆளும் கட்சியே ஏற்றுக் கொள்ளுமா? இந்தியனுக்கு போதாத காலம்.
"ஹீரோ' அப்பாவியா? வ.ப.நாராயணன், மடிப்பாக்கம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, ஸ்பெக்ட்ரம் முறைகேடால், தொடர்ந்து சில நாட்களாக பார்லிமென்ட் முடங்கியது, இதுவே முதல்முறை எனலாம். இதுவரை, பங்குச் சந்தை, போபர்ஸ் பீரங்கி ஊழல், ஹவாலா ஊழல் போன்றவைகளைத் தான், பெரிய அளவிலான ஊழல் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். அந்த நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது ஸ்பெக்ட்ரம் ஊழல். ஊழல் வரிசையில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை செய்துவிட்டார் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா. மேலும், ஊழல்வாதிகளான ஹர்ஷத் மேத்தா, சத்யம் ராஜு, அசோக் சவான் ஆகியோரை தூக்கிச் சாப்பிட்டு விட்டார். காரணம், இந்திய அளவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் ஒரே நாளில், தன் புகழைப் பரப்பி, "ஸ்பெக்ட்ரம் ஹீரோ' என்ற பட்டப் பெயரையும் பெற்று விட்டார் ராஜா. இன்று, "டாக் ஆப் தி வேர்ல்ட்' இவர் தான். இந்தியாவின் பெருமையையும், புகழையும், அனைத்து நாடுகளுக்கும் எடுத்துச் சொல்லி, உலக நாடுகளின் நட்பையும், நல்லுறவையும் பெறுவதற்காக, உலகச் சுற்றுப் பயணம் செய்து, பல நாட்டுத் தலைவர்களை சந்தித்து வருகிறார் பிரதமர். அவருக்கே களங்கத்தை ஏற்படுத்தி, ஆடிப் போகச் செய்துவிட்டார் இவர். வரலாறு காணாத எதிர்க்கட்சிகள் அமளியால், திகைத்துப் போயுள்ளார் பிரதமர். மேலும், எந்த பிரதமரும் எதிர்கொள்ளாத சுப்ரீம் கோர்ட்டின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார். ஆனால், ராஜாவோ, தான் ஒரு அப்பாவி என்று சொல்லிக் கொள்கிறார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தன் பதவிக் காலம் முடிந்ததும், ஒரு லாரி நிறைய ஏற்றக்கூடிய பரிசுப் பொருட்களை அப்படியே விட்டு விட்டு, தான் கொண்டு வந்த உடைமைகளோடு மட்டுமே ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறினார். இதுபோன்ற தன்னலமற்ற தியாகச் சீலர்களால், இந்தியாவின் மதிப்பும், கவுரவமும் பன்மடங்கு உயர்ந்தது. இவர்களுக்கு மத்தியில், பதவி சுகம் ஒன்றே பெரிதாக நினைக்கும், காமன்வெல்த், ஆதர்ஷ், ஸ்பெக்ட்ரம் போன்ற ஒன்றையொன்று மிஞ்சக்கூடிய மெகா ஊழல்களைச் செய்து, இந்தியாவுக்கு களங்கம் ஏற்படுத்தும் ஊழல் அரசியல்வாதிகளை பதவி நீக்கம் செய்ததுடன், கடமை முடிந்தது என்று எண்ணாமல், தயவு தாட்சண்யமின்றி, அவர்களுக்கு கடுமையான தண்டனை தருவதற்கு ஏதுவாக, சட்டத்தின் பிடியை இறுக்க வேண்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பு.
காங்கிரசுக்கு கவனம் தேவை! சியாமளா ரங்கநாதன், மதுரவாயில், சென்னையிலிருந்து எழுதுகிறார்: கடந்த சில நாட்களாக, பார்லிமென்ட நடவடிக்கைகளை முடக்கிப் போட்டு, நாட்டையே உலுக்கிக் கொண்டிருந்த ராஜா விவகாரம், ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. தீவிரமாக ராஜாவை ஆதரித்து வந்த தி.மு.க., வேறு வழியின்றி, அவரை ராஜினாமா செய்ய வைத்துள்ளது. இலவசங்களால் தமிழகத்தை இருளில் மூழ்கச் செய்து கொண்டிருக்கும் தி.மு.க.,வின் அரசியல் நிகழ்வுக்கு, இது தலை குனிவுதான். கடந்த 2009ம் ஆண்டிலேயே, எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும், ராஜாவை, அவர் ஊழல் செய்த துறையிலேயே மீண்டும் அமர்த்தியதை எதிர்த்தன. ஆனால், தி.மு.க.,வின் சாணக்கியத்தனமும், சாமர்த்தியமும், வேறு யாராவது அந்த துறைக்கு போடப்பட்டால், செய்த ஊழல் அம்பலமாகிவிடும் என்பதால், கூட்டணி பயத்தை ஏற்படுத்தி, மீண்டும் அதே துறையை வாங்கியது. ஆனால், உண்மை என்றுமே உறங்கிவிடாது. இத்தனை நாளாக மவுனம் காத்த காங்கிரஸ் தலைமை, இப்போது இறங்கி வந்திருப்பது, நாட்டில் உள்ள நடுநிலையாளர்களுக்கு நற்செய்தியாக உள்ளது. இனிமேல் தான், காங்கிரஸ் கவனமாக இருக்க வேண்டும். இது, ராஜா என்ற தனி மனிதன் செய்த தவறல்ல; தி.மு.க., செய்த தவறு. ராஜாவுக்கு பதில், வேறு தி.மு.க., நபரை, மறுபடியும் அந்த அமைச்சர் பதவியில் அமர்த்துவது ஆபத்து. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் துணை போவது, தமிழகத்தை பொறுத்தவரை, அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். காங்கிரஸ் கவனமுடன் செயல்பட வேண்டிய நேரமிது.
நன்றி - தினமலர்.
-