Sunday, January 31, 2010

பயம் என்ற நோயை விரட்டுங்கள்...

* மனிதர்களின் குறைபாடுகளில் முக்கியமானதும், களையப்பட வேண்டியதும் அச்ச குணம் ஆகும். மனதில் பயம் இருப்பவர்களால் எந்த செயலிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடியாது. எனவே, அவர்களால் எதிலும் வெற்றி பெற முடியவதில்லை. அஞ்சாமையே ஒருவனை உயர்ந்த இடத்தில் வைக்கும். எனவே, அச்சம் எனும் நோயை விரட்ட வேண்டும்.

* நீங்கள் ஒருவருக்கு பணிந்து நடக்கும் சூழ்நிலை வந்தால், அவர்களிடமிருந்து விலகி வேண்டுமானால் இருக்கலாம். அதற்காக பயந்து ஒதுங்கிவிடக்கூடாது. உங்களது முழு வலிமை, நேர்மை மற்றும் பொறுமையை பயன்படுத்தி அச்சத்தை மனதில் இருந்து அறவே விலக்கிவிட வேண்டும். அச்சம் கொண்டுள்ளவர்களைக் கண்டால், கோழை கூட மிரட்டி விளையாடுவான். எனவே, அச்சம் தவிருங்கள்.

* மனிதர்களை களங்கப்படுத்தும் செயல்களில் எல்லாம் அச்சம் பிரதானமாக இருக்கிறது. அது, இறைவன் உங்களுக்கு கொடுத்த கடமையைக்கூட எளிதாக முடிக்க விடாமல் தடுக்கிறது. இறைவன் ஒவ்வொருவருக்கும் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் துணிச்சலையும், வலிமையையும் கொடுத்திருக்கிறார். மனதில் பயம் இருப்பவர்களுக்கு இறைவனின் அருளும் கிடைப்பதில்லை.

* பயமில்லாமல், உண்மையைக் கூறுவதால், உங்களை கடுமையாக பாதிக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பம் வரும் எனத் தெரிந்தாலும், அதற்காக கலங்கிவிடாதீர்கள். மனதில் இறைவனை எண்ணி, பயமின்றி சத்தியத்தையே பேசுங்கள். அப்போதுதான் உண்மையான வெற்றி கிடைக்கும்.
                                                                 ஸ்ரீ அன்னை.     

பயப்படுவது கடும் குற்றம்...

யாராவது ஒருவர் உங்கள் மீது கோபப்பட்டால் அவருடைய கோப அதிர்வுகளில் அகப்பட்டுக் கொள்ளாமல் விலகியே நில்லுங்கள். எவ்விதமான ஆதரவோ, பதிலோ கிடைக்காவிட்டால் கோபக்காரரின் வேகம் தணிந்து விடும். தவறு என்பது அறியாமல் செய்யும் பிழையாகும். ஆனால், தவறினால் உண்டாகும் பாடத்தை உணர்ந்து திருத்திக் கொள்வது சரியான வழிமுறையாகும். மிகவும் கடுமையான உடல் வேதனையைக் கூட, அமைதியுடன் எதிர்கொள்ளும் போது கடுமை குறைந்து விடும். அதைத் தாங்கக் கூடிய சக்தி உடலுக்கு கிடைத்து விடும். பயம் என்பது ஒரு பெரும் குற்றமாகும். இந்த உலகத்தில் கடவுளின் செயலை நிறைவேற விடாமல், அதை அழிக்கக் கூடிய கடவுள் விரோத சக்திகளில் ஒன்றாக பயம் இருக்கிறது. அதனால் பயத்தை அறவே விட்டொழியுங்கள். "என்னுடைய அறிவு தான் மிகமிக உயர்ந்தது. மற்ற எல்லாரையும் விட நான் எல்லா வகையிலும் சிறந்தவன். ஆகவே, மற்றவர்கள் சொல்வது யாவும் தவறானவை' என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்.கடவுள் உணர்வு ஒன்று தான் மனிதர்களுக்குக் கிடைக்கும் உண்மையான உதவியாகும். அதில் தான் நாம் உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியும். கடவுளிடமிருந்தே நமக்கு எல்லா வல்லமையும் உண்டாகிறது.

                                                                     - ஸ்ரீ அன்னை.

மவுனம் காப்பது நல்லது...

பிறர் என்ன செய்கின்றனர் அல்லது செய்யவில்லை என்பதை மதிப்பிடுவதில் உன் நேரத்தைக் கழிக்காது உன் மன அழுக்கினைப் போக்கி தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபடுவது சிறந்தது.

* வாழ்வில் உண்டாகும் துன்பங்களைக் கண்டு கலங்காதீர்கள். நம் துன்பங்களைப் போக்கி, அனைத்தையும் சீராக்கும் பெரிய சக்தியாகிய ஆண்டவனிடம் நம்பிக்கை வையுங்கள். அவன் ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை.

* மவுனம் காப்பது மிகவும் நல்லது. பேச்சுக் கொடுத்தால் பத்தில் ஒன்பது முறை நம் அறியாமையையே வெளிப்படுத்துகிறோம். ஆனால், மவுனத்தில் தீங்கு என்பதே சிறிதும் கிடையாது.

* ஒருவன் தன்னைத் தான் ஆளக் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நம் துன்பங்களையும் வேதனைகளையும் போக்க முடியாது. தன்னை அறிந்த ஒருவனால் மட்டுமே பிறருக்கு வழிகாட்டவும் முடியும்.

* உன் பணியை மனப்பூர்வமாக இறைவனிடம் அர்ப்பணித்தால் தியானம் செய்வதால் கிடைக்கும் நலன்கள் அனைத்தையும் பெற முடியும்.

* பயத்தை விட்டொழியுங்கள். அச்சம் கேட்டை விளைவிக்கும். அச்சமற்றவனுக்கே வெற்றியை எட்டிப் பிடிக்கும் ஆற்றல் உண்டாகும்.

                                                                      -ஸ்ரீ அன்னை.

துன்பம் கூட வரம் தான்!

* உனக்கு துன்பம் நேருமானால் அதை இறைவனிடமிருந்து கிடைத்த வரமாகவே கருது.

* உன் கடமைகளை முனைப்புடனும், கவனத்துடனும் செய். பலனை ஆண்டவனிடம் விட்டு விடு. எப் போதும் கவலையற்றிரு.

* எப்போதும் அமைதியாகவே இரு. எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ, அவ்வளவு குறைவாகப் பேசு.

* கடந்ததை எண்ணி வருத்தப்படுவதிலும் பயனில்லை. வருங்காலத்தைப் பற்றிய கற்பனை யை வளர்ப்பதிலும் பயனில்லை.

* உன் எண்ணங்களில் அவநம்பிக்கை வராத வகையில் கூடிய வரையில் நடைபோடு. நம்பிக் கையுள்ளவனாக உன்னை மாற்றிக் கொள்.

* இறைவனிடம் நமக்கு தேவையானவை எல்லா விஷயங்களும் எப்போதும் இருக்கின்றன. நாம் நம்மை தகுதியுடையவர்களாக்கிக் கொண்டால் எளிதில் அவற்றைப் பெற்று வாழ முடியும்.

* எண்ணங்களில் அவநம்பிக்கை வராத வகையில் கூடிய வரையில் நடைபோடு. நம்பிக் கையுடையவர்களாக மாற்றிக் கொள். மனமகிழ்ச்சி உண்டாக இதுவே வழி.

                                                                        -ஸ்ரீ அன்னை.

எளிதாக எடுத்துக்கொடுங்கள்... (ஆன்மிக சிந்தனைகள்) .

* வாழ்க்கையின் சிரமம் மிகுந்த நேரங்களையும், நோய்களையும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். கோடை வெம்மையின் கடுமை வந்தால் பின்னாலேயே மழையின் குளுமையும் வரக் காத்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

* வாழ்க்கையில் வேதனைகளை தாங்கிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உள்ளத்தில் வேதனைகளை சுமந்து கொண்டு திரிவது மிகவும் சிரமமானது. நம்முடைய உடல் உள்ளப்படைப்புக்கள் ஆண்டவனால் நிறைய தாங்கும் தி பெற்றவை என்பதை நாம் சிறிதும் உணர மறுக்கிறோம்.

* வாழ்க்கையை ரொம்பத் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் மனிதர்களை விட்டு விலகி நில்லுங்கள். உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் நெருக்குவதாக நினைக்காதீர்கள். எல்லாவற்றையும் எளிமையுடன் லேசாக ஏற்கத் தயாராகுங்கள்.

* சோதனைகளை எல்லாம் ஆண்டவன் நம்முடன் விளையாடும் விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். வாடி வதங்கிய முகத்துடன் இருக்காதீர்கள். சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். வெற்றி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி மலர்வதற்கு இதுதான் வழி.

                                                                  -ஸ்ரீஅன்னை

Thursday, January 28, 2010

பெயர் மாற்றப்பட்ட நாடுகள்...

1.டச்சு கயானா --- சுரினாம்.

2.அப்பர் வோல்டா --- புர்க்கினா பாஸோ

3.அபிசீனியா --- எத்தியோப்பியா

4.கோல்டு கோஸ்ட் --- கானா

5.பசுட்டோலாந்து --- லெசதொ

6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா

7.வட ரொடீஷியா --- ஜாம்பியா

8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே

9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா

10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட்

11.சாயிர் --- காங்கோ

13.சோவியத்யூனியன் --- ரஷ்யா

14.பர்மா --- மியான்மர்

15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ்

16.சிலோன் --- ஸ்ரீலங்கா

17.கம்பூச்சியா --- கம்போடியா

18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான்

19.மெஸமடோமியா --- ஈராக்

20.சயாம் --- தாய்லாந்து

21.பார்மோஸ --- தைவான்

22.ஹாலந்து --- நெதர்லாந்து

23.மலாவாய் --- நியூசிலாந்து

24.மலகாஸி --- மடகாஸ்கர்

25.பாலஸ்தீனம் --- இஸ்ரேல்

26.டச் ஈஸ்ட் இண்டீஸ் --- இந்தோனேசியா

27.சாண்ட்விச் தீவுகள் --- ஹாவாய்

28.அப்பர் பெரு --- பொலிவியா

29.பெக்குவானாலாந்து --- போட்ஸ்வாd

மன அழுத்தமும் அதை மேற்கொள்ளும் வழியும் - Dr.பேதுரு

உலகில் உள்ள அனைவரும் தங்கள் வாழ்நாளின் ஒரு முறையாவது தற்கொலை எண்ணத்தைப் பெறுகின்றனர் என்று மனோதத்துவம் சொல்கிறது. இன்றைய வேகமான உலகத்திற்கு ஈடுகொடுத்து நாம் காரியங்களை செய்யும்போது மெல்ல மெல்ல நம்மை அமுக்கி மூழ்கடிக்கவரும் அரக்கனே மன அழுத்தம். இதை உடனே அடையாளம் கண்டுகொண்டு தீர்ப்பது மாத்திரமே பெரும் இழப்புகளை தவிர்க்கும். தீர்வு எங்கே கிடைக்கும்?


முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது நாளிதழ்களிலும் இதர ஊடகங்களிலும் மன அழுத்தத்திற்கான (Depression) காரணங்களும், அதனைத் தீர்ப்பதற்கான வழிவகைகளும் விரிவாக அலசப்படுகின்றன. இருப்பினும் மனஅழுத்தம் என்பது தொன்று தொட்டே இருந்து வரும் ஒன்று தான். அறிவியல், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் என அனைத்துத் துறைகளிலும் மனிதன் பெருவளர்ச்சி கண்ட பின்னரும் எதிர்பார்த்த ஏதோவொன்று இன்னமும் கிடைக்காத ஏமாற்றம், தோல்வி, வெறுமை உணர்வில் மன அழுத்தம் அவனை நிலைகுலையச் செய்து விடுகிறது. வான்மழை பொய்த்தால் வறுமையின் கொடுமை தாங்காமல் உயிர்விடும் விவசாயிகள் முதல் பணவீக்க ஏற்றத்தாழ்வினால் பதவியிழந்து பரிதவிக்கும் படித்தவர்கள் வரையிலும் அது எவரையும் விட்டு வைப்பதில்லை.

மன அழுத்தம்- ஒரு நோய்

மன அழுத்தம் என்னும் தாழ்வு உணர்வு (Low Mood) நிலை ஒரு நோயாக கருதப்படுகிறது. சாதாரணமாக உடல் நலக் குறைவினால் பொது மருத்துவரை அணுகுவோரில் மூன்றில் ஒருவருக்கு இருப்பது அவர்களின் மன அளவில் ஆரோக்கியமின்மையால் அவர்களது உடல் நலத்தில் ஏற்படும் குறைபாடுகள் என்பது ஆச்சரியமான உண்மை.

உலகில் வாழும் நாம் அனைவருமே நோய் நொடியின்றி ஆரோக்கியமாகத் தான் வாழ விரும்புகிறோம்.

ஆரோக்கியமாயிருத்தல் என்றால் என்ன? ”நோய் நொடி எதுவும் இல்லாமல் இருக்கும் நிலை மட்டுமல்ல; உடல், மனம் மற்றும் சமூக அளவில் ஒருவன் நன்றாயிருப்பதே ஆரோக்கியமாயிருத்தல்” என உலக சுகாதார நிறுவனம் வரையறுக்கிறது. இந்த வரையறை ஒரு உன்னதமான நிலையாக இருப்பதால், இதன்படி உலகில் வாழும் அனைவருமே ஒருவிதத்தில் ஏதாவதொரு கட்டத்தில் நோயாளிகள் தான் என்பது வெளிப்படையான உண்மை.

மன அழுத்தத்தின் மதிப்பீடு

தண்ணீரில் மிதக்கும் பனிக்கட்டி வெளியில் தெரிவது கொஞ்சமாக இருப்பினும் அதன் மொத்த உருவமோ மிகவும் பெரிதாக இருக்கும். அதுபோன்றே, மனநல மருத்துவர்களை நாடும் மன நோயாளிகளின்(Mental Disorders) எண்ணிக்கை 20 மில்லியானாக இருக்கும் பட்சத்தில், இதுதவிர மனஅழுத்தத்தினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மட்டும் 120 மில்லியன் என கணக்கிடப்படுகிறது. இவர்கள் உட்பட எதோவொரு விதத்தில் மனநலம் குன்றியோரின் எண்ணிக்கை 500 மில்லியனைத் தாண்டுகிறது. உலகில் ஆண்டுதோறும் 8, 00, 000 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். இவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு மன அழுத்தமே காரணம்.

அறிகுறிகள்

அடிக்கடி தலைவலி, மயக்கம், எரிச்சல், மன உழைச்சல், தூக்கமின்மை, அஜீரணக் குறைபாடுகள், கவலை, அச்சம், சோர்வு, தனிமை, தாழ்வு மனப்பான்மை போன்றவை மன அழுத்தத்தின் சாதாரணமான அறிகுறிகள். மன அழுத்தத்தின் தொடர் தாக்குதலினால் உயர் இரத்த அழுத்தம், நெஞ்சுவலி, தோல் நோய்கள், ஒற்றைத் தலைவலி, வயிற்றுப் புண், ஆஸ்துமா மூச்சுத்திணறல் போன்ற நோய்கள் உண்டாகின்றன.

கண்டறிவது எப்படி?

கவலை உணர்வுடன் உடம்பின் பலம்  இழந்த உணர்வு, தன்னம்பிக்கை இழந்து தனிமை உணர்வுடன் ஒதுங்கிக் கொள்லுதல், வழக்கமான பொழுதுபோக்குகளில் நாட்டமின்மை போன்றவை மன அழுத்தத்தின் ஆரம்பகட்ட அறிகுறிகள். அதுவே அதிகமாகி, அதிகாலையில் தூக்கமின்றி விழித்துக் கொள்ளுதல், வாழ்க்கையில் பிடித்தமின்றி வாழக்கையை முடித்துக் கொள்ளலாமோ என்ற எதிர்மறை எண்ணம் அடிக்கடி மனதில் எழுதல், அதற்கான தற்கொலை முயற்சி போன்றவைகளில் ஏதோவொன்று காணப்பட்டால் தகுந்த அலோசகரையோ மனநல மருத்துவரையோ அணுக வேண்டும்.

காரணங்கள்

மன அழுத்தத்தை மூளை அமைப்பு மற்றும் செயல்பாடு குறைவினால் ஏற்படும் சைக்காட்டிக் (Psychotic) மன அழுத்தம் மற்றும் அவ்வப்போது வாழ்க்கையில் ஏற்படும் பாதகமான சுழலினால் ஏற்படும் நியூராட்டிக் (Neurotic) மன அழுத்தம் என இருவகையாக பிரிக்கலாம். இவற்றுள் நியூராட்டிக் வகையே மிகவும் பரவலாகக் காணப்படுவது. கடந்த காலத்தைக் குறித்த குற்ற உணர்வு, நிகழ்காலத்தைக் குறித்த உதவியற்ற நிலை, எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையின்மை இவையே இத்தகைய மன அழுத்தத்தின் முக்கிய அடிப்படைக் காரணிகள். எனவே அத்தகைய சூழ்நிலைக்குள் ஒருவனைத் திடீரென்றோ படிப்படியாகவோ தள்ளும் எந்தவொரு பாதகமான சூழ்நிலையும் அவனுக்கு மனஅழுத்தத்தைக் கொண்டுவருகிறது.

சமாளிப்பது எப்படி?

சரியான திட்டமிடுதல், அவசர மற்றும் அவசியப் பணிகளை முதலில் முடித்தல், வேலைப்பளுவில் அவ்வப்போது ஓய்வு எடுத்தல், மனதை தளர்வாக வைத்திருத்தல், தனிமை மற்றும் எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்த்து நேர்மறை சிந்தனை நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், தியானம், உடற்பயிற்சிகள், பொழுதுபோக்குக் காட்சிகள் முதலானவை மன அழுத்தத்திற்கு மருந்துகளாக பலராலும் அவ்வப்போது பரிந்துரைக்கப்ப்படுகின்றன. இவைகளெல்லாம் சொல்வதற்கு எளிமையாக இருந்தாலும் இவற்றில் செயல்வடிவில் உள்ள பிரச்சினைகள் அதனை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே எளிதில் புரியும்.

இவைகள் தவிர ஆற்றுப்படுத்துதல் (Counseling)), மனதிற்கான சிகிச்சை (Psychotherapy), சமூக ஆதரவு கட்டமைப்புகள் (Social Support), தேவைப்பட்டால் மருந்துகள் (Medications) என பல்வேறு வழிகள் உள்ளன.

ஆன்மீகத்தின் பங்கு

மனநல மருத்துவத்துக்கும் ஆன்மீகத்துக்கும் சம்பந்தமில்லை என்றது ஒருகாலம். அப்போது மதம் மற்றும் ஆன்மீக காரியங்களே மன நோயாக கருதப்பட்டன. ஆனால் சமீபத்திய ஆய்வுமுடிவுகள் ஆன்மீகம் மனிதனின் நோய் மற்றும் அதினால் எழும் மன உழைச்சலுக்கு தீர்வாக அமைவதை உறுதிப் படுத்துகின்றன. இதன் விளைவாக சமீப காலங்களில் உலகமெங்கிலும் பரவலாக பல நாடுகளின் மனநல மருத்துவத் துறையில் ஆன்மீகத்துக்கென்றே தனிபிரிவுகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

ஆன்மீகம் என்பது தனி ஒருவனின் தனிப்பட்ட அனுபவமாகும். எனவே கருத்து வேறுபாடுகளுக்கு அங்கு இடமுண்டு. அமைப்புகளுக்குட்பட்ட ஆன்மீகம் மதம் எனப்படுகிறது. ஆன்மீகம் அவ்விதம் அமைப்புகளுக்குட்படும் போது அதனுடைய நோக்கம் தவறி, எதிர்மறை விளைவுகளைத் தரும் அமைப்பாக மாறிவிடும் வாய்ப்புண்டு. அன்று தொட்டு இன்று வரையிலும் உலகில் மதத்தில் அடிப்படையில் ஏற்படும் பிரச்சினைகளினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பது வரலாறு. இருப்பினும் தனி ஒருவனின் மனஅழுத்தத்தை கையாளுவதில் ஆன்மீகம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஏப்படியெனில், மனதளவில் அரோக்கியமாக இருக்கும் ஒருவனது அடிப்படைப் பண்புகளை ஒருங்கே பக்குவப்படுத்தும் தன்மை ஆன்மீகத்துக்குத் தான் உண்டு. மற்ற முயற்சிகளும் ஓரளவுக்கு உதவக்கூடும். ஆனால் ஆன்மீகத்தின் உதவியினால் அதிக பலன் உண்டு. சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது... ... எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது (1 தீமோ 4:8).

மனநலத்தின் பண்புகள்

கீழ்க்கண்ட பண்புகளை தன்னகத்தே கொண்டுள்ளவனைத் தான் முழுமையாக மனதளவில் ஆரோக்கியமாக இருப்பவனாக மனநல மருத்துவர்கள் மற்றும் உளவியல் அறிஞர்கள் கணிக்கின்றனர்:

1) தன்னைப் பற்றி தன்னிறைவோடு இருப்பவன்: தன்னைப் பற்றி மிகவும் உயர்வாகவோ அல்லது மிகவும் தாழ்வாகவோ எண்ணம் கொள்வதில்லை. இவர்கள் தமக்குத் தாமே உள்ளூர பிரச்சினைகள் (Internal Conflict)) எதுவுமின்றி, மனரம்மியமாய் திருப்தி உணர்வுடன் இருப்பர்; தங்கள் தவறுகளை ஒத்துக்கொள்ள தயங்குவதில்லை.

2) அயலானைப் பற்றி தரமான சிந்தனை கொண்டவன்: அடுத்தவரை நம்பி ஏற்றுக் கொண்டு அரவணைத்து ஒத்துழைப்புடன் நடந்து கொள்வர். இவர்கள் அயலான் மீது அக்கறை கொள்வதுண்டு.

3) வாழ்க்கையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுபவன்: வாழ்க்கையில் தமக்கென்று தகுந்த எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்து அவர்களை நிறைவேற்றுவதில் துடிப்புடன் இருப்பர். அவைகளில் வரும் தடைகளை மேர்கொள்ளும் பக்குவம் இவர்களுக்கு உண்டு.

தன்னைப் பற்றி

ரோமர் 7:15-25 வசனங்களில் தனக்குதானே சம்மதியில்லாத ஒரு நிர்ப்பந்தமான மனுஷனின் நிலைமை விவரிக்கப்படுகிறது. ”இந்த மரண சரீரத்திலிருந்து யார் விடுதலையாக்குவார்? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்”. என்பது பவுலின் அனுபவம். கலா. 5:22-23ன் படி, ஆவியின் கனியோ: அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. தங்கள் மாம்சத்தையும் அதின் இச்சைகளையும் சிலுவையில் அறைந்துவிட்ட கிறிஸ்துவினுடையவர்களுக்கே இது சாத்தியமாகிறது.

அயலானைப் பற்றி

இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழிய நாட்களில் ஊழியம் கொள்ளும்படி அல்ல, ஊழியம் செய்யவே வந்தார். ’உன்னிட்த்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும் (கலா 5:14)’ என்கிறார் பவுல். ’கடவுளை மற; மனிதனை நினை’ என்ற கோட்பாடு, கடவுள் பெயரில் மனிதனுக்கு தீங்குசெய்த சிலரின் மீதுள்ள ஆதங்கத்தின் வெளிப்பாடு. மற்றபடி கடவுளை நினைத்தவர்கள் தான் மனிதனைக் குறித்தும் அதிகம் நினைத்திருக்கிறார்கள் என்பது கண்கூடான வரலாற்று உண்மை. ஆன்மீகம் ஒருவனை அயலானிடம் அன்பு செலுத்தி அவர்களுடன் நல்லுறவு பேணும் பண்பாளனாக மாற்றுகிறது.

வாழ்க்கையின் எதிர்பார்ப்புகள்

வாழ்க்கையில் தகுதிக்கு மிஞ்சிய எதிர்பார்ப்புகள் தோல்வியையும் ஏமாற்றத்தையும் தந்து இறுதியில் மன அழுத்தத்தைத் தான் கொண்டுவரும். தன்னைப் படைத்த தேவனின் சித்தத்திற்கு உட்பட்டு, வாழ்க்கையில் திட்டங்களை வகுத்துச் செயல்படும் போது அதனை நிறைவேற்றுவதில் தேவனுடைய உதவி கிடைக்கிறது. நோக்கம் உந்தும் வாழ்க்கையில் சவால்களை மேற்கொள்ளும் வலிமை கிடைப்பதால், எத்தகைய சூழ்நிலையிலும் மன அழுத்தத்தில் அழுந்தி விடாமல், சமாளித்துக் கொள்ளமுடிகிறது.

மனதிற்கான சிகிச்சையில் ஆன்மீகம்

மருத்துவம் மற்றும் உளவியல் துறைகளில் மனதிற்கு சிகிச்சையளிப்பது (Psychotherapy) ஒரு முக்கியமான சிகிச்சை முறையாகும். இந்த தொடர் சிகிச்சை மூலமாக காலப்போக்கில் படிப்படியாக மனதளவில் மாற்றம் ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம். இதனையே பவுல், ரோமர் 12:2ல், ’நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பரிபூரண சித்தமும் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக உங்கள் மனம் புதிதாகிறதினாலே மருரூபமாகுங்கள்’ என்கிறார். மனதிற்கு சிகிச்சை மூலமாக ஓரளவுக்கு பலன் கிடைத்தால் போதும் என்பதுதான் எதிபார்ப்பு. ஆனால், இயேசு கிறிஸ்து, ’நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் அது பரிபூரணப்படவும் வந்தேன்’, என வாக்கு பண்ணியிருக்கிறார். எனவே மன அழுத்தத்திற்கு மருத்துவ மற்றும் உளவியல் முறைகளினால் கிடைக்கும் பலனைக் காட்டிலும் நிறைவான மற்றும் விரைவான பலன் ஆன்மீகத்தினால் கிடைக்கிறது.

இயேசு கிறிஸ்து ‘எங்கும் சுற்றித் திரிந்து பிணியாளிகளை சொஸ்தாக்கினார்’ என்று நாம் அறிவோம். ”அவர், பிரசங்கத்தைக் காட்டிலும் பிணியாளிகளை சொஸ்தமாகுவதற்கே அதிக நேரம் செலவளித்தார்” என்கிறார் ஒருவேதவல்லுநர். அந்த பிரசங்கங்கள் கூட பிணிக்குக் காரணமான ஆவி, ஆத்தும பிரச்சினைகளை முதலில் சரி செய்யவே என்பது அவரின் கருத்து. இயேசு கிறிஸ்துவின் போதனைகளை பின்பற்றி நமது ஆவி, ஆத்துமாவில் அரோக்கியமாக வாழும் போது மன அழுத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளிலிருந்து விடுதலை பெற்று ’ஆரோக்கியம்’ கிடைப்பது நிச்சயம்.

Wednesday, January 27, 2010

தசவதாரம் பாடல் - கல்லை மட்டும் கண்டால்...

நாடோடிகள் - பாடல் சம்போ சிவ சம்போ...

Tuesday, January 26, 2010

முழு 'சுதந்திரம்' பெற்ற நாள் : இன்று 61வது குடியரசு தினம்...


இந்தியா 1947 ஆக. 15ல் சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் பெற்றாலும் கூட, அது அரசுரிமை (டொமினியன்) அந்தஸ்து கொண்ட நாடாகத்தான் விளங் கியது. பிரிட்டிஷ் மன்னர் ஆறாம் ஜார்ஜ்தான் அப்போது பெயரளவிலான மன்னர். 1950 ஜன.26ல் இந்திய அரசியல் சாசனம் ஏற்கப்பட்ட போது தான் முழுக் குடியரசு ஆனது.

1930களிலேயே இந்திய குடியரசுக் கனவு நாட்டின் தலைவர்களிடம் இருந்தது. 1929 டிச. 31ல் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில், 1930 ஜன.26ல் இந்தியா முழுவதும் "பூர்ணசுயராஜ்ய' தினம் அனுசரிப்பது என்று தீர்மானித்தனர். இந்த மாநாடுதான் ஒத்துழையாமை இயக்கத்துக்கு வழிவகுத்தது. இந்தியாவில் நெருக்கடியை உணர்ந்த பிரிட்டிஷார், சுதந்திரம் அளிக்க முடிவு செய்தனர். 1946ல் பிரிட்டிஷாரின் கேபினட் குழு, இந்திய தலைவர்களிடம் பேசியதன் விளைவாக இந்திய அரசியல் சாசன நிர்ணய சபை அமைக்கப்பட்டது. இந்த சபையின் நோக்கம் இந்தியாவை வழிநடத்தும் அரசியல் சாசனத்தை உருவாக்குவதே. பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர், பலமுறை திருத்திய பின்னர், 1949 நவ.26ல் அரசியல் சாசனத்தின் இறுதி வடிவம் ஏற்றுக் கொள் ளப்பட்டது. 1947 ஆக.15ல் இந்தியா சுதந்திரம் அடைந்திருந்தாலும் கூட, உண்மையான சுதந்திரம் என்பது 1950 ஜன.26லிருந்துதான் துவங்குகிறது. அன்றிலிருந்துதான் இந்திய அரசியல் சாசனம் அமல் செய்யப் பட்டது. ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக தேர்வானார்.

பெருமைமிகு இந்தியா: இந்தியா எப்போது வல்லரசாகும்... என்ற கேள்வி எல்லோரது மனதிலும் இருக்கிறது. வல்லரசாவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று கூறுவோரும் உண்டு. பரீத் சகாரியா எனும் அறிஞர், இந்தியா வல்லரசு ஆவதற்கு நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்று கூறி வருகிறார். இந்தியாவில் உள்ள இளைஞர் பட்டாளம்தான் அதை சாத்தியமாக்கப் போகிறார்கள். சீனாவை விட, ஆங்கிலம் பேசும் இளைஞர்கள் இருப்பதும், வளர்ந்த நாடுகளில் முதியோர் எண்ணிக்கை சுமையாக அதிகரித்து வருவதுமே இந்தியா வல்லரசாகும் வாய்ப்பு களாக அமையும் என்கிறார். வேறு எந்த நாட்டையும் விட 60 ஆண்டுகளாக ஜனநாயகம் எனும் விஷயத்தில் இந்தியா இரும்பு போல் உறுதியாக இருந்திருக்கிறது என்பதும் அவர் வாதம். பராக் கன்னா என்பவர், ஏழைகளை சுமந்து கொண்டுள்ள இந்தியாவால் எப்படி வல்லரசு ஆக முடியும் என்கிறார். இந்தியா பெரிய நாடுதான் - ஆனால் அதனால் எந்த முக்கியத்துவமும் இல்லை என்கிறார் அவர். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 2020ல் இந்தியா வல்லரசாகும் என்று கணித்திருந்தார். இன்னும் 10 ஆண்டுகளில் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனால் கூட, 2030ம் ஆண்டில் இந்தியா நிச்சயமாக வல்லரசாகும் என்று பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்ற வேட்கை மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் காணப்படுகிறது. அந்த வேட்கை ஒன்றே இந்தியாவை வெகு விரைவில் வல்லரசாக்கிவிடும் என்கிறார்கள் நிபுணர்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் விழா: குடியரசு தினத்தன்று டில்லியில் கோலாகல விழா நடைபெறுகிறது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கொடியேற்றுகிறார். ராஜ்பாத்தில் குடியரசு தின ராணுவ மற்றும் கலாசார அணிவகுப்புகள் நடைபெறுகின்றன. ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களும் வானில் வர்ண ஜாலங்கள் நிகழ்த்துகின்றன. வெளிநாட்டு அதிபர் அல்லது பிரதமர் (இம்முறை தென் கொரிய அதிபர் லியங்பாக்) விருந்தினராக இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுகிறார். வீர தீர சாகசம் புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி ஜனாதிபதி கவுரவிக்கிறார். குடியரசு தின விழாக்கள் மூன்று நாட்களுக்கு நடைபெறுகின்றன. இந்த மூன்று நாட்களும் ராஷ்டிரபதி பவன், அதையொட்டியுள்ள அமைச்சக அலுவலகங்கள் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் வண்ணமயமாக காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29ம் தேதி குடியரசு தின நிறைவு விழா நடக்கிறது. இதில் குடியரசு தினத்துக்காக, வந்த முப்படையினர் தங்கள் பாசறைக்கு திரும்புகிறார்கள். இதற்கான வழியனுப்பு விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் இசைக்கலைஞர்களின் டிரம் இசை, அணிவகுப்பு இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. டிரம்மர்கள் இசைகளில் "அபைட் வித் மீ ' (காந்தியடிகளுக்குபிடித்தது) இசைக் கும் முக்கிய இடம் உண்டு. படையின் பேண்ட் மாஸ்டர் ஜனாதிபதியிடம் சென்று, விடைபெறுவதற்கு அனுமதி கேட்பார். அப் போது நிறைவு விழா முடிந்ததாக மாஸ்டர் அறிவிப் பார். "சாரே ஜகான் சே அச்சா' எனும் வீரம் செறிந்த இசையை இசைத்தபடியே முப்படையினரும் பாசறை திரும்புவார்கள்.

குடியாட்சி... முடியாட்சி: இன்று குடியரசு தினம் கொண்டாடுகிறோம். "குடியரசு' என்ற பெயரை எத்தனையோ நாடுகள் சூட்டிக் கொண்டுள்ளன. ஆனால் இந்தியா போல் உண்மையான குடியரசை நாம் பார்ப்பது அரிது. ஒரு நாடு குடியரசு நாடு என்று அழைக்கப்படுமானால் - அங்கு மன்னர் ஆட்சி இருக்கக்கூடாது. ஓட்டெடுப்பு வழியாக ஆட்சி அதிகாரத்தில் மக்களுக்கு அதிகாரம் அளிக்கப் பட்டிருக்க வேண்டும். குடியரசு நாடுகளில் குடியரசுத் தலைவரான ஜனாதிபதி, நேரடியாகவோ அல்லது மக்களால் தேர்வு செய்யப் பட்ட பிரதிநிதிகள் வழியாகவோ தேர்வு செய்யப்படுகிறார். நேரடியாக தேர்வாகும் ஜனாதிபதிகள் அரசுத் தலைவராக விளங்குகிறார். பிரதிநிதிகள் வழியாக தேர்வாகும் ஜனாதிபதிகளைக் கொண்ட நாட்டில் பிரதமரே நாட்டின் அரசுத்தலைவராக விளங்குகிறார். நேரடியாக ஜனாதிபதிகளை தேர்வு செய்யும் இலங்கை, அமெரிக்கா போன்ற நாடுகள் குடியரசுத் தலைவர் முறையிலான ஆட்சி செய்யும் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தியா போன்ற நாடுகளை பார்லிமென்ட் குடியரசு ஆட்சி செய்யும் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. பிரான்சில் பிரதமரும் ஜனாதிபதியும் வேறு வேறு கட்சிகளைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஜெர்மனி இந்தியா போன்ற நாடுகளில் குடியரசுத் தலைவராக தேர்வாகும் தலைவர் கட்சி சார் பற்றவராக இருக்க வேண்டும். பார்லிமென்ட் ஜனநாயகப் படி, ஓட்டெடுப்பின் மூலம் பிரதமர் தலைமையில் பிரிட்டனில் அரசு அமைந்தாலும் கூட, பிரிட்டனில் இன்றும் முடியாட்சிதான். அங்கு ராணிதான் நாட்டின் தலைவராகக் கருதப்படுகிறார்.

மூவர்ணக் கொடி

1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது, பிரதமர் கொடியேற்றும் வழக்கம் துவங்கியது.

1950 ஜனவரி 26ல் இந்தியா குடியரசானதிலிருந்து அதன் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி அத்தினத்தில் கொடியேற்றும் வழக்கம் வந்தது.

1947ல் ஜனாதிபதி என்ற பதவி இல்லை. ஆகவே, அன்று யார் கொடியேற்ற வேண்டும் என்ற குழப்பம் இல்லை. இவ்விரண்டு நிகழ்ச்சிகளும், இரு பெரிய தலைவர்கள் கவுரவம் பெறும் தனித்தனி நிகழ்ச்சிகளாக அமைந்துவிட்டன. டில்லியில், சுதந்திரத் தினத்தன்று செங்கோட்டையிலும், குடியரசு தினத்தன்று, ராஜ்பாத் அருகேயும் தேசியக் கொடி ஏற்றி வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுதந்திர தினம், குடியரசு தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம், ஜாலியன் வாலாபாக் தேசிய வாரம் (ஏப். 6 -13) ஆகிய தேசிய தினங்களிலும் மாநிலங்கள் உருவான மாநில தினங் களிலும், தலைவர்கள் மறைவின் போது, தேசியக் கொடியை அரைக்கம் பத்தில் பறக்கவிடக்கூடாது. இத்தினங்களில் உடல் எங்கு வைக்கப்பட்டுள்ளதோ அங்குள்ள கட்டடத்தில் மட்டுமே அரைக் கம்பத்தில் கொடி பறக்கவிடலாம்.

காந்தியின் பேனாமுனை போராட்டங்கள்: இந்திய சுதந்திரப் போராட் டத்தில், பத்திரிகைகளுக்கு மிகுந்த பங்கு உண்டு. குடியரசு இந்தியாவில் அந்த போராட்டங் களை நினைவு கூர்வது நாம் காந்திக்கு செய்யும் மரியாதையாகும். திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.பி.சஞ்சய், "காந்தியும் இதழியலும்' என்று தி ஹூட் இதழுக்கு எழுதியதன் சுருக்கமான தமிழாக்கம். பத்திரிகைத் துறைக்கான கொள்கைகளை வகுத்து அதன் படியே நடந்தவர் மகாத்மா காந்தி. வழக்கறிஞரான காந்தி, தென் ஆப்ரிக்காவில் பணிபுரிவதற்காக சென்றார். அங்கு வாழ்ந்த இந்தியர்கள், அவர்களது பிரச்னை ஆகியன அவர்களுக்காகப் போராடும் சூழ்நிலையை உருவாக்கியது. அப்போது பத்திரிகைகளுக்கு கடிதம் மற்றும் பேட்டிகள் வாயிலாக கருத்துக்களை வெளியிட்டார். ஆனால் அங்கு தொடர்ந்து வரும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு, 1903ல் அவர் தென் ஆப்ரிக்கா வாழ் இந்தியர்களுக்காக "இண்டியன் ஒபினியன்' எனும் தனது வாரப் பத்திரிகையை துவக்கினார்.

மக்களுக்கு தெரிந்த மொழியில் பத்திரிகையை வெளியிடுவதுதான் மக்களை சென்றடைய முடியும் என்பதை காந்தி நம்பினார். ஆங்கிலம், குஜராத்தி, தமிழ் மற்றும் இந்தியில் அவர் பத்திரிகையை வெளியிட்டார். இந்த பத்திரிகையின் முக்கிய நோக்கமே எதையும் எதிர்பாராத சேவைதான். பத்திரிகையின் கொள்கையை 1903 ஜூன் 6 இதழில் அவர் வெளியிட்டுள்ளார். பொதுத் தகவல்கள், இந்திய செய்தி சுருக்கம், வர்த்தக விபரங்கள், சமூகம் மற்றும் அறிவார்ந்த விஷயங்களில் இந்தியர்கள் மற்றும் ஐரோப்பியர்களின் கட்டுரைகள் ஆகியன அந்த இதழில் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டது. இந்தியர்களின் தரப்பை ஐரோப்பியர்களுக்கு உணர்த்துவதை பத்திரிகை நோக்கமாக கொண்டிருக்கும் என்றும் வர்த்தக நோக்கம் அல்லாத விளம்பரங்கள் மக்களுக்கு உதவும் என்பதையும் காந்தி வெளிப்படுத்தியிருந்தார். 1915ல் காந்தி இந்தியா திரும்பிய பின்னர், இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு அவர் பத்திரிகை வாயிலாக போராடினார் என்றால், அதற்கு "இண்டியன் ஒபினியன்' பத்திரிகை நல்ல அடித்தளமிட்டது. அவரது குரு கோகலேயின் அறிவுரைப்படி, தாய்நாட்டை அறிந்து கொள்வதற்காக சுற்றுப்பயணம் செய்தார். சம்பரானில் விவசாயிகள் படும் துன்பத்தை அறிந்த அவர் தனது முதல் சத்தியாகிரகத்தை அங்கு துவங்கினார். அப்போது, இந்திய பத்திரிகை தேசிய உணர்வு பீறிட்டது. ஆங்கில சார்பு பத்திரிகை மற்றும் இந்தியர்களுக்கான பத்திரிகை என்பதை பிரித்துணரும் காலம் வந்தது. வெளியான இந்திய தரப்பு செய்திகளுக்கு அப்போது அரசும் செவிசாய்க்கத் தொடங்கியது.

சத்தியாகிரக ஆதரவாளரான "பாம்பே கிரானிக்கிள்' பத்திரிகையின் ஆசிரியர் ஹார்னிமேன் நாடுகடத்தப்பட்ட போது, அப்பத்திரிகை சார்பில் வெளியான "யங்இந்தியா' பத்திரிகைக்கும் காந்தி ஆசிரியரானார். நவஜீவன் (குஜராத்தி), ஹரிஜன் (ஆங்கிலம்), அரிஜன் சேவக் (இந்தி) மற்றும் அரிஜன் பந்து (குஜராத்தி) ஆகிய இதழ்களின் ஆசிரியர் பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டார். கிராமப்புறங்களில் காணப்படும் தீண்டாமை மற்றும் ஏழ்மையை ஒழிக்க அவர் அப்பத்திரிகைகளை ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டார். தன்னுடைய கோட்பாடுகள் அடிப்படையிலேயே அவர் தனது பத்திரிகையை நடத்துவதாகவும் தெரிவித்தார்.காந்தியின் எழுத்துக்கள் அவதூறாகவும் வெறுப்பை உமிழ்வதாகவும் இருக் கின்றன என்று சிலர் கூறினார்கள். என்னுடைய எழுத்துக்கள் எப்போதும் விஷம் கக்கியதில்லை என்று காந்தியே கூறியிருக்கிறார். என்னுடைய எழுத்துக்களில் கோபம் இல்லை. சமய நெறிகளுக்கு மாறாக நடப்பதில்லை. ஆட்சியாளர்களுக்கு பகைமை சூடுவதன் மூலம் வெற்றி அடையலாம் என்று நம்பவில்லை. இந்த உலகில் அன்பு நிலைத்திருப்பதால், எந்த தனி மனிதரின் மீதும் வெறுப்பு இல்லை என்றார். இந்துக் களோ முஸ்லிம் களோ, குஜராத்திகளோ தமிழர்களோ அல்லது வங்கத்தினரோ அவர்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்றார்.

காந்தியடிகளின் இந்த பண்புகள் மதச்சார்பின்மை தொடர் பான நமது பாரம்பரிய உன்னதங்களை வெளிக்காட்டியது. ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுதினாலும் அதற்காக பத்திரிகை ஆசிரியர் மன்னிப்புக் கேட்க வேண்டியது இல்லை. அவ்வாறு மன்னிப்புக் கேட்பதைவிட பத்திரிகையை மூடிவிடுவது சிறந்தது என்ற கருத்தைக் கொண்டிருந்தார். பத்திரிகை சட்டம் (1910), தொடர்பாக கேட்டபோது பத்திரிகைகள்தான் பொதுமக்களின் கருத்தை வெளிப்படுத்தும் கருவி என்றார். அரசு அதை உணர்ந்து கொள்வது முக்கியம் என்றார். அச்சு இயந்திரங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டது தொடர்பாக அவர் கவலைப்படவில்லை. கையால் எழுதிக்கூட பத்திரிகைகளை வெளியிட்டுக் கொள்ள முடியும் என்று அவர் கருதினார். ஒரே நேரத்தில் 50 பேருக்கு ஒரு விஷயத்தை எழுதச் சொல்லி அவர்கள் அதைப் பிரதி எடுத்து பல மடங்காக்கி வினியோகம் செய்யும் முறையை தெளிவாக விளக்கினார். தேசத்தந்தை காந்தியடிகளின் வாழ்க்கை பாடங்கள் நிறைந்தது. நாம் உள்ளீர்த்துக் கொள்ளும்படியான போதனைகள் நிறைந்தது. சமத்துவமின்மைக்கு எதிராகவும் மதச்சார்பின்மையைக்காக்கவும் போராடுவது ஆகியன அவர் தந்த பாடங்கள். முழு நிறைவான சிறந்த கொள்கைகளை அவர்பத்திரிகை வாயிலாக பரப்பியதை நாம் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண் டும்.

Saturday, January 23, 2010

பதட்டத்தை வெல்லப் பதினொரு வழிகள்...


பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று. ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும்.

எனவே பதட்டம் எதனால் உண்டாகிறது, அதனை எப்படித் தவிர்க்கலாம் என்று அறிய வேண்டும்.

சிறு குழந்தைகளை நாம் எப்படி நடத்துகிறோமோ, அவர்களுக்கு என்ன கற்றுத்தருகிறோமோ அதுதான் பொதுவாக அவர்களது குண நலங்களுக்கு அடிப்படையாகிறது. எனவே சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுதே அவர்களைப் பலருடன் பழகவும், பல சூழல்களைக் கையாளவும் கற்றுக்கொடுத்துவிடுவதும், குழந்தைகளை மட்டம் தட்டி, கேலி செய்யாமல் தட்டிக்கொடுத்து வளர்ப்பதும் மிகவும் அவசியம். சிறு குழந்தைகளாக இருக்கையில் பிறருடன் பேச, பழக வெட்கப்படும் குழந்தைகளை அப்படியே விட்டுவிடாமல், மெள்ள மெள்ளப் பலருடன் பழக வாய்ப்பினை உண்டாக்கி, பயிற்சி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், வளர்ந்தபின், பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கையில், நான்கு பேருடன் பேசவோ, வெளியில் செல்லவோ நேர்கையில் பதட்டத்தால் அவர்கள் ஆக்கிரமிக்கப்பட்டுவிடக்கூடும். இத்தகையவர்கள் தமது ஆசிரியர்களிடன் தமது சந்தேகங்களைக் கேட்கவோ, தமது உடன் படிப்பவர்களுடன் பேசவோ நேரும்பொழுது அதிகக் கூச்சத்தாலும் பயத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவிடுவர். பொது இடங்களுக்குச் செல்வது, சிறிய குழுவுடன் பேச நேர்வது இவை அவர்களுக்கு அதிகப் பதட்டத்தை உண்டாக்கும்.

அதேபோல், சிறு குழந்தைகளாக இருக்கையில் கேலிக்கு ஆளாகி வளர்ந்தவர்கள், பெற்றோராலும் மற்றவர்களாலும் திட்டி, மட்டம் தட்டி வளர்க்கப்பட்டவர்கள், பெரியவர்களாகியபின் கூட எந்தச் செயலைச் செய்வதானாலும், குழப்பமும் பதட்டமும் அடைவார்கள். பிறருடன் பேசுகையில் கைகால்கள் நடுங்குதல், உடல் வியர்த்தல், புதிய இடங்களுக்குச் செல்லத்தயங்குதல் இவையெல்லாம் பதட்டமான மனநிலைக்கு அறிகுறி. புதிய சூழலுக்கு ஆட்படுகையில் சிலர் பதட்டத்தால் மயக்கமடைவதும் மாரடைப்பு ஏற்படுவதும்கூட நடப்பதுண்டு.

இத்தகைய பதட்டமான மனநிலை உடையவர்கள், தாழ்வு மனப்பான்மைக்குள் விழுந்துவிடுவதும் மனச்சோர்விற்கு ஆளாவதும் அதிகம். பதட்டம் என்ற ஒரு குணம் இவர்களது நேரத்தையும் ஆற்றலையும் விழுங்கி, இவர்களது திறமைகளைப் பிரகாசிக்க விடாமல் வீணடிக்கச் செய்கிறது. எனவே, இவர்கள் தம்மையே சுய பரிசோதனை செய்துகொண்டு, தாம் இந்தப் பதட்டம் என்னும் சிறையில் இருந்து விடுபட நினைத்தால் அதற்கு என்ன வழி?

பதட்டத்தை வெல்ல நினைப்பவர்களுக்கு!

முதலில் வாழ்த்துக்கள். நீங்கள் பதட்டத்தை வெல்ல வேண்டும் என நினைப்பதே ஒரு நல்ல அறிகுறி. நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

நமது எண்ணங்களே நாம் வாழ்வின் அடிப்படை. நமது நேர்மறை எண்ணங்கள் நமக்கு நற்பலனையும், எதிர்மறை எண்ணங்கள் தோல்வியையும் உண்டாக்குகின்றன. தவறு செய்துவிடுவோமோ என்ற அச்சத்துடன் செய்யும் வேலைகள் தவறாகவேதான் முடியும். எனவே எதிர்மறையான சிந்தனைகள் (Negetive Thinking) தோன்றும்பொழுது கவனமாக உங்கள் மனத்தை வேறு நேர்மறை எண்ணங்களுக்குத் (Positive Thinking) திருப்புங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்றாலும் கொஞ்ச நாளில் உங்கள் மனமானது தானாகவே நேர்மறைக்கு மாறிவிடக் காண்பீர்கள்.

ஒரு தாளைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள குறைபாடுகள் என்னென்ன? எந்தெந்த விஷயங்கள் உங்களுக்குப் பதட்டத்தைத் தூண்டுகின்றன எனப் பட்டியலிடுங்கள். பின் நிதானமாக அக்காகிதத்தைக் கிழித்து குப்பைத்தொட்டியில் எறியுங்கள். இக்குறைபாடுகள் என்னை விட்டு வெகு விரைவில் நீங்கிவிடும் என்றும், இனி இச்சூழல் என்னை அச்சுறுத்தாது. இத்தகைய சூழலை எதிர்கொள்ளும் தெம்பு எனக்கிருக்கிறது என்றும் திடமான குரலில் உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். சுய அறிவுரை(Autosuggestion) என்ற இந்த முறை ஆழ்மனத்தில் உங்களைப் பற்றி நீங்களே பதித்து வைத்திருக்கும் தவறான பிம்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும்.

உங்களிடம் உள்ள திறமைகள் மற்றும் உங்கள் நிறைகள் என்னென்ன என்பதைப் பட்டியலிடுங்கள் (குறைந்தபட்சம் பத்து). எனக்கு எந்தத் திறமையுமே இல்லை என்று பதில் சொல்லாதீர்கள். 'எறும்பும் தன் கையால் எட்டுச் சாண்' என்பார் அவ்வைப்பிராட்டி. இனிமையான குரலா, உயரமா, நினைவு வைத்துக்கொள்ளும் திறமா, கணக்கில் புலியா, வேகமாக ஓட வல்லவரா, சமையலில் திறமைசாலியா, பிறருக்கு உதவும் குணமும் மனமும் உள்ளவரா? என்னென்னவெல்லாம் உங்களுடைய நல்ல குணங்கள் அல்லது திறமைகள் என்று கருதுகிறீர்களோ அவை எல்லாவற்றையும் பட்டியலிட்டுப் பாருங்கள். உங்கள் மனம் சோர்வடைகையில் அப்பட்டியலை எடுத்துப் படித்துப் பாருங்கள்.

நீங்கள் என்னென்ன செய்ய விரும்புகிறீர்கள் அல்லது வாழ்வில் உங்கள் இலக்கு என்ன? இதைச் சற்று ஆழ யோசியுங்கள். இந்தப் பதட்டம் அதற்கு எந்த வகையில் தடையாக இருக்கும் என்பதைச் சிந்தித்து, "இதில் இருந்து நான் வெளியில் வந்தே தீருவேன். என் இலக்கை அடைந்தே தீருவேன்" என்று இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் உரக்கச் சொல்லிக்கொள்ளுங்கள்.

காலை எழுந்தவுடன் கண்ணில் படுகின்ற மாதிரியான இடத்தில், நல்ல ஆரோக்கியமான பொன்மொழிகள், உற்சாகமூட்டும் சுவரொட்டிகள் இவை இருக்குமாறு ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். இரவு படுக்கைக்குச் செல்லுமுன், சிறியதோ பெரியதோ, உங்களுக்கு நடந்த நன்மை ஒன்றை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.

எப்பொழுதும் ஏதாவது பரபரப்பாகச் செய்துகொண்டு இருங்கள். 'Idle man's brain is devil's workshop' என்பது ஆங்கிலப்பழமொழி. தனியாக இருக்கையிலும், வேலையில்லாமல் இருக்கையிலும் நமது மனக்குரங்கு பல கிளைகளில் தாவித்தாவிச் செல்லும். அவ்வாறு அக்குரங்கு தாவும் பல நினைவுக்கிளைகள் எதிர்மறையானதாக இருக்கும். எனவே மனத்தை அலைபாய விடாமல் ஒரு நிலைப்படுத்தவேண்டுமானால் உடலுக்கும் மனதிற்கும் வேலை கொடுத்துக்கொண்டே இருப்பது அவசியம்.

தியானம் பதட்டத்திற்கு அருமருந்து. தியானமும், மூச்சுப்பயிற்சியும் பதட்டத்தைப் பெருமளவு கட்டுப்படுத்தக் கூடியவை. முடிந்தால் முறையாக ஒரு குருவை நாடி தியானம், யோகா, பிராணாயாமம் முதலியவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள். முடியாத பட்சத்தில் மெல்லிய இசையை ஒலிக்க விட்டு (ஓம் என்ற ஒலி மனதை ஒருநிலைப்படுத்துவதற்குப் பெரிதும் உதவுகிறது. இல்லையென்றால் தியானத்திற்கென்றே சீராக ஒலிக்கும் இசைத்தட்டுகள் கிடைக்கின்றன, அவற்றையும் பயன்படுத்தலாம்.) கண்களை மூடி இசையினையும் உங்கள் சுவாசத்தையும் மட்டும் கவனித்தவாறு பத்து நிமிடங்கள் அமர்ந்திருங்கள். உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டை விட்டு நழுவி வேறு எண்ணங்களுக்குச் செல்லத்தான் செல்லும். ஒவ்வொருமுறையும் அதை ப் பிடித்து இழுத்து வருவது உங்கள் பொறுப்பு. நாள்பட நாள்பட தியானம் செய்வது பழகிவிடும். உங்கள் ஒருமுகப்படுத்தும் திறனும் கூடிவிடும்.

உங்களை உணர்ச்சிவசமாக்கும் செய்திகளை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் தவிர்த்துவிடுங்கள். உங்கள் நண்பர்களில் கூட எப்பொழுதும் யாரையாவது எதிர்மறையாக விமர்சிக்கும், கேலி செய்யும் நபர்கள் இருந்தால் அவர்களை விட்டு விலகியே இருங்கள். நேர்மறைச்சிந்தனை, உற்சாகம் இவற்றுடன் இருப்பவர்களுடன் உங்கள் நட்பை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களில் யார் உங்கள் நம்பிக்கைக்குரியவரோ அவரிடம் உங்கள் மனத்தில் உள்ள சுமைகளை, சந்தேகங்களை, பயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். புதியவர்களுடன் பழக நேர்ந்தால் எப்படிப்பழகுவது, ஒரு குழுவில் பேசுவது எப்படி என்றெல்லாம் அவருடன் சேர்ந்து பயிற்சி செய்து பாருங்கள். நீங்கள் புதிய இடத்தில் பலருடன் கலகலப்பாகப் பழகுவது, பொது இடத்தில் தைரியமாக உரையாடுவது, ஆய்வரங்கில் கலந்து கொள்வது இவை போல நேர்மறையாகக் கற்பனை செய்து பாருங்கள்.

அழகாக, கம்பீரமாக உடையணியுங்கள். நிமிர்ந்து நில்லுங்கள், நடங்கள். உங்களைக் கண்ணாடியில் பார்க்கையில் உங்களுக்கு தன்னம்பிக்கை ஊற்றெடுக்க வேண்டும். கண்ணாடி முன் நின்று பேசிப்பழகுங்கள். நிறைய நகைச்சுவைப் புத்தகங்கள், தன்னம்பிக்கை அளிக்கும் நூல்கள், பொது அறிவை மேம்படுத்தும் புத்தகங்கள் அல்லது இவை தொடர்பான வலைத்தளங்களைப் படியுங்கள்.

தண்ணீரில் இறங்காமல் கரையில் நிற்கும்வரை நீச்சல் பழகுவது என்பது முடியாது. நீங்களாகவே பேருந்தில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் உங்கள் சக பயணியிடம் மெல்லப் பொது விஷயங்களைப் பற்றிப் பேச்சுக் கொடுப்பது, உங்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு புதிய கதை அல்லது நகைச்சுவைத் துணுக்கைப் பகிர்ந்துகொள்வது என்று மெல்ல மெல்லப் பயிற்சி செய்யுங்கள். உங்கள் அலுவலகக் கூட்டங்களில் குறைந்த பட்சம் ஒரு கேள்வி கேட்பது அல்லது ஒரு யோசனை சொல்வது என்று முடிவு செய்து அதைச் செயல் படுத்திப்பாருங்கள்.

கொஞ்ச நாளில் 'பதட்டமா! போயே போச்சே, போயிந்தி, Its gone' என்பீர்கள்

Thursday, January 21, 2010

புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாகச் சொல்கிறார்கள் - தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற இணையதளம்


புலிகளின் ஊடகத் துறை - தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் இணையதளம் திடீரென உதயமாகி இருக்கிறது. 'இனி புலிகளின் அதிகாரபூர்வ இணையதளம் இதுதான்' எனவும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஜுனியர் விகடன் வார இதழ் வெளியிட்டுள்ள முகப்பு செய்தியில் தெரிவித்துள்ளது.

இது குறித்து நம்பகமான புலி ஆதரவாளர்கள் சிலர், ''அது புலிகளின் இணைய தளமேதான். இது நாள் வரை தேசிய தலைவர் பிரபாகரன் குறித்து புலிகள் தரப்பு

கருத்து சொல்லவே இல்லை. கே.பி-யை வளைத்த உளவு அமைப்புகள்தான் புலிகளின் கருத்தாக ஏதேதோ பரப்பிக் கொண்டிருந்தன. ஆனால், இனி புலிகளின் அனைத்து அறிவிப்புகளும் இந்த இணையதளத்தில்தான் இடம்பெறப் போகின்றன!'' என்று அடித்துச் சொல்கிறார்கள்.''இந்த புதிய இணைய தளத்தின் செய்தித் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ச.தமிழ்மாறனைப் பற்றி புலிகளின் தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் தெரியும்.

ச.தமிழ்மாறன் என்பது அவருடைய இயற்பெயர் அல்ல. சிங்கள அரசின் சதி வலையில் சிக்கி விடாதபடி இருப்பதற்காகவே புலிகளின் தலைமையக உத்தரவுப்படி ச.தமிழ்மாறன் என்ற பெயரில் அவர் இயங்கத் தொடங்கி இருக்கிறார். 45 வயதான அவர் அந்த இணைய தளத்தின் வாயிலாகவே விரைவில் தன் முகத்தைக் காட்டவிருக்கிறார். அப்போது புலிகளின் சர்வதேசத் தொடர்பு கள் அனைத்தும் ஊடகத் துறையின் இணையதளம் ஊடாக இணையும்.

இதோடு விரைவிலேயே புலிகளின் மாவீரர் பணிமனை, மக்கள் தொடர்பகம் உள்ளிட்டவையும் இயங்கத் தொடங்கும். மாவீரர் பணிமனையில் ஈழப் போரில் உயிர்விட்ட தளபதிகள், தியாகப் போராளிகளின் பெயர்ப் பட்டியல் விரைவிலேயே வெளியிடப்படும். மக்கள் தொடர்பகம் மூலமாக சர்வதேச தமிழ் தொடர்புகள் மேம்படுத்தப்படும். ஏற்கெனவே இயங்கி வந்த தமிழீழ மாணவர் அமைப்பு மறுபடியும் தொடங்கப் படவிருக்கிறது...'' எனச் சொன்னார்கள், புலிகளின் தொடர்பில் இன்றைக்கும் இருக்கும் அந்த நண்பர்கள்.

அவர்களின் துணையுடனேயே நாம் 'ச.தமிழ்மாற'னிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

''புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாகச் சொல்கிறீர்கள். ஆனால், சிங்கள ராணுவம் அவர் கொல்லப்பட்டு விட்டதாக இந்தியாவுக்கு சான்றிதழே கொடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே...?''

''தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார். பல தடவை இப்படியான நாடகத்தை இலங்கை அரசு நடத்தியதும், அதன் பின்னர் அதன் முகத்திரை கிழிவதும் வழக்கமான ஒன்றுதான். இப்போதும் அப்படித்தான் நடந்திருக்கிறது. இறப்புச் சான்றிதழ் என்பதும் ஒரு திட்டமிட்ட நாடகமே!''

''கடைசிக் கட்டப் போரில் இருந்து பிரபாகரன் எப்படித் தப்பினார்?''

''இலங்கை அரசுடனான இறுதிக்கட்டப் போரில் தேசியத் தலைவர் நேரடிச் சமரில் ஈடுபட்டார். இலங்கை அரசின் கடும் சுற்றி வளைப்பில் நாம் போர் யுக்தியினையும் தந்திரோ பாயத்தையும் பயன்படுத்தி தலைவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றோம். இதில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட கரும்புலிகள் வீரச் சாவைத் தழுவிக் கொண்டனர். முக்கியத் தளபதிகள் சகிதம் தலைவர் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது பயன்படுத்திய தந்திரோபாயத்தையும் போர் யுக்தியையும் இன்றைய சூழலில் சொல்வது சிறப்பாக இருக்காது.''

''அப்படியென்றால் சிங்கள ராணுவம் பிரபாகரனின் உடலாகக் காட்டியது எது?''

''சிதைக்கப்பட்ட தலைவரை ஒத்த அந்த உருவம் பற்றி ராஜபக்ஷே அல்லது சரத் ஃபொன்சேகாவிடம்தான் கேட்க வேண்டும். ஏனென்றால், அந்த அதீத மருத்துவ தொழில் நுட்பம் பற்றி அவர்களுக்குத்தானே தெரியும்.''

''வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால்தான் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சொல்லப்படும் கருத்து சிலரால் விமர்சிக்கப்படுகிறது. உரிய ஆதாரங்களை நீங்கள் சமர்ப்பிக்கலாமே?''

''தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. இருப்பினும் இன்றைய சூழலில் அவற்றை வெளியிடுவது பொருத்தமானதாக இருக்காது. சாலச் சிறந்த ஆதாரமாக வெகு விரைவிலேயே தேசியத் தலைவர் உலகத் தமிழர்கள் முன் தோன்றுவார்!''

''அவருடைய கருத்தாக ஏதும் வெளிவருமா? இல்லை... அவரே நேரடியாக வெளியே வந்து பேசுவாரா?''

''மாவீரர் தினம் மற்றும் சிறப்பு நேர்காணல்களில் தேசியத் தலைவர் எப்படித் தோன்றுவாரோ... அப்படியேதான் தோன்றுவார்!''

''ஈழப் போரில் கடைசிக் கட்ட நிலைமைகள் எப்படி இருந்தன? இறுதியில் ஆயுதங்களை மௌனிக்க வேண்டிய நிலைக்கு புலிகள் எப்படித் தள்ளப்பட்டார்கள்?''

''ஒரே நாளில் 25 ஆயிரம் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டதே இலங்கை அரசு போரை எவ்வளவு கொடூரமாக நடத்தியது என்பதற்கு சாட்சி. எமது மக்களை இலங்கை ராணுவம் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டது. அதனால்தான் பதில் தாக்குதலை தவிர்த்து, தலைவரின் உத்தரவின் கீழ் நாம் மௌனமானோம்.''

''புலிகளுக்கு ஆதரவாகக் காட்டிக் கொண்டு இன்றைய நிலையில் பல்வேறு இணைய தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நீங்கள்தான் அதிகாரபூர்வ இணையதளம் என்பதை எப்படி நம்புவது?''

''குழப்புகின்ற இணைய தளங்களும், குழப்புகின்றவர்களும் இருக்கிறார்கள் என்பது எமக்கும் தெரியும். இவற்றை எல்லாம் தாண்டி எமது தலைவரின் வழிகாட்டுதலுடன் இயங்கும் விடுதலைப் புலிகளை எமது மக்கள் சரியாக இனம்கண்டு கொள்வார்கள். எது நிஜம் என்பது அவர்களுக்குத் தெரியும்!''

''புலிகளின் உளவுத் துறை தலைவர் பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக சொல்லப்படுவது குறித்து..?''

''தேசியத் தலைவர் பாதுகாப்பாக உள்ளார் என்ற பதிலே இதற்கும் பொருந்தும்!''

''பிரபாகரனின் குடும்பத்தினர் முற்றாக அழிக்கப் பட்டு விட்டதாகச் சொல்லும் சிங்களத் தரப்பு, அதற்கு ஆதாரமாக பாலச்சந்திரன், துவாரகா போன்றோரை ஒத்த படங்களை வெளியிட்டி ருக்கிறதே?''

''தேசியத் தலைவரின் மகன் சார்ல்ஸ் ஆண்டனி களத்தில் வீரச்சாவு அடைந்தது உண்மை. தலைவரின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் பாதுகாப் பாகவே உள்ளனர்.''

''புலிகள் அடுத்த கட்டமாக எத்தகைய போராட்டத்தைக் கையிலெடுக்கப் போகிறார்கள்?''

''இது மக்கள் விடு தலைப் போராட்டம். எமது மக்கள் நலன் கருதித்தான் எங்க ளின் ஆயுதங்கள் மௌனமாகின. அமைதி வழியை விரும்பிய எம்மை சிங்கள அரசு தொடர்ந்து ஏமாற்றியே வந்தது. மீண்டும் எமது மக்களுக்கு சரியான தீர்வுத் திட்டத்தை சிங்கள அரசு முன்வைக்கா விட்டால், மக்கள் எழுச்சியுடன் எமது ஆயுதப் போராட்டம் தொடரும்!''

''கடைசிகட்டப் போரில் சர்வதேச சமாதானப் புள்ளிகளை நம்பி புலிகள் ஏமாந்து விட்டதாகச் சொல்லப்படுகிறதே... அது உண்மையா?''

''சர்வதேச உளவு வலையில் எமது சில முக்கிய உறுப்பினர்கள் வீழ்ந்தது உண்மைதான். அதனால் சில பாதிப்புகள் ஏற்பட்டதும் உண்மைதான். எமது போராட்ட வரலாற்றில் துரோகம் என்பது காலம் காலமாகவே நடந்துவரும் ஒன்றுதான். இவற்றையெல்லாம் தாண்டி எமது தேசியத் தலைவர் எமது போராட்டத்தை தொடர்ந்து வழி நடத்துகிறார்.''

''இலங்கையில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென புலிகள் விரும்புகிறார்கள்?''

''தேர்தல் குறித்து நாம் கருத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை. சிங்களப் பேரினவாதம் பற்றி எமது மக்கள் தெளிவுடனேயே உள்ளார்கள்.''

''போரில் உண்டான தோல்வி, பிரபாகரனை எந்தளவுக்கு வருத்தி இருக்கிறது?''

''மக்களின் இழப்பும் போராளிகளின் இழப்பும் தேசியத் தலைவரை பெரும் துயரத்தில் ஆழ்த்தி யது. எமது மக்களின் கொடூர மரணங்கள் தலைவரின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. இவற்றையெல்லாம் தாண்டி எமது மக்கள் சுதந்திர தமிழீழத்தில் வாழ வேண்டும் என்பதில் தலைவர் உறுதியாகவே இருக்கிறார்.''

''தந்தை வேலுப்பிள்ளையின் மறைவின்போது பிரபாகரனின் மனநிலை எப்படி இருந்தது?''

''உறவுகளுக்கு அப்பாற்பட்டு எமது மக்களை நேசிப்பவர், எமது தேசியத் தலைவர் பிரபாகரன். இதுவே உங்களின் கேள்விக்கான பதில்!''

டிவி க்களில் ஸ்கைப்...

வாய்ஸ் ஓவர் புரோட்டோகால் தொழில் நுட்பத்தின் உதவியுடன் இன்டர்நெட் இணைப்பில் உள்ள இருவர், தங்களின் பெர்சனல் கம்ப்யூட்டர், மொபைல் போன், கார்ட்லெஸ் போன், வீடியோ போன் ஆகியவற்றின் மூலம் திரையில் ஒருவரை ஒருவர் பார்த்து உரையாடிக் கொள்ளலாம். இதனால் ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி இருப்பவர்கள் கூட ஒரே அறையில் அமர்ந்து பேசுவது போன்ற நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த வகையில் இலவச அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பல நிறுவனங்கள் அளித்து வந்தாலும், ஸ்கைப் இதில் முன்னணி இடம் பிடித்துள்ளது.

இனி இந்த வகைத் தொடர்பினை, "டிவி'க்கள் வழியாகவும் தருவதற்கு ஸ்கைப் முன்வந்துள்ளது. முதன் முதலாக "டிவி'க்களில் இந்த தொழில் நுட்பத்தினை ஸ்கைப் கொண்டு வருகிறது. இதற்கான ஒப்பந்தத்தினை எல்.ஜி. மற்றும் பானாசோனிக் நிறுவனங்களுடன் மேற் கொண்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இன்டர்நெட் வசதி இணைந்த "டி.வி'க்களைத் தயாரித்து வழங்கி வருகின்றன.

இணையத் தொடர்பினை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படும் தொலைக் காட்சிப் பெட்டிகள் மூலம் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதற்கான புரோகிராமினை ஸ்கைப் வழங்குகிறது. பானாசோனிக் நிறுவனம் இது பற்றிக் கூறுகையில் தங்களின் 2010 Viera Castenabled HDTV செட்களை வைத்திருப் பவர்கள் இந்த தொழில் நுட்பத்தை எளிதில் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. வர்த்தக ரீதியாகப் பொது மக்களுக்கு இந்த வகை "டிவி'க்கள் வரும் மாதங்களில் கிடைக்கும். எல்.ஜி. நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் Netcast Entertainment Access தொழில் நுட்பம் உள்ள தங்கள் நிறுவனத்தின் 26 மாடல் எல்.இ.டி., எல்.சி.டி. மற்றும் பிளாஸ்மா டிவிக்களில் ஸ்கைப் புரோகிராமினைப் பயன்படுத்தி வீடியோ கால்களை மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

வீடியோ அழைப்புகளை இந்த "டிவி'க்கள் மூலம் மேற்கொள்ள, இந்த இரு நிறுவனங்களும், மைக்ரோபோன் இணைந்த வீடியோ கேமராக்களை "டிவி'க்களில் இணைக்கும் வகையில் வடிவமைத்துத் தர இருக்கின்றன. இன்டர்நெட் இணைப்பு குறித்துக் கூறுகையில் குறைந்தது விநாடிக்கு 1 மெகா பிட் வேகம் உள்ள இணைப்பு வேண்டும் என ஸ்கைப் அறிவித்துள்ளது. ஸ்கைப் இணைக்கும் வகையில் உள்ள டிவிக்களை எல்.ஜி. வரும் ஏப்ரல் மாதத்திற்குள்ளும், ஸ்கைப் இணைந்த எச்.டி.டி.விக்களை வரும் மார்ச் மாதத்திற்குள் பானாசோனிக்கும் தருவதாக உறுதி அளித்துள்ளன.

இதுவரை உயர் தொழில்நுட்ப ஆய்வு மையங்கள், சில சிறப்பு கருத்தரங்க அமைப்புகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த தொழில் நுட்பம் மக்களுக்காக வர்த்தக ரீதியில் கிடைக்கப் போகிறது என்பது, தொலை உணர்வு வசதியை மக்களுக்கு அளிப்பதில் நாம் இன்னும் ஒரு படி உயர்கிறோம் என்பதைக் காட்டுகிறது. இனி பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவில் வசிக்கும் தங்கள் பிள்ளைகளை, பெற்றோர்கள் தங்கள் டிவி திரைகள் மூலம் தங்களின் வீடுகளுக்கே கொண்டு வந்து பார்த்துப் பேசி மகிழலாம்.

Wednesday, January 20, 2010

ஒளியினை விஞ்சிய...

இயற்பியலில் சில அடிப்படையான அனுமானங்கள் உண்டு. குவாண்டம் இயற்பியலில் ஆரம்ப காலத்திலேயே , பிளாங்க்ஸ் மாறிலியும், பின்னர் ஒளியின் வேகம் ஒரு மாறிலி என்றும் நிறுவப்பட்டன. இதன் பின்னணி குறித்து பல விளக்கங்கள் மிக எளிமையாகவும் காணக்கிடைக்கின்றன.

இடம் போலவே, காலமும் சார்பு கொண்டது என குவாண்டம் இயற்பியல் கருதுகிறது. காலம் சார்பு கொண்டது என்பதால் ஒளியின் வேகத்தில் ஒரு பொருள் செல்லுமானால், அதன் தளத்தில் காலம் நீள்கிறது, இடம் குறுகுகிறது என்றும் கூறப்படுகிறது. நீள்தல், குறுகுதல் என்பது ஒரு நிலையினைச் சார்ந்தது; அதனோடு ஒப்பிடுதலின் விளைவே என்பதை இங்கு கருத்தில் கொள்ளவேண்டும்.

Theory of Relativity-யின் படி ஒளியின் வேகம் ஒரு மாறிலி. இரு வேறு வேறு தளங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று விலகிச் செல்வதாக அனுமானிப்போம். ஒளியின் வேகம் ஒன்றிலிருந்து மற்றொன்றில் நோக்கும்போது, அதிகரிக்கவேண்டும் (பேருந்தில் போகும்போது, எதிரே வரும் வாகனம் படுவேகமாகப் போவது போலத் தோன்றுமே- அதாவது நமது வேகமும் அவ்வண்டியின் வேகமும் கூடிவருவதால்- அதுபோல). ஆனால் குவாண்டம் அளவில் இது ஒளியின் வேகத்திற்கு சாத்தியமில்லை. அது c என்னும் மாறிலியாகவே இருக்கவேண்டும் என்கிறது ரிலேட்டிவிடி கோட்பாடு. இதனை கடு கட்டியான கணக்கியல் சமன்பாடுகள் மூலம் , மூளையைக் கலக்கி நம்மை ஒத்துக்கொள்ள வைத்துவிடுவார்கள்.

அப்படியே ஒளியின் வேகம் மாறுகிறது என்றால், ஒரு செயலின் விளைவுகள், செயலை விட முன்னே நடக்கவேண்டும்... செயலும், அதன் விளைவும் அடுத்தடுத்தே நடக்குமென்பது Causality Principle என்கிறார்கள்.

ஒரு பொருள் ஒளியின் வேகத்திற்கு மேலாக பயணிக்க முடியாது என்பது குவாண்டம் இயற்பியலின் விதி. ஒளியினை மின்காந்த கதிரியக்கம் என 1800களின் இறுதியில் மாக்ஸ்வெல் சமன்பாடுகள் மூலம் நிரூபித்து, மின்சாரப் புலம், காந்தப் புலம், அணுக்கருவின் மெலிய, வலிய விசைகள் என்னும் அடிப்படை விசைகள், புலங்கள் இணைக்கப்பட்டன. விடுபட்டு இருப்பது பொருள்களின் ஈர்ப்பு விசை மட்டுமே. இதனை பிற விசைகளுடன் இணைத்து பெரும் விசை இணைப்புக் கோட்பாடு ஒன்று உருவாக்க பல முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

குவாண்டம் இயற்பியலின் ஒளியின் வேகம் ஒரு எல்லை என்னும் கோட்பாட்டை அனைவரும் ஏற்றுக்கொண்டுவிடவில்லை, இன்னும். இது தவறு என நிரூபிக்க பல முயற்சிகள் நடைபெற்றன. இன்னும் தொடர்கின்றன. இன்னும் சொல்லப் போனால், ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகத்தில் துகள்கள்/அலைகள் பயணிக்க முடியும் என்று காட்டுவது ஒளியின் வேகம் ஒரு மாறிலியென்றும் அது ஒரு எல்லை என்பதையும் மறுதலிக்கும்.

இதுபோல மற்றொரு சவாலாக அமைந்தது- நுண்துகள்கள் ஒரு விசை அல்லது புலத் தடையைத் தாண்டி மறுபுறம் காணக்கிடைப்பது. எதிர் மின்புலம் கொண்ட ஒரு துகளை எடுத்துக் கொள்வோம். மற்றொரு எதிர் மின்புலம் அதற்குத் தடையாக அமையுமானாலும், அத்தடையை மீறி அத்துகள் காணக் கிடைக்கிறது. இதற்கு நியூட்டனின் இயற்பியல் விதிகள் பதில் அளிக்க முடிவதில்லை. குவாண்டம் இயற்பியல் இதனை துளைத்தல் (tunneling) என்கிறது. இரண்டிற்கும் முடிச்சுப்போட்டார் ஒரு ஜெர்மன் விஞ்ஞானி. நுண்ணலைகளை ஒரு அலை கடத்தி (wave guide) மூலம் செலுத்தினார். அக்கடத்தியின் விட்டம் நுண்ணலையின் அலைநீளத்திலும் குறைவாக வைத்தார். அதனால் அந்நுண்ணலை அதன்மூலம் செல்லத் தடையேற்பட்டது. இந்நுண்ணலை தடையில் சிக்கி மெதுமெதுவாக அழிந்து வர, இவ்வலைகள் மறுபுறம் வந்திருக்கக் கூடாது. ஆனால் அவை காணக் கிடைத்தன. குவாண்டம் துளைதல் என இக்கசிவினை முடிவு செய்தார்.

அக்கடத்தியின் மறுபுறம் மெதுவாக கசிந்து வரும் அலையின் வீச்சினைப் பெருக்கி அதன் அலைநீளத்தைக் கண்டறிந்தார். கசிந்த அலையின் முகடுகள் வரும் நேரத்தையும், தடைநீக்கியபின் வருகின்ற அனுப்பப்பட்ட நுண்ணலையின் முகடுகள் வரும் நேரத்தையும் ஆராய்ந்தார். கசிந்த அலைகளின் முகடுகள் நேரத்தில் முன்னரே வந்துவிடுவதால் அவ்வலை தடையினைக் குடைந்து ஒளியின் வேகத்தினும் மிஞ்சிய வேகத்தில் ஊடுபரவி வந்திருக்கிறது என நிரூபிக்கிறார்.

இது ஒரு பித்தலாட்டம் என்கிறார்கள் சில விஞ்ஞானிகள். நுண்ணலைகள் மாக்ஸ்வெல் சமன்பாடுகளைப் பொருத்து அமைவதால், ஐன்ஸ்டீனின் செயலையும் விளைவையும் குறித்தான கோட்பாட்டை மீறவில்லை என்கின்றனர். இதனை ஒரு கிராஃபிகல் சிமுலேஷன் மூலம் நிரூபிக்க முயல்வதைத்தான் இச்சுட்டியின் வீடியோவில் காண்கிறீர்கள். http://atdotde.blogspot.com/2005/09/faster-than-light-or-not.html

"சரி. இதனால் என்ன லாபம்?" என சாவகாசமாய் பல் குத்திக் கொண்டு கேட்பவர்களுக்கு- இதன் விளைவுகள் குவாண்டம் கோட்பாடு போலவே மற்றொரு புரட்சியாக அமையும்.

ஒளியின் வேகத்தைவிட வேகமாக ஒரு பொருள் பயணிக்க முடியுமானால், கால அச்சின் சீரான ஓட்டத்தை விட வேகமாகச் சென்று எதிர்காலத்தை எட்டிப் பார்த்துவிட முடியும். ஒரு செயலின் பின்னரே அதன் விளைவு அமையும் என்னும் யதார்த்தத்தினை உடைக்க முடியும். கிளி ஜோசியக்காரர்கள், "எதிர்காலம் பார்ப்பதுதான் நாங்க முன்னாடியே செய்யிறோமே சாமி!" என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம். கால வளைவில் பயணம் என்னும் அறிவியல் புனைகதை ஜல்லிகள் நிஜமாகலாம்.

இன்னும் இது முழுதுமாக நிரூபிக்கப் படவில்லை. ஒரு சோதனை முயற்சி மூலம் மட்டும் நிரூபணம் வந்துவிட முடியாது என்றாலும், இந்தச் சோதனையை பலரும் படு சீரியசாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சீனாவில் உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மையம்.

தகவல் தொழில்நுட்ப மென்பொருள் ஏற்றுமதித் துறையில் இந்தியாவிற்கு சவாலாகும் மாபெரும் இலக்குடன் சீனா களமிறங்கியுள்ளது.

அந்த நாட்டின் வடகிழக்கு மாகாணமான லயோனிங்கில் உள்ள டாலியான் என்ற கடற்கரை நகரில் உலகின் மிகப்பெரிய மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப மையம் ஒன்றின் கட்டுமானப் பணியை சீனா துவக்கியுள்ளது.

இது சீனாவின் வெறும் சிலிகான் பள்ளத்தாக்கு மட்டுமல்ல. முதல் தர பணிச் சூழலுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப நகரம் என்று டாலியான் நகர மேயர் பெருமையுடன் கூறுகிறார். இந்த மையம் 40 கி.மீ பரப்பளவில் கட்டப்படுவதுதான் இதன் சிறப்பம்சம்.

லியான் டியான்டி தகவல் தொழில்நுட்ப மையத்தை உருவாக்க 15 பில்லியன் யுவான்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முதலீடுகளை சீன மற்றும் ஹாங்காங் நிறுவனங்கள் சேர்ந்து செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மையத்தை உருவாக்குவதன் மூலம் 2012 ஆம் ஆண்டு வாக்கில் நாட்டின் ஒட்டு மொத்த மென்பொருள் ஏற்றுமதியை 3.5 பில்லியன் டாலர்களாக உயர்த்த திட்டமிட்டு வருகிறது. இது தற்போது செய்யப்படும் ஏற்றுமதியைக் காட்டிலும் மும்மடங்கு அதிகமாகும்.

மென்பொருள் மையமாக உருவாக்கப்படவுள்ள இந்த துணை நகரத்தில் உண்மையில் அலுவலக கட்டிடங்கள், குடியிருப்பு வசதிகள், கல்வி மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஆகியவையும் இடம்பெறும் என்று இந்த கட்டுமானப் பணிக்கு முதலீடு செய்து வரும் ஹாங்காங் நிறுவனமான ஷூய் ஒன் குழுமத் தலைவர் வின்சென்ட் லோ தெரிவித்தார்.

தரைத் தளப் பரப்பளவு மட்டும் 4 மில்லியன் சதுர மீட்டர்கள் கொண்ட இந்த கட்டுமானப்பணி முடிய 7 முதல் 10 ஆண்டுகள் தேவைப்படும் என்று தெரிகிறது.

முதல் கட்ட நடவடிக்கைகள் ஜப்பான் மற்றும் கொரிய நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக அமையவுள்ளது. ஆனால் முக்கிய இலக்கு ஐ.பி.எம் மற்றும் ஆரக்கிள் ஆகிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தேவைகளை மேம்படுத்துவதாய் இருக்கும் என்று தெரிகிறது.

வடகிழக்கு ஆசியாவிலேயே முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் ஏற்றுமதி மையமாக இந்த டாலியான் மையம் திகழும் என்று சீன தகவல் தொழில் நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல், டாலியான் நகரில் 2.5 பில்லியன் டாலர்கள் செலவில் வேஃபர் ஃபேப்ரிகேஷன் மையம் (Wafer Fabrications Facility) ஒன்றை கட்டுவதற்கான பணியை ஏற்கனவே துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டாலியானில் சத்யம் நிறுவனத்திற்கு ஏற்கனவே மையம் உள்ளது. தற்போது ஹெச்.சி.எல். நிறுவனம் ஒரு மையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

மென்பொருள் ஏற்றுமதித் துறையில் இந்தியாவின் சவாலை சமாளிக்க சீனா வரிந்து கட்டி களமிறங்கியுள்ளது. இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான்.

Sunday, January 17, 2010

எனக்கு பிடித்தப்பாடல்...

எனக்கு பிடித்தபாடல்...

Saturday, January 16, 2010

எனக்கு பிடித்தபாடல்...

Thursday, January 14, 2010

Kanavugal - Heartbreaking Melodious Love Song - By Vashanth, Kannan & Archana

Wednesday, January 13, 2010

புதினா துவையல்...

புதினா துவையல்



தேவையான பொருள்கள்:

புதினா - ஒரு கட்டு
உளுத்தம் பருப்பு - இரண்டு டீஸ்பூன
கடலை பருப்பு - இரண்டு டீஸ்பூன
பச்சை மிளகாய் - நான்கு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
பூண்டு - மூன்று பல்
இஞ்சி - சிறிதளவு
தேங்காய் - ஒரு துண்டு
புளி - சிறு எலுமிச்சை அளவு

செய்முறை:
புதினா சுத்தம் செய்து எண்ணெய் விட்டு வதக்க வேண்டும். உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு

இவற்றையும் வறுத்து கொள்ளவேண்டும். (அனைத்து பொருள்களையும் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து கொள்ள வேண்டும்.)

பிறகு வதக்கிய புதினா, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, புளி, உப்பு, பச்சை மிளகாய, கறிவேப்பிலை, கொத்தமல்லி பூண்டு அனைத்தும் மிக்ஸியில் கொஞ்சம் கொரகொரவென்று அரைத்து கொள்ள வேண்டும்.

தாளிக்க:
எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு , பெருங்காயம் போட்டு தாளித்து துவையலில் சேர்க்கவும்.

இவை இட்லி, தோசையுடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும் மற்றும் சாதத்துடன் துணை உணவாகவும் சாப்பிடலாம்.

செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்!!!

மின்சாரம் தேவையில்லை....ஆட்டோ டிரைவரின் அபார கண்டுபிடிப்பு...


ஒரே ஒரு அரச இலை இருந்தால் போதும். செல்போன் பேட்டரியை நொடிப்பொழுதில் சார்ஜ் செய்துவிடலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் இந்த அரிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளார்.

நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள், மின் வசதி இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் செல்போனை சார்ஜ் செய்ய முடியாமல் அவதிப்படுவதுண்டு. அந்தக் கவலையே இனி வேண்டாம். காட்டுப்பகுதியில்கூட செல்போனை ஈஸியாக சார்ஜ் செய்யலாம். அதற்கு ஒரு அரச இலை இருந்தால் போதும்.

ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம், மானுகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ டிரைவர். இவர், 2 நாட்களுக்கு முன்பு சவாரியை முடித்துக் கொண்டு இரவில் வீடு திரும்பினார். அப்போது ஒரு பள்ளத்தில் ஆட்டோ இறங்கி ஏறியதில் இவரிடம் இருந்த செல்போன் தவறி விழுந்தது. செல்போனில் இருந்த பேட்டரி தனியாக பிரிந்து விழுந்தது. சார்ஜ் முழுவதும் தீர்ந்துவிட்டதால் அவரால் செல்போனை பரிசோதித்துக்கூட பார்க்க முடியவில்லை.

அப்போது மழை தூறியதால் நனையாமல் இருப்பதற்காக செல்போனை அரச இலைகளால் சுற்றி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் வந்து பார்த்தபோது அவருக்கு ஒரே ஆச்சரியம். செல்போன் முழுவதுமாக சார்ஜ் ஆகி இருந்தது.

செல்போன் பேட்டரிக்கு இடையே ஒரு அரச இலை சிக்கியிருந்தது. அதை எடுத்ததும் சார்ஜ் போய்விட்டது. மீண்டும் அரச இலையின் காம்பை பேட்டரியின் இடையில் வைத்து 10 நிமிடம் கழித்து பார்த்தபோது முழுமையாக சார்ஜ் ஆகி இருந்தது.

அரச இலை காம்பை பேட்டரிக்கும் செல்போனில் உள்ள பின்னுக்கும் இடையில் சொருகி பல முறை ரவி சோதித்துப் பார்த்தார். காம்பு வைக்கப்பட்ட 10 நிமிடத்தில் பேட்டரி சார்ஜ் ஆனது. இதுபற்றி தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களிடம் ரவி தெரிவித்தார். அதை யாரும் நம்பவில்லை. அதன்பிறகு செல்போன் வைத்திருந்தவர்கள் சிலர் அரச இலையை வைத்து பரிசோதித்து பார்த்தனர். அவர்களது செல்போனிலும் சார்ஜ் ஆனதை கண்டு ஆச்சரியமடைந்தனர்.

பசுமையாக உள்ள அரச இலைகளை பயன்படுத்தினால் மட்டுமே சார்ஜ் ஆகிறது. இலையின் காம்பை செல்போனின் பின்பக்க மூடியை திறந்து பேட்டரி பின்னுக்கு இடையில் வைத்து 10 நிமிடம் ஆனதும் செல்போன் முழுமையாக சார்ஜ் அடைந்து விடுகிறது. மின்சார சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால் அதற்கான அடையாளம் தெரியும்.

அரச இலை மூலம் செய்தால் சார்ஜ் ஆவது நமக்கு தெரியாது. 10 நிமிடம் கழித்து பார்த்தால் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். அரச இலை செல்போனில் இருக்கும்வரைதான் சார்ஜ் இருக்கும். இலையை எடுத்துவிட்டால் சார்ஜ் முழுவதும் போய்விடும்.

வெளியிலோ அல்லது வெளியூர்களுக்கோ செல்லும்போது சார்ஜர் எடுத்துச் செல்ல மறந்து விடுபவர்கள், அந்த பகுதியில் பசுமையாக உள்ள அரச இலையை பயன்படுத்தி செல்போனை சார்ஜ் செய்து பேசலாம்Õ என்கிறார் ரவி.

                                                    தரவு - தமிழ்முரசு

Sunday, January 10, 2010

உயிரின் எடை எவ்வளவு???


உயிரின் எடை 21 கிராம். - இது ஒரு புதிய படத்திற்கான நாமகரணம்! இதன் கதை, ஒவ்வொரு மனிதனின் இறப்பிற்கு பின்பு அவன் மொத்த எடையில் இருந்து 21 கிராம் குறைவதாக ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுவே நம் உயிரின் எடையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. வெறும் உடலில் 21 கிராம் உயிரை வைத்துக் கொண்டு பல்வேறு விதமான கொடூரங்களையும் செய்யும் மனிதனை சிந்திக்க வைக்கும் விதமாக இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சத்ரியன் படத்திற்கு பிறகு இதில் மலையாள நடிகர் திலகன் ஒரு முழுமையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, ஒலி வடிவமைப்பு, இசை, இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்று நாயகனாகவும் நடித்து வருகிறார் இந்திரஜித். இவர், தண்டாயுதபாணி, கி.மு., சாமிடா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் என்பதும், திரைப்படக் கல்லூரி மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Saturday, January 9, 2010

இலவசங்கள் : இல்லாத ஊருக்கு போகும் பாதை : உரத்த சிந்தனை...

தமிழக அரசின் 2010ம் ஆண்டுக்கான கவர்னர் உரையில், இலவசங்கள் அள்ளித் தெளிக்கப்பட்டதை அகில இந்தியாவும் ஆச்சரியமும், கிண்டலும் கலந்த உணர்வுடன் கவனித்து, கருத்துக்களை வெளியிட்டுள்ளது. பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று, "தமிழக அரசின் நல்வாழ்வுத் திட்டம் எனும் போர்வையிலான இலவசங்கள், ஒரு கடிதம் அதன் உறையை விட பெரிதான தாளில் எழுதப்பட்டு, அந்த உறையினுள் திணிக்க முடியாத அளவு உள்ளது' என கிண்டலடித்துள்ளது. அதாவது, பட்ஜெட்டில் பணம் இருக்காது எனக் கூறுகிறது இந்தப் பத்திரிகை.

பொருளாதார நிபுணர்களும், சமூக, அரசியல் ஆய்வாளர்களும், "ஓட்டு வங்கி அரசியலின் உச்சக்கட்டம்' என, இந்த இலவசங்களை குறிப்பிட்டு, தங்கள் கவலையை வெளிப்படுத்துகின்றனர். மத்திய அரசின் 2001ம் ஆண்டு கணக்குப்படி, தமிழகத்தில் 36 லட்சத்து 32 ஆயிரத்து 119 குடும்பங்கள் தான் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவை. ஆனால், ஜூன் 16, 2008 கணக்குப்படி, தமிழக அரசு, 59 லட்சத்து 55 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச, "டிவி' அனுமதித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கப் பட்டு, ஏழைகள் மட்டுமின்றி, கலர் "டிவி' இல்லாத எல்லாருக்கும் இலவச, "டிவி'க்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்து விட்டனர். தி.மு.க., ஆட்சிக் காலங்களில் அளிக்கப்பட்ட அதிகமான சம்பளம் மற்றும் சலுகைகள் விளைவாக தமிழக அரசின் துண்டு விழும் பட்ஜெட்டில் கணிசமான பகுதி, அரசு ஊழியர் சம்பளம் சார்ந்த செலவுகள். அதாவது, 2008-09ம் ஆண்டுக்கான இறுதி பட்ஜெட் மொத்த செலவினம் 55,402 கோடியே 56 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய். இதில், 24 ஆயிரத்து 358 கோடி ரூபாய், அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் பல அரசு திட்டங்களில் பணிபுரிபவர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் சார்ந்த செலவினங்கள். இது, பட்ஜெட்டில் 52 சதவீதம். உலகின் எந்த பணக்கார, நடுத்தர நாடுகளிலும் பட்ஜெட்டில் இவ்வளவு சதவீதம் ஊழியர் செலவினங்களுக்கு ஆவதில்லை.

இந்த முறை ஆட்சியமைக்கப்பட்டு, 44 மாதங்களில் தி.மு.க., அரசு அள்ளித் தெளித்த இலவசங்கள், சலுகைகள் அதிகமாகி, நமது பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிகோலும் கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவையான நிதி, அறவே அற்றுப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கடன் தள்ளுபடிகள், குறிப்பாக தொழில் தொடங்க வாங்கப்படும் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவது, அடுத்து கடன் பெறுபவர்கள் யாரும் கடனை திருப்பிச் செலுத்தாத மனநிலையை உருவாக்கும். இந்த அடிப்படை உண்மையை அரசு அதிகாரிகள் பல முறை அரசியல் தலைவர்களுக்கு, குறிப்பாக முதல்வர்களுக்கு எடுத்துக் கூறியிருக்கின்றனர். உயர் அதிகாரிகள் பலரும் முதல்வரின் கவனத்தைக் கவர, போட்டி போட்டு இலவசம் மற்றும் நடைமுறைக்கு ஒவ்வாத பல செலவினங்களை உருவாக்கி, நமது மாநில பொருளாதாரத்தை பாழடித்து விட்டனர்.

தமிழக அரசு தனது பட்ஜெட்டை, துண்டு விழாத வகையில் திட்டமிடல் வேண்டும். அரசு கடனுக்கு வட்டியாக, கடந்த ஆண்டு 6,227 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. கடன் தொகை 71 ஆயிரத்து 668 கோடி ரூபாயை தாண்டிவிட்டது. மக்களுக்கு பொது நன்மைகளும், பின்வரும் சந்ததியினருக்கு வளமான வாழ்க்கைத் தரமும் உருவாக, ஏழைகள் நிறைந்த ஒரு நாட்டில் இரண்டு துறைகள் சிறப்பாக கவனிக்கப்பட வேண்டும். அவை, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள். கல்வியில் சமச்சீர் எனும் திட்டத்தை தவறாக புரிந்து கொண்டு, கல்வியின் தரத்தை உயர்த்தாமல், எல்லா பாடத் திட்டங்களையும் சரிசமமாக்கி, தரமான கல்வியை அழித்தொழிக்கும் நடைமுறைகள் ஆரம்பமாகியுள்ளன.

சுகாதாரத்தைப் பொறுத்தவரை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அடித்தட்டு கிராம சுகாதார மையங்களை வலுப்படுத்தாமல், தனியார் மருத்துவமனைகளை வளப்படுத்தும் காப்பீட்டுத் திட்டத்தை அரசு ஊக்கப்படுத்துகிறது. கிராமப்புறங்களில் 2001ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி, 21 லட்சம் வீடுகள், "தற்காலம்' என பெயரிடப்படுகின்றனவாம். அவை கூரை மற்றும் மண் சுவர்களால் ஆன வீடுகளாம். அவற்றை நிலையான குடியிருப்புகளாக ஆறு வருடங்களில் மாற்றப் போவதாக, "கலைஞர் வீட்டு வசதி திட்டம்' அறிவிக்கிறது. இத்திட்டத்தில் ஒரு கூரை வீட்டிற்கு 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்; கான்ட்ராக்ட் கிடையாது; வீட்டின் சொந்தக்காரரே தனது வீட்டை கான்கிரீட் வீடாகக் கட்டிக்கொள்ள இத் தொகை வழங்கப்படுமாம். நடைமுறைக்கு ஒத்துவராத ஏட்டுச் சுரைக்காய் திட்டம் இது என்பதற்கு, இதை விட சிறந்த காரணம் கிடையாது. மத்திய அரசின் திட்டமான இந்திரா காந்தி குடியிருப்புத் திட்டத்தை பின்பற்றி இத்திட்டம் அமைக்கப்படுகிறது என்பதால், கட்டுமானப் பொருட்களை அரசின் ஊராட்சி அதிகாரிகள் வாங்கி, கூரை வீட்டு ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்ட அளிப்பார்களாம். இப்பொருட்கள் வாங்க கமிஷன் உண்டல்லவா?

அடுத்து பயனாளிகள் தேர்வு, ஓட்டு வங்கி முறையை பின்பற்றி அடிமட்ட கட்சித் தொண்டர்களால் நடத்தப்படுமா எனும் கேள்வி எழுகிறது. சமத்துவபுரம், காஸ் அடுப்புகள், கலர் "டிவி' வினியோகம் தந்த அனுபவப்படி, கீழ்மட்ட கட்சியினர் தயாரித்த பட்டியல்படி பயனாளிகள் தேர்வு இருக்கும் என, இப்போதே கிராமத்து மக்கள் முணுமுணுக்கின்றனர். எல்லாவற்றையும் விட, மூன்று ஆண்டுகளில் நடந்த இலவசங்களினாலான செலவுகள், நமது பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளதை மத்திய அரசு இந்த மாதம் வெளியிட்டுள்ள, "ஸ்டேட் டொமஸ்டிக் ப்ராடக்ட்' (குஈக) எனும் மாநில பொருளாதார வளர்ச்சி குறியீடு வெளிப்படுத்துகிறது.

இதற்கு முழுப் பொறுப்பும், வளர்ச்சித் திட்டங்களை வகுக்காமல், ஓட்டு வங்கி அரசியலுக்காக இலவசங்களை அள்ளித் தெளிக்கும் மாநில அரசே! இது பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல், வரும் நிதி ஆண்டில் 1,800 கோடி ரூபாயில் இலவச கான்கிரீட் வீடுகள், 400 கோடியில் நவீன சட்டசபை வளாகம், புதிய நூலகம் போன்றவற்றை உருவாக்குகின்றனர். "இப்படி நிறைய செலவுகளை செய்த பின்னர், அவைகள் சரியாக நடக்கின்றனவா என்பதை பற்றி விவாதித்து, குறைகளை திருத்துவதற்காகத்தான், மக்களுக்காக மக்கள் பணத்தில் இந்த நவீன சட்டசபை வளாகம் அமைக்கப்படுகிறது' என, ஜால்சாப்பு வேறு. கிராமப்புறங்களில் திட்டங்கள் நிறைவேறுவதை கிராமப்புறங்களில் நேரடியாக தணிக்கை செய்யாமல், சென்னையில் பளபளக்கும் நவீன அடுக்கு மாடிக் கட்டடங்களில் விவாதித்து மேற்பார்வையிடுவார்களாம். வாழ்க ஓட்டு வங்கி அரசியல்!

   - என்.முருகன், சமூகவியலாளர், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி

Friday, January 8, 2010

உலகின் மிக உயரமான கட்டடம் ( திறப்பு விழா)...

மனிதனின் மகத்துவம்...


துபாய்: உலகிலேயே உயரமான கட்டிடமான, ‘புர்ஜ் துபாய்’இன்று (ஜனவரி 04 2010 ) திறக்கப்படுகிறது. உலகின் எந்தவொரு கட்டிடமும் இல்லாத அளவுக்கு இதன் உயரம் 2,700 அடியை தாண்டும்.

தற்போது உலகின் உயரமான கட்டிடமாக கருதப்படுவது தைவானில் உள்ள ‘தைப்பே 101′. தைப்பே நகரின் பொருளாதார மையக் கழகத்திற்கு சொந்தமான இந்த கட்டிடத்தில் 101 மாடிகள் உள்ளன. இதன் உயரம் ஆயிரத்து 671 அடியாகும். இதைவிட ஆயிரம் அடியாவது அதிகமாக உருவாக்க வேண்டும் என்ற திட்டத்துடன் ‘புர்ஜ் துபாய்’ அமைக்கப்பட்டது.

உலகின் உயரமான கட்டிடம் என்பது மட்டுமல்ல இந்த பூமியில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட வடிவமைப்புகளிலும் உச்சத்தில் இருப்பது ‘புர்ஜ் துபாய்’ தான. டிவி சிக்னல்களுக்காக அமெரிக்காவின் வடக்கு டகோடாவில் அமைக்கப்பட்ட ‘கேவிஎல்வி- டிவி’ டவர் 2,063 அடி உயரமானது.

தற்போது இந்த உயரத்தையும் ‘புர்ஜ் துபாய்’ மிஞ்சியுள்ளது. தற்போது 59 பில்லியனுக்கு மேல் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் துபாய் வேர்ல்டின் கிளை நிறுவனமான எம்மார் பிராப்பர்டீஸ் தான் இதை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நிலவரம் மோசமான நிலையில் இருந்தாலும், கட்டிட திறப்பு விழா திட்டமிட்டபடி (திங்கள் கிழமை) இன்று கோலாகல வாணவேடிக்கையுடன் நடைபெற்றது. ஒளி, ஒலி, நீர் மற்றும் பட்டாசுகளின் மூலம் வர்ணஜாலங்கள் நடத்தப்பட்டு திறப்பு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது.

மொத்தம் 169 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தின் ஒவ்வொரு நிலைகளிலும் குறைந்துகொண்டே செல்லும் என்பது மற்றொரு சிறப்பு. தரை தளத்தில் உள்ள வெப்ப நிலையை ஒப்பிடுகையில் உச்சி மாடியில் 10 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் குறைந்து குளிர் அதிகரிக்கும்.

மேலும், இதன் 76வது மாடியில் உலகிலேயே உயரமான நீச்சல் குளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு 158வது மாடியில் ஒரு மிக உயர்ந்த மசூதியும் உள்ளது. 900 ஸ்டுடியோக்கள், நூற்றுக்கணக்கான அப்பாட்மென்டுகள் மற்றும் இத்தாலிய ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட ஹோட்டல்களும் உள்ளன.

பல்வேறு சிறப்புகள் மற்றும் சாதனைகளை உள்ளடக்கிய இந்த கட்டிடத்தை கட்டி எழுப்புவதில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக குற்றச்சாட்டுகளும் உள்ளன.

கட்டுமானப் பணிகளுக்கு அடிமைத் தொழிலாளிகள் பயன்படுத்தப்பட்டதாகவும், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து அழைத்துவரப்பட்ட தொழிலாளிகளை முழு நாளும் வேலைவாங்கிவிட்டு 5 டாலர் மட்டுமே கூலியாக கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

அதோடு, இவ்வளவு பெரிய கட்டிடத்திற்கு தேவையான மின்சாரத்துக்கு எங்கே போவது என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் புகார் கூறிவருகின்றனர்.

ஒருநாளைக்கு இந்த கட்டிடத்திற்கு தேவைப்படும் ‘ஏசி’ வசதி, 12 ஆயிரத்து 500 டன் ஐஸ் கட்டியை உருக்குவதற்கு சமம் எனக் கூறப்படுகிறது.

இதற்காக பல மில்லியன் கேலன் தண்ணீர் தேவைப்படும். இவையெல்லாம் கணக்கிட்டு பார்த்தால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தலை உண்டாக்குவதாக பல தரப்பினரும் குறை கூறி வருகின்றனர்

நன்றி :
EAST ADIRAI














































Sunday, January 3, 2010

மதிமயக்கும் மாய வலை : உரத்த சிந்தனை...

சினிமாவிற்கும், தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு அலாதியானது. மற்றவர்களுக்கு சினிமா வெறும் பொழுதுபோக்கு. ஆனால், இங்கே அது ஒரு வழிபாடு. சினிமா அரங்குகளை விட்டு மக்கள் விலகினாலும், சினிமா அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து விலகுவதாக இல்லை. அது தொலைக்காட்சி மூலம் அவர்களை வீட்டுக்குள் சிறைப்படுத்தி, மக்களின் மூளையை, சிந்திக்கும் திறனை, மழுங்கடித்து வருகிறது.

சினிமா தொடர்புடைய ஐந்து பேர் இதுவரை தமிழக முதல்வர்களாக வந்துள்ளனர். ஆனால், அடுத்த முதல்வரும் சினிமா உலகிலிருந்து தான் வரவேண்டும் என்ற மனோபாவத்திற்கு, தமிழர்களை தள்ளியிருப்பது தான் மடமை. ஆபாசமாக நடிக்கும் நடிகைகளுக்கு கோவில் கட்டுவது, நடிகர் - நடிகையருக்கு தங்கள் ரத்தத்தால் கடிதம் எழுதுவது, காணிக்கை என்ற பெயரில் தங்கள் விரலை வெட்டி நடிகனுக்கு அனுப்பும் சைக்கோ ரசிகர்கள், மகளின் கொலுசை அடகு வைத்து, தன் அபிமான ஹீரோவின் படத்திற்கு பிளாக்கில் டிக்கெட் வாங்குவது, நடிகைகளை தேவதைகளாக எண்ணி, அவர்களையே மணப்பேன் என்று அடம்பிடித்து தங்கள் வாழ்வை அழித்து கொள்ளும் இளைஞர்கள்; தொழிலையும், பணத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வரும் தொழிலதிபர்கள் ஏராளம். தங்கள் அபிமான நடிகர் நடித்த படம் ரிலீஸ் ஆனால், வீடு, குடும்பம், வேலை, படிப்பு என்று அனைத்தையும் மறந்து தியேட்டரிலேயே தவம் கிடக்கின்றனர். நடிகருக்கு கட்-அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்து, அரங்கு இருக்கும் சாலையை ஸ்தம்பிக்க செய்து, போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகின்றனர்.

இந்த அப்பாவி இளையதலைமுறையினருக்கு பதிலுக்கு கிடைத்தது என்ன? தங்கள் அபிமான நடிகரை, அவரது பிறந்தநாளில் வாழ்த்து சொல்லும் வாய்ப்பு கூட கிடைப்பதில்லை. சொல்லி வைத்தாற்போல் ஒவ்வொரு பிரபல நடிகரும், தம் பிறந்தநாளுக்கு முன் ஒரு அறிக்கை விடுவர். தான் ஷூட்டிங்கில் வெளிநாட்டில் இருப்பதால், பிறந்தநாள் வாழ்த்து சொல்ல நேரில் வரவேண்டாம் என்று அறிக்கை கூறும். இந்த அப்பாவி அதையும் நம்பி, நடிகரை வாழ்த்துவார். அந்த நடிகர்களோ நட்சத்திர ஓட்டலில் கொட்டம் அடிப்பர். இந்த ரசிகர்களால் அந்த நட்சத்திர ஓட்டல்களுக்குள் நுழைய முடியுமா? தங்கள் திறமையை, கல்வியை, உழைப்பை சரியான விதத்தில் அவர்கள் பயன்படுத்திக் கொண்டால், நட்சத்திர ஓட்டலுக்குள் நுழைவதும் சாத்தியம். தங்கள் துறைகளில் நடசத்திரங்களாக ஜொலிப்பதும் சாத்தியம். இளைஞர்கள் இதையெல்லாம் எண்ணிப் பார்த்து, தங்களுக்கு கிடைத்திருக்கும் பொன்னான பொழுதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி என்ன தான் இந்த தமிழ் சினிமாவில் இருக்கிறது என்று ஆராய்ந்தால், குமட்டல்தான் வருகிறது. பன்ச் டயலாக், குத்து பாட்டு அல்லது ஐயிட்டம் சாங், நாலு பைட்டு, நாலு பாட்டு, காதல் இந்த கண்றாவியை தாண்டி, எந்த தமிழ் சினிமாவும் இல்லை. காதல் மட்டும் தான் வாழ்க்கையா? வாழ்வில் வேறு கதைகளே இல்லையா? மக்களுக்கு காதலை விட்டால் வேறு பிரச்னைகளே இல்லையா?

ஏழைகளுக்கு உதவுவதாக, பணக்காரர்களின் கறுப்பு பணத்தை மீட்டு கதாநாயகன் சாகசம் செய்யும் சில கதைகளும், சமீபத்திய சினிமாவில் உண்டு. கறுப்பு பணத்தில் படுமெடுத்து, வருகிற லாபத்தையோ, நஷ்டத்தையோ கணக்கில் காட்டுவதற்காக சினிமாக்காரர்கள், செய்யும் தொழில் யுக்தி பற்றி, சமீபத்தில் ஒரு பத்திரிகையில் படித்தேன். இவர்கள் சினிமாவில் மட்டுமே ஏழைகளுக்கு உதவுவார்களா? நிஜத்தில் ஏழைகள் கஷ்டப்பட்டு வாங்கிய நிலங்களையும், பினாமி பெயரில் அபகரிப்பவர்களாகத்தானே கதாநாயகர்கள் உள்ளனர். தங்கள் தகுதிக்கு மீறி சம்பாதிக்கும் சினிமாக்காரர்களின் ஊதியம் கோடிக்கணக்கில் எகிறியது எப்படி? சினிமா தியேட்டரில் கண்டபடி டிக்கெட் விலையை உயர்த்தியதால் தான். அது யாருக்கு லாபம் என்று அறியாத ரசிகர்கள், கண்களை மூடிக் கொண்டு கிடைத்த விலைக்கு டிக்கெட்டை வாங்குகின்றனர். மக்களுடைய அன்றாட தேவைக்கான அரிசி, பால், தானியம், காய்கறி, போக்குவரத்து எல்லா செலவுகளும் உயர்ந்திருக்கிறது.

தமிழ் சினிமாவிற்கு தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி ரத்து என்று சலுகை கொடுத்ததால் மக்களுக்கு என்ன பயன்? சினிமாக்காரர்கள் கொள்ளை லாபம் அடிக்க வழிவகுக்கவே, கேளிக்கை வரி ரத்து என்ற சலுகை உதவும். தமிழ் சினிமாவில் தமிழர்களுடைய வாழ்வோ, அவர் தம் பிரச்னைகளோ, பண்பாடோ இல்லை. வசனங்களும், பாடல்களும் தரம் தாழ்ந்து போயுள்ளன. ஆனால், தமிழில் பெயர் வைத்தால் மட்டும் போதும் என்ற அறிவிப்பு சரி தானா என்பதை, தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், ஒரு சம்பவத்தினால் தான் இரவு முழுவதும் தூங்கவில்லை என்றார். சுனாமி என்ற இயற்கை பேரழிவு, ஐந்து வருடங்களுக்கு முன், தமிழக கடற்கரையோர கிராமங்களை தாக்கிய போது, கடலோர மக்கள், உயிர், உடைமை இழந்து வாடியபோது, எப்படி நிம்மதியாக தூங்கினார் ரஜினி? அப்ப இங்கே வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ததும், களப்பணி ஆற்றியதும் இந்தி நடிகர் விவேக் ஓபராய் தான்.

எம்.ஜி.ஆர்., நடித்த சினிமாக்களில், சிகரெட் பிடிப்பது, மது குடிப்பதை எல்லாம் எதிர்த்து காட்சிகள் இருக்கும். சொன்னதை போலவே, அவரும் அந்த கெட்ட பழக்கங்களிலிருந்தும் விலகியிருந்தார். அவர் படங்களில், பெண்களை உயர்வாக சித்தரித்தார். அவருடைய படங்களில் மூடநம்பிக்கைகள் கிடையாது. அதே சமயம் மூடநம்பிக்கைகளை ஒழிக்கிறேன் என்று கூறி, மற்றவர்களின் நம்பிக்கையையும் அவர் கொச்சைப்படுத்தவில்லை. யாருடைய மனதையும் காயப்படுத்தவில்லை. அதனால் தான் அவரை மக்கள் புரட்சித் தலைவர் என்ற ஸ்தானத்திற்கு கொண்டு சென்றனர். தமிழக முதல்வராக தொடர்ந்து மூன்றுமுறை தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், அவர் ஒருவர் தான். சும்மா கிடைத்துவிடவில்லை அந்த சிம்மாசனம், உண்மையாக அவர் மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தார். வறுமையை போக்கவும், கல்விக்காகவும் வாரி வழங்கிய வள்ளல். அதனால் தான், காலம் கடந்தும் நினைக்கப்படுகிறார்; போற்றப்படுகிறார்.

இப்பொழுது, அத்தனை நடிகர்களும் சேர்ந்தாலும், அவருக்கு ஈடாக முடியுமா? அவர் இறந்தும் வாழ்கிறார். இன்று வரும் அனைத்து படங்களிலும் கதாநாயகன் (வில்லன் அல்ல) நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும் காட்சி கண்டிப்பாக உண்டு. சைட் டிஷ், நைன்ட்டி கட்டிங், குவார்ட்டர் போன்ற அதி முக்கியமான வார்த்தைகளை, இவர்களின் புண்ணியத்தால் சிறுவர்களும் அறிந்து வைத்து உள்ளனர். இன்று, சாராயக் கடைகளில் டீன்-ஏஜ் பசங்களை பார்க்கையில் வயிறு எரிகிறது. உறங்கிக் கிடக்கும் தமிழர்களின் உணர்வு விழித்துக் கொண்டால், இவர்கள் சம்பளமெல்லாம் இப்படி கோடிக்கணக்கில் ஏறாது; அது மட்டும் நிச்சயம்.

                                         - அப்சல், எழுத்தாளர்/சிந்தனையாளர்