Monday, December 28, 2009

விவேகானந்தரின் பொன்மொழிகள்...


*கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

*உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

*செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

*வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.

*இளைஞர்களே, உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால், ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.

*பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.

*பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

*இந்தியாவை முன்னேற்றமடையச் செய்ய விரும்பினால், பாமர மக்களுக்காக நாம் வேலை செய்தாக வேண்டும்.

*அடிமைகள் எல்லோருக்கும் பெரிய சனியனாக இருப்பது பொறாமையே ஆகும்.

நமது நாட்டைப் பிடித்த சனியனும் அதுதான்.ஏழை எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும்.

*பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.

*உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.

*வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

*தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

*இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.

*வீரர்களே, கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்!
தளைகளிலிருந்து விடுபடுங்கள்!

*இளைஞனே, வலிமை, அளவற்ற வலிமை - இதுவே இப்போது தேவை.

சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு!

*உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.

*நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.

*எவனுடைய இதயம் ஏழைகளுக்காக ரத்தம் வடிக்கிறதோ அவனையே நான் மகாத்மா என்பேன்; மற்றவர்கள் துராத்மாக்களே.

*எப்போதும் பொறாமையை விலக்குங்கள்.

இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது.
இது என் உறுதியான நம்பிக்கை.

*சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும்.

சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.

*நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது.

வீரர்களாகத் திகழுங்கள்!

தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரம் ஆகும்.

*அளவற்ற பலமும் பெண்ணைப் போல் இரக்கமுள்ள இதயமும் பெற்றவனே உண்மை வீரன்.

*இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.

ஓ சிங்கங்களே! நீங்கள் செம்மறியாடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்.

சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்..

*உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.

*என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

*தீண்டாமையை தீவிர கொள்கையாகவும் உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.

*பெரிய புத்தகங்களை படிப்பதாலும் அவ்வாறு படித்து பேரறிஞர் ஆவதாலும் ஆன்மிக உணர்வைப் பெற முடியாது என்பது நிச்சயம்.

*சங்கங்கள் ஏற்படித்தி கூட்டங்கள் சேர்த்து எவரும் ஆன்மிக உணர்வை பெற முடியாது. அன்பின் மூலமாகத் தான் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு ஆன்மிக உணர்வை செலுத்த முடியும். ஆன்ம ஞானத்தைப் பெற விரும்பும் ஒருவன் தொடக்கத்தில் புற உதவிகளைப் பெற்று சுயபலத்தில் நிற்க வேண்டும். ஆன்ம ஞானம் கிட்டிய பின் பிற உதவிகள் தேவையில்லை.

*கல்வி மூலம் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. தன்னம்பிக்கை மூலம் தன்னுள் உறங்கிக் கிடக்கும் ஆன்மா விழித்துக் கொள்கிறது. கைக்கோ, வாளுக்கோ ஆற்றல் ஏது? ஆற்றல் முழுவதும் ஆன்மாவிலிருந்தே வெளிப்படுகிறது.

*எல்லாப் பெருமையையும், எல்லா ஆற்றலையும், எல்லாத் தூய்மையையும் ஆன்மா தூண்டுகிறதே தவிர, ஆன்மாவைத் தூண்டுவது எதுவும் இல்லை.

*ஆன்மிக உணர்வை பெறாதவரை நமது நாடு மறுமலர்ச்சி அடையாது. ஆன்மிக வாழ்க்கையில் பேரின்பம் பெறாமல் போனால், புலனின்ப வாழ்க்கையில் திருப்தியடைய முடியாது. அமுதம் கிடைக்காமல் போனால் அதற்க்காகக் சாக்கடை நீரை நாடிச் செல்லமுடியாது.

*ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடிய போதிலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும் ஆன்மிகம் விழிப்படையாவிட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை.

* ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளப்பதற்குரிய மிகச் சிறந்த கருவி, அந்த நாடு பெண்களை எப்படி மதிக்கிறது என்பதை அறிவதாகும்.எங்கு பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ,அங்கே தேவதைகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.எங்கே அவர்கள் மதிக்கப் படவில்லையோ,அங்கே எல்லா காரியங்களும் முயற்சிகளும் நாசமடைகின்றன.எந்த நாட்டில்,எந்த குடும்பத்தில் பெண்களுக்கு மதிப்பு இல்லையோ, எங்கே அவர்கள் துயரத்தோடு வாழ்கிறார்களோ அந்த நாடும் குடும்பமும் உயர்வடைவதற்கான நம்பிக்கையே இல்லை!

*தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.

*எல்லாவற்றிலும் பரம் பொருளைப் பார்ப்பதுதான் மனிதனின் லட்சியமாகும். எல்லாவற்றிலும் பார்க்க முடியாவிட்டாலும் நாம் நேசிக்கும் ஒரு பொருளிலாவது பார்க்க வேண்டும். பிறகு இன்னொன்றில் பார்க்க வேண்டும். இப்படியே இந்தக் கருத்தை விரிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

*எல்லாவற்றையும் கடவுளாகப் பார்ப்பதற்கு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு சமயத்தில் நிச்சயம் அந்த லட்சியத்தை அடைந்துவிடுவோம்.

*தீமையை எதிர்க்காதீர்கள், அகிம்சையே மிக உயர்ந்த ஒழுக்க லட்சியம் என்று ஆச்சாரியார்கள் உப தேசித்து இருக்கிறார்கள். இந்த உபதேசத்தை நம்மில் சிலர் அப்படியே கடைப்பிடிக்க முயல்வோமானால் சமுதாய அமைப்பே இடிந்து தூள் தூளாகி விடும்.

*அயோக்கியர்கள் நம் சொத்துக்களையும் நம் வாழ்க்கையையும் பறித்துக் கொண்டு தங்கள் விருப்பப்படி நம்மை ஆட்டி வைப்பார்கள். இது நமக்குத் தெரியும். இத்தகைய அகிம்சை சமுதாயத்தில் ஒரேயொரு நாள் கடைப்பிடிக்கப்பட்டாலும் கூட பெரும் நாசமே விளைவாக இருக்கும்.

*ஆனாலும் தீமையை எதிர்க்காதீர்கள். என்ற உபதேசத்தின் உண்மையை உள்ளுணர்வின் மூலமாக நம் இதய ஆழங்களில் உணரவே செய்கிறோம். இது மிக உயர்ந்த லட்சியமாக நமக்குத் தோன்றுகிறது. என் றாலும் இந்தக் கோட்பாட்டை உபதேசிப்பது என்பது மனித குலத்தின் பெரும் பகுதியை நிந்திப்பதற்கே சமமாகும்.

*அதுமட்டுமல்ல,தாங்கள் எப்போதும் தவறையே செய்கிறோம் என்ற எண்ணத்தை அது மனிதர்களிடம் உண்டாக்கிவிடும். அவர்கள் எந்த வேலையைச் செய்தாலும் அவர்களின் மனசாட்சியில் சந்தேகங்கள் எழுந்த வண்ணமே இருக்கும். இது அவர்களை பலவீனப்படுத்துகிறது.

*இவ்வாறு தொடர்ந்து தங்களை மறுப்பது, மற்ற பலவீனங்கள் உண்டாக்கும் தீமையை விட அதிக தீமையைத் தரும். எந்த மனிதன் தன்னைத்தானே வெறுக்கத் தொடங்கிவிட்டானோ, அவனுக்கு அழிவின் வாசல் எப்போதோ திறந்துவிட்டது. இது ஒரு நாட்டிற்கும் பொருந்தும். நமது முதல் கடமை நம்மை நாம் வெறுக்காமல் இருப்பதுதான். ஏனென்றால் நாம் முன்னேற வேண்டுமென்றால் முதலில் நமக்கு நம்மிடம் நம்பிக்கை வேண்டும். பிறகு கடவுளிடம் நம்பிக்கை வேண்டும்.

*தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன், கடவுளிடமும் ஒரு போதும் நம்பிக்கை வைக்க முடியாது.

*நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் (அதற்காக சிங்கமாக ஆகவேண்டும் என் நினைத்தால் அது முடியாது). உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை).

*"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" "'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.

*பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!

*கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

*உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.

*அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.

*மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்.

*சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

*நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.

*அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

*உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்.

*உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

*எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ் அந்த நாடும் பாழ்.

*நமக்குப் பல அனுபவங்களை பெற்றுத்தர இந்த உலகம் படைக்கப்பட்டது. இங்கிருக்கும் ஒவ்வொரு பொருளும் நம்மால் அனுபவிக்கப் பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை. அதற்காக அது வேண்டும், இது வேண்டும் என யாரிடமும் கேட்காதே. வேண்டுதல் ஒரு பலவீனமாகும். இந்த வேண்டுதல்தான் நம்மை பிச்சைக்காரர்களாக்குகிறது. நாம் அனைவரும் ராஜகுமாரர்கள். பிச்சைக்காரர்கள் அல்ல.

*இயற்கை என்றும், விதி என்றும் எதுவும் கிடையாது.கடவுள் என்ன நினைக்கிறாரோ அதுவே நடக்கும்.

* கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது. ஆனால் எழும் கையை தாழ்த்தி மனதைக் கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல். இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும்.

* ஏதாவது தவறு செய்துவிட்டால், ""ஐயோ! நான் தீயவன் ஆகிவிட்டேனே!'' என்று வருத்தப்பட வேண்டாம். நீ நல்லவன்தான். ஆனால், இன்னும் உன்னை நல்லவனாக்க முயற்சி செய்ய வேண்டும்.

* உலக மக்கள் இன்று கடவுளை கைகழுவி வருகிறார்கள். காரணம் கேட்டால், "கடவுள் எங்களுக்கு என்ன செய்தார்? அவரால் எங்களுக்கு என்ன பயன்?' என்று கேட்கிறார்கள். நீங்கள் கேட்பதை எல்லாம் செய்வதற்கு கடவுள் ஒன்றும்நகரசபை அதிகாரி அல்ல.

*மனிதனை உருவாக்குவதில் இன்பமும் துன்பமும் சமபங்கு வகிக்கின்றன. சில நேரங்களில் இன்பத்தை விட துன்பமே மனிதனுக்கு சிறந்த ஆசானாக அமைகிறது. நன்மையைப் போல் தீமையில் இருந்தும் மனிதன் பாடம் கற்றுக்கொள்கிறான்.

* உலக இன்பம் மனிதவாழ்வின் லட்சியமாக இருக்கக்கூடாது. ஞான இன்பம் அடைவதையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும். ஞானம் என்பது ஆண்டவனை உணர்வதும், சக மனிதர்களை ஆண்டவனாய் காண்பதுமாகும்.

* உதவி செய், சண்டை போடாதே, ஒன்றுபடுத்து, அழிக்காதே, சமரசமாய் இரு, சாந்தம் கொள், வேறுபாடு காட்டாதே.

* உலகம் எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரிதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள். தன்னைச் சரிப்படுத்திக் கொள்பவனே உலகைச் சரிப்படுத்த தகுதியானவன்.

* பலவீனமாக இருக்கிறோமோ என வருத்தப்படாதீர்கள். பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். அளவற்ற தன்னம்பிக்கை பயத்தை விரட்டிவிடும். பயங்கரமான வேகத்துடன் செயல்புரிவதன் மூலமே வெற்றி இலக்கை விரைவில் அடைய முடியும்.

* சுடுகாட்டுக்கு அப்பாலும் நம்மைத் தொடர்ந்து வருகிற ஒரே நண்பன் நல்லொழுக்கமே. மற்றவை யாவும் மரணத்துடன் முடிந்துவிடும்.

*தியானம்

எல்லாவற்றையும் தவிர்க்கும் சக்தியைக் கொடுப்பதுதான் தியானம். “பார் அங்கே..அதோ ஒரு அழகான பொருள்” என இயற்கை கூறுகிறது. “கண்களே பார்க்காதீர்கள்!” என்று நான் கண்களுக்கு உத்தரவிடுகிறேன். கண்கள் பார்ப்பதில்லை. “இதோ நல்ல நறுமணம், இதை முகர்ந்து பார்” என இயற்கை கூறுகிறது. “அதை முகராதே!” என நான் என் மூக்கிற்கு உத்தரவிடுகிறேன். மூக்கு அதை முகர்வதில்லை. இயற்கை ஒரு கொடிய காரியம் செய்கிறது. என் குழந்தைகளில் ஒன்றைக் கொல்கிறது. “இப்போது என்ன செய்வாய்? மடையா உட்கார்ந்து அழு. துக்கத்தின் ஆழத்திற்குப்போ!” என்று இயற்கை சொல்கிறது. ஆனால் நான் சொல்கிறேன், “நான் போக வேண்டிய அவசியம் இல்லை!” என்று குதித்து எழுந்து சுதந்திரமாக இருக்கவேண்டும். இதைப் பயிற்சி செய்து பாருங்கள். ஒரு நொடியில்  தியானத்தில் இந்த இயற்கையை நீங்கள் மாற்ற முடியும். இந்த சக்தி உங்களுக்குக் கிடைத்தால் அதுவே பரலோகமாகாதா? சுதந்திரமாகாதா? தியானத்தின் சக்தி அதுதான்!

*ஞானதீபம்

ஓ மனிதா! இதை நம்பு. உள்ளத்தில் இதை ஊன்றச் செய். மாண்டவர் மீள்வதில்லை. கழிந்த இரவு வருவதில்லை. வீழ்ந்த அலை எழுவதில்லை. ஒரு முறை பெற்ற உடலை மீண்டும் மனிதன் பெறுவதில்லை. எனவே, ஓ மனிதா இறந்துபோன பழங்கதையை வணங்காதே! வா இங்கு வாழும் நிகழ்காலத்தை வனங்கு. சென்றதை நினைத்து புலம்பாதே. இன்று உள்ளதைக் கண்டு அதில் பங்கு கொள். அழிந்துபோன கரடு முரடான பாதையில் சென்று உனது சக்தியை வீணாக்காதே. உன்னருகே உள்ள புதிய செப்பனிடப்பட்ட நன்கு வகுக்கப்பட்ட ராஜபாதையில் செல். வா! உன்னை அழைக்கிறோம். அன்புள்ளவன் இதை அறிந்து கொள்வான்!

*மனதை அடக்கு

எல்லா பேய்களும் நம்முடைய மனத்திலேதான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கி இருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் எங்கிருந்தாலும் அது சொர்க்கமாக மாறிவிடும். மூடப்பட்டுள்ள கதவை எப்படி தட்ட வேண்டும், எப்படி தேவையானபடி தாக்கவேண்டும் என்பது மட்டும் நமக்கு தெரிந்து இருந்தால் உலகம் தனது ரகசியங்களை வெளியிடத் தயாராக இருக்கிறது. அத்தகைய வலிமையும் தாக்கும் வேகமும் எல்லோருக்கும் கிடைத்து விடாது. மனதை ஒருமுகப் படுத்துபவனுக்கே இந்த வலிமை கிட்டும். மனித உள்ளத்தின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை.

Tuesday, December 22, 2009

அவதார் - மாபெரும் திரைக்காவியம் - விமர்சனம்


கிட்டத்தட்ட பதினாலு வருட நேர்த்தியான கருத்துருவாக்கம்!


ஒவ்வொரு பிரேமிலும் கற்பனைக்கெட்டாத உலகத்திற்கே நம்மை இழுத்துச் செல்லும் மாயாஜால உலகம்!

மனதை வசியவைத்த திரைக்கதை அமைப்பு மற்றும் கண்களை கொள்ளை கொள்ளும் கிராபிக்ஸ் சித்து விளையாட்டு.

ஏறக்குறைய ஐயாயிரம் கோடிகளை அசுரத்தனமாக விழுங்கிய தொழில்நுட்பம்!
அதுதான் அவதார்!

டெர்மினேட்டர் (Terminator), ஏபிஸ் (Abyss), ஏலியன்ஸ் (Aliens), டைட்டானிக் (Titanic) போன்ற வரலாறு படைத்த படங்களை கொடுத்துவிட்டு டாக்குமெண்டரி படங்களின் பக்கம் ஜேம்ஸ் கேமரூன் கவனத்தை செலுத்தியிருந்தாலும், இவரின் மனதில் பதினைந்து வருடங்களாக கருவாகி வந்த அவதார் எனும் திரைக்கதை, கேமரூனை மீண்டும் திரைப்படத் துறைக்கே கொண்டு வந்துள்ளது.

இனி கதை.


விண்வெளியில் தொலைதூர கிரகநிலவான பாண்டோரா-வில் இருக்கும் அரியவகை உலோகத்தை அடைவதற்கு நம் பூமியில் இருக்கும் ஒரு நிறுவனம் கி.பி. 2154-ல் முயற்சிக்கிறது. இதற்கு இடைஞ்சலாக இருப்பது அங்கே வசித்து வரும் நீலமான உடல் படைத்த, மனிதனை விட தொன்மையான, ஒன்பது அடி உயிரினம் நாவி( Na'vi). மனிதர்களை எதிரிகளாகப் பாவிக்கும் நாவி இனத்தை மசிய வைப்பதற்கு நம் ஆராய்ச்சியாளர்கள் ஒரு தந்திரம் உபயோகிக்கிறார்கள். அதுதான் நாவி இனத்தின் டி.என்.ஏ (DNA-மரபணு) வையும் நம் டி.என்.ஏ வையும் இணைத்து நாவி உடலமைப்பு போன்ற ஒரு கலவையான உயிரை அங்கே உருவாக்குவது - அதன் பெயர்தான் அவதார்.
அவதார் மூலம் நாவி உடலமைப்பில் மனித ஆத்மாவை நம்மூர் கூடு விட்டு கூடு பாயும் விதமாக உயிர் கொடுத்து நாவி இனத்தினூடே பழகி அவர்களது நம்பிக்கையை பெற முயற்சிக்கிறார்கள். (இயக்குனர் ஒரு பேட்டியில் இதனை இந்திய இதிகாசத்திலிருந்து தழுவி எடுத்ததாக தெரிவித்துள்ளார்!).


இம்முயற்சியில் தனது இரட்டைச்சகோதரன் இறந்ததை ஈடு கட்டும் விதமாக வரும் உடல் ஊனமுற்ற ஒரு ராணுவ வீரன் ஜேக், தானும் ஒரு அவதாரமாக உருவெடுக்கிறார். அவருக்கு இட்ட பணி, 'நாவி'யினத்தின் நம்பிக்கையைப் பெற்றபின் அவர்களின் பூர்வீக இடத்தை விட்டு வேறு பக்கம் நகரச் செய்வது. பிறகு அந்த இடத்தின் அடியிலிருக்கும் அரிய உலோகத்தை (unobtainium) பெறுவது.

ஜேக்கின் அவதார் அங்கிருக்கும் நேத்ரி (Neytiri) எனும் நாவி இளவரசியை சந்தர்ப்பவசமாக சந்தித்து அவள் மூலமாக அவ்வினத்தில் கலக்கிறது. அவதாருக்கும் நேத்ரிக்கும் காதல் மலர்கிறது.
அவதார் நாவிக்களை அவ்விடத்திலிருந்து அப்புறபடுத்துவது தோல்வியில் முடிய, மனிதர்கள் போரின் மூலமாக நாவிக்களை அகற்ற முயற்சிக்கிறார்கள். அதில் விருப்பம் இல்லாத அவதார் மனிதர்களை எதிர்த்து நாவிக்களிக்கே உதவி செய்கிறார். வெல்வது யார் ? மனிதர்களா ? அல்லது மனிதனிலிருந்து அவதாரத்தின் துணையுடன் போரிடும் நாவிக்களா ? மீதி வெண்திரையில்.


கேமரூனின் அசாத்திய உழைப்பு ஒவ்வொரு நொடியிலும் மிகப்பிரமாண்டமாக தெரிகிறது. படம் பார்க்கும் முன்னரே "ஐமாக்ஸ்-3D"-ல் தான் பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்து சென்றது மிக நல்லதாகப் போனது. அவதாரின் பிரமாண்டத்தை அதன் உள்ளே நாமும் ஒரு அங்கமாகப் பார்ப்பது ஒரு சிறப்பு அனுபவம். கேமரூனின் தனித்துவமே லாஜிக்கை அழகாக மீறுவது. நம்மூர் காதல் கதைபோல பார்த்த உடன் இந்தப்படத்திலும் பற்றிக்கொண்டாலும், படம் பார்ப்பவர்கள் மனமும் அதனுடன் இயைந்து விடுகிறது. அது போல மனிதர்கள் நாவிக்களை எதிர்க்கும் கட்டத்திலும் நம் மனம் மனிதர்கள் வெல்லவேண்டும் என்று நினைப்பதை விட நாவிக்கள் வெல்வதையே விரும்புவதிலே தெரிந்து விடுகிறது கேமரூனின் திரைக்கதை நம் மனதை வென்று விட்டதை.
கேமரூன் பலவருட இடைவேளைக்குப் பின்னே இதை வெளிவிட்டாலும் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மீண்டும் நிரூபித்துள்ளார்.மேலும், பலவருடங்களுக்கு முன்னரே வரவேண்டிய திரைக்கதை, தொழில்நுட்பப் பற்றாக்குறை காரணமாய் இப்போதுதான் சாத்தியமாகி உள்ளது. காதலையும், மனித உணர்ச்சிகளையும் தொழில்நுட்பத்தின் தாக்கங்களையும் அழகாக ரசவாதக்கலவையாக ஒன்றுடன் ஒன்று இணைப்பதில் அவருக்கு நிகர் அவரே. அவருடைய முந்தைய பட டைட்டானிக்கிலும் (Titanic) காதலை அருமையாக செதுக்கி நம்மை உருக வைத்திருப்பார். இந்தப்படத்தில் ஒரு சிரமம், இதில் வருவது நாவி எனும் வேற்று கிரக உயிரினம். அதை ஒரு மனித ஆத்மா காதலிப்பது போல பார்வையாளர்களை வசியப்பத்துவது கொஞ்சம் சிக்கலான வேலை. ஆனால் அதில் வெற்றி பெற்றுள்ளார்.


படத்தில் சில குறைகளும் உள்ளன. சில நேரங்களில் காட்சியமைப்பு நம் கண்களை லேசாக பதம் பார்க்கிறது. படத்தில் சில இடங்களில் லாஜிக்குகள் மீறல் லேசாக உறுத்துகிறது. ஆனால் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் விதமாக பிரமிப்பான காட்சிகள் சின்ன சின்ன பிரச்சனைகள் எல்லாம் ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறது.

கேமரூன் தனிக்காட்டு இராஜாவானாலும் மற்றவர்கள் துணை இல்லாமல் பிரமாண்டமான படத்தை அளிக்க முடியாதல்லவா. நாமும் அவதாரில் மற்ற முக்கியமான ஆட்களின் பங்களிப்பை பார்க்கலாம்.

இசை ஜேம்ஸ் ஹோர்னர் -- அபோகலிப்டா (Apocalypto) மற்றும் அபோல்லா (Apollo-13) போன்ற படங்களுக்கு இசையமைத்தவர். இதிலும் அருமையாக அசத்தியுள்ளார்.

எடிட்டிங்கிலும் ஸ்டீவென் மற்றும் ஜானுடன் இணைந்து கேமரூனின் கைவண்ணம் நேர்த்தியாகத் தெரிகிறது.

ஜூராசிக் பார்க் (Jurassic Park) மற்றும் லார்ட் ஆப தி ரிங்ஸ் (Lord of the Rings) படங்களில் பணி புரிந்த ஜோ லேட்டேரி, ஒளித்தந்திர நிபுணத்துவத்தில் -ல் (Visual Effects) இதுலும் ஒரு கலக்கி கலக்கி உள்ளார். மூன்று முறை ஏற்கனவே ஆஸ்கர் வென்ற ஒரு நிபுணர்.

அவதார்- திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல். அனைவரும் கட்டாயமாக பார்க்க வேண்டிய ஒரு மாபெரும் திரைக்காவியம்.


                                                 - நன்றி ( செந்தில் ).

Saturday, December 19, 2009

தமிழகத்தின் தலைநகரை மாற்றலாம்! : தினமலர் வாசகர் கருத்து...

ரமேஷ் சண்முகம், சிங்கப்பூரிலிருந்து அனுப்பிய, "இ-மெயில்' கடிதம்: "தமிழகத்தை பிரிக்க வேண்டும்' என்று எழுப்பப்படும் கோரிக்கையை, இங்குள்ள இருபெரும் கட்சிகளான தி.மு.க.,வும் , அ.தி.மு.க., வும், உறுதியுடன் எதிர்ப்பது நல்ல செய்தி. இங்கு, பிரிவினை கோருபவர்களின் உண்மையான நோக்கம், மாநிலம் முன் னேற வேண்டும் என்பதல்ல... மாறாக, தம் கட்சி பலமாக உள்ள பகுதிகளை தனியாக பிரித்தால், ஆட்சிக்கு வந்து விட முடியும் என்ற நப்பாசை தான். அதுவும், சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயமல்ல.

ஆனால், தமிழக நிலைமையை சீர்தூக்கி பார்த்து ஆராய்ந்தால், ஒரு உண்மை மட்டும் நன்றாக புரியும்... மாநிலத்தை ஆண்டவர்களும், ஆள்பவர்களும், தங்களது வீரவசனங்களிலும், வாய்சவடால்களிலும், என்ன தான் பேசினாலும், தலைநகர் சென்னையிலும், சென்னையை சுற்றியும் தான், தொழில்களையும், புதிய முதலீடுகளையும் உருவாக்க வழி செய்கின்றனர். இவை அனைத்தும் சாதகமாக இருந்தும், சென்னையை நோக்கி முதலீட்டாளர்கள் படையெடுப்பதற்கு ஒரே காரணம், மாநிலத்தின் தலைமைச் செயலகமும், மற்ற அரசுத்துறை தலைமை அலுவலகங்களும், சென்னையில் அமைந்திருப்பது தான்.

முன்பு எம்.ஜி.ஆர்., தொலை நோக்கு திட்டத்தோடு, திருச்சியை தலைநகராக்க முயற்சி செய்தார். ஆனால், எங்கே அவருக்கு பெரும்புகழ் சேர்ந்துவிடுமோ என்ற கேவலமான அரசியலால், அதற்கு முட்டுக் கட்டை போட்டுவிட்டனர். பின் அந்தளவு இல்லை என்றாலும், குறைந்தபட்சம் தலைமைச் செயலகத்தை, தென் சென்னையில் அமைக்க ஜெயலலிதா முயற்சி செய்தார். அதுவும், அரசியல் காரணங்களால் எதிர்க்கப்பட்டு முடக்கப்பட்டுவிட்டது. இப்போது, புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு வருகிறது. இது ஆள்பவர்களுக்கும், அதிகார வர்க்கத்தினருக்கும், அதிக இடப்புழக்கத்துடன், வசதியான அலுவலகமாக இருக்குமேயன்றி, ஏற்கனவே திக்கிதிணறி சிரமப்படும் சென்னை மக்களுக்கு, எந்த விடிவும் ஏற்படுத்தப் போவதில்லை. அத்துடன், தற்போதுள்ள போக்குவரத்து வசதிகளில், நினைத்த மாத்திரத்தில், எங்கும் சென்றடைந்து விடலாம். தற்சமயம், நீண்டகால தொலைநோக்கு திட்டத்தோடு, தமிழக தலைநகரை, திருச்சிக்கோ, மதுரைக்கோ மாற்ற ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். இதில் குறுகிய அரசியல் நலன்களும், சுய நலன்களும் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்; மக்கள் நலன் மட்டுமே முன்னிறுத்தப்பட வேண்டும்.

இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பும், ஆனால், அது சென்னையில் செட்டில் ஆகிவிட்ட அரசியல்வாதிகளிடமிருந்தும், முதலீடு செய்து கோடிகளை பார்த்து கொண்டிருக்கும் பணக்காரர்களிடமிருந்தும் தான். அப்படி தலைநகர் இடம் மாறும்போது, சாதாரண மக்கள் சந்தோஷமே அடைவர். ஒரு கட்சித் தலைவர், தென் பகுதிக்கு வருகை தருவது அபூர்வத்திலும், அபூர்வம் என்றுள்ள தற்போதைய நிலைமையும் மாறிவிடும். மத்திய அமைச்சர்கள் , மாநில அமைச்சர்கள் என்றும், ஆளும் பிரதிநிதிகளின் கடைக்கண் பார்வை, தென் மாவட்டங்களின் மீது படிந்து, அவை வளம்பெற வாய்ப்பு கிடைக்கும். இதற்கும் மேல், தலைநகர் தென் தமிழகத்தில் அமைவதால், சென்னையின் பெருமை எந்த விதத்திலும் குறைந்துவிடாது. அது மேலும், சுத்தமான, சுகாதாரமான முறையில் விரிவடைய வழி பிறக்கும். தற்போது நிலவும் குடிநீர் தட்டுப்பாடும், சுற்றுச்சூழல் கேடும் குறைந்து, நகரின் பெருமை மேலோங்கும். இதையெல்லாம் விட, தற்சமயம் பொதுமக்கள் அனுபவித்து வரும் இட நெருக்கடி குறைந்து, நகருக்கு ஒரு நல்ல தோற்றம் ஏற்படும்.

இதற்கு அருமையான உதாரணம், மலேசிய தலைநகர் கோலாலம்பூர், நெருக்கடியை சந்தித்தபோது, அதன் முன்னாள் பிரதமர் டத்தோ மாகாதீர், கோலாலம்பூரின் தெற்கே அமைந்துள்ள புத்ராஜெயாவை, புதிய நிர்வாக தலைநகராக உருவாக்கினார்; அதனால், கோலாலம்பூரின் கலாசார பெருமை, எந்த விதத்திலும் குறையவில்லை. இதைப் போல், தமிழக தலைநகரை மாற்றும்பட்சத்தில், தென் பகுதி மக்கள், சிறிய வேலைகளுக்கும், அனுமதிகளுக்கும், நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலைமை மாறும். புதிய முதலீட்டாளர்களும், தென் பகுதியை நோக்கி படையெடுப்பர். மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி சீராகவும், அனைவரும் பலன்பெறும் வகையிலும் அமைந்திடும். நம்மை ஆள்பவர்களும், ஆளப்போகிறவர்களும், ஆள நினைப்பவர்களும், ஆள ஆசைப்பட்டு அரசியலில் குதிப்பவர்களும், இது குறித்து சிந்திப்பரா?

இப்படியும் ஒரு அறுவை சிகிச்சை!

* நீங்கள் பிறரிடம் பழகும் விதத்தை வைத்துத்தான், உங்களோடு நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். தன் உடல், மனம், உயிர் இம்மூன்றையும் முழுமையாக மதித்தால்தான் பிறரை முழுமையாக மதிக்க முடியும். இவற்றை அரைகுறையாக மதிப்பவர் பிறரையும் அரைகுறையாகத்தான் மதிப்பார்.


* "நான்' "எனது' என்ற குறுகிய வட்டத்தில் வாழும் வரை மகிழ்ச்சி என்பது கற்பனையில் கூட வராது. மற்றவர்களிடம் இனிமையாக பழக கற்றுக் கொண்டால் நல்ல உறவுகள் சுலபமாகக் கிடைத்துவிடும்.

* தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பதற்கு மனிதனாக பிறக்க வேண்டிய அவசியமில்லை. ஆகையால்,

சுமூகமான உறவுகளை வளர்த்துக் கொள்வது நல்ல வாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்கும்.

* உங்களிடம் குறை இருந்தால் அது உடலில் இருக்கும் கட்டி போன்றதாகும். ஆகையால், அவற்றைத் திருத்திக்கொள்ளுங்கள். குறைகளைத் திருத்துவது என்பது மனதில் இருக்கும் கட்டியை அறுவை சிகிச்சை செய்வதற்குச் சமமாகும்.

                                                                                         —பரமஹம்ச நித்யானந்தர்

மனம் நம் எஜமான் அல்ல...


கோபம் உண்டாகும் போது அதை அடக்க முயற்சிப்பது வேண்டாத வேலையாகும். கோபம் ஏதாவது ஒரு காரணம் பற்றியே வருகிறது. அக்காரணத்தை ஆராய முற்படுவது நல்லது. தவறு நம் மீது இருக்கும்போது, நாம் அடுத்தவர் மீது கோபப்படலாமா என்ற கோணத்தில் யோசித்துப் பாருங்கள். கோபம் இருந்த இடம் தெரியாமல் மறைவதை உணர்வீர்கள்.நீங்கள் கள்ளம் கபடம் இல்லாதவர். தவறே செய்யாதவர் என்றாலும் கூட, யார் மீதாவது கோபப்படலாமா என்றால் அப்போதும் கோபம் கூடாது தான். ஏனென்றால், மனம் தூய்மையான நிலையில் கோபமே உண்டாகாது. அளவுக்கு அதிகமாக நாம் கோபத்தை வெளிக் காட்டும் போது நம் சக்தி அநியாயமாக வீணாகிறது. இதனால், மனமகிழ்ச்சியை இழந்து விடுகிறோம். கோபப்படும் சமயத்தில் மனச்சிதறல் ஏற்படுவதால், நம் செயல்களில் முழுமையாக ஈடுபட முடியாது.மனிதன் மனதிற்கு எஜமானனாக இருக்க வேண்டும். நம் தேவைகளையும், விருப்பங்களையும் பூர்த்தி செய்து கொள்ள உதவும் ஒரு வேலையாளாக மனதை வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால், பலநேரங் களில் மனிதன் மனம்போன போக்கில் சென்று பல சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறான்.

                                                         -நித்யானந்தர்.


வாழ்க்கையில் திருப்தியில்லையா?

ஒவ்வொருவருக்கும் மற்றவரின் குறைகள் பளிச்சென்று தெரிகிறது. ஆனால், அவரவரின் குறைகள் மங்கலாகக் கூடத்தெரிவதில்லை. மேலோட்டமாகப்பார்த்தாலே அடுத்தவர்களுடைய குறைகளைக் கண்டுபிடித்து விடுவோம். ஆனால், நம் குறைகளைப் பார்க்க தெளிந்த பார்வை இருந்தால் மட்டுமே முடியும். வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்த திருப்தி நம்மிடமில்லை என்றால், இறைவன் நமக்குக் கொடுத்த புத்திசாலித்தனம் என்னும் சக்தியை நாம் பயன்படுத்தவில்லை என்று பொருள். புத்தியின் பயனே மகிழ்ச்சியாய் வாழ்வதற்குத் தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தன் தகுதி என்ன என்பதை தெரியாமலேயே நான் ஒரு புத்திசாலி என்று நினைக்கும் நினைவு என்னும் எண்ணத்தில் தான் பெரும்பாலான முட்டாள்தனங்கள் வளர ஆரம்பிக்கின்றன. வாழ்க்கையில் சோம்பேறித்தனம் உடையவர்கள் நிறைய இழக்கிறார்கள். ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்து செயல்புரிய விடாமல் சோம்பேறித்தனம் நம்மை பின்னுக்கு இழுத்துவிடும் ஆற்றல் கொண்டது. வாழ்வின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் முக்கியமானதே. அதை முழுமையாக அனுபவிக்கவும், இயல்பாக வாழவும் கற்றுக்கொள்ளுங்கள். அப்போது மகிழ்ச்சி பொங்க ஆரம்பித்துவிடும். அப்போது தான் நீங்கள் உண்மையிலேயே வாழத் தொடங்குவீர்கள்.

                                                         -நித்யானந்தர்

வாலிபனுக்கும் தியானம் அவசியம்... -நித்யானந்தர்


நாம் எல்லோரும் ஆனந்தத்தின் எல்லைக்கு செல்லவே ஆசைப்படுகிறோம். நமக்கு பிடித்த வழியில் ஆனந்தத்தை அடைய நாள்தோறும் முயற்சிக்கிறோம். நமக்குப் பிடித்த விஷயங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். காதல், புகழ், பணம், பதவி, உணவு, ஆடை, ஆபரணங்கள் இப்படி எதுவாக இருந்தாலும் இவற்றை அனுபவித்தால் இன்பம் கிடைக்கும் என்று அதை நோக்கியே ஓட ஆரம்பிக்கிறோம்.

நாம் தேடுகின்ற இன்பத்தை ஒருக்காலும் வெளியில் பெற முடியாது. புத்தர் முதல் ரமணமகரிஷி வரை எத்தனையோ மகான்கள் நமக்குப் பலவிதங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் எல்லாம் உண்மையான இன்பத்தின் உச்சத்தை அனுபவித்தவர்கள். தாங்கள் பெற்ற அனுபவங்களையே, அறிவுரைகளாக நமக்கு வழங்கியுள்ளனர்.

தியானம், ஞானம் போன்ற விஷயங்கள் எல்லாம் ஞானமார்க்கத்தினர் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டும் என்று தவறாக நினைக்கிறோம். வாழ்க்கையை அனுபவிக்காமல் நழுவ விட்ட வயோதிகனை விட அணு, அணுவாக அனுபவிக்கத் துடிக்கும் வாலிபனுக்கே தியானம் அவசியம்.


நம் கையை விட்டு போன இறந்த காலம், இன்னும் நம் கைக்கே வராத எதிர்காலம் ஆகியவற்றை பற்றி கவலைப்படுவதால் தான், நிகழ்காலத்தை அனுபவிக்க முடியாமல் போகிறது.

Thursday, December 17, 2009

உடற்பயிற்சி - நமக்கு தெரிய வேண்டிய சில உண்மைகள்... -- Rtn.Dr.S.முரளி M.D.S.,

நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. ஆனால் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது நம்மில் பலர் தவறான அறிவுரையாலும், கருத்துக்களாலும் குழப்பம் அடைந்து தாறுமாறாக உடற்பயிற்சி செய்ய நேரிடுகிறது. மேலும், நாம் டி.வி.யில் காணும் சில விளம்பரங்கள் "பதினான்கு நாட்களில் கட்டுடலுக்கு உத்தரவாதம்" என்றும், மற்றும் சில விளம்பரங்கள் "தினமும் நான்கு நிமிடங்கள் செய்தாலே அழகான உடல்கட்டு கிடைக்கும்" என்று கூறுகின்றன. இந்தக் கட்டுரை உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு அவர்களது குழப்பங்களை அகற்றவும், தவறான கருத்துக்களை நீக்கி, தெளிவு பெற்று, நோயற்ற வாழ்வு என்னும் குறைவற்ற செல்வத்தை அடையவும் உதவும் சிறிய முயற்சியாகும்.

கருத்து:1 தொந்தியைக் குறைப்பதற்கு சிறந்த வழி நமது உடலின் நடுப்பாகத்திற்கு (வயிற்றுப் பகுதிக்கு) பயிற்சி கொடுக்க வேண்டும்.

இது ஒரு தவறான கருத்து. நம்மில் பலர் எந்த இடத்தில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து இருக்கிறதோ, அந்த இடத்தில் உள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் கொழுப்பு கரைந்து தொந்தி குறையும் என்று எண்ணுகிறோம். ஆனால் ஆய்வுகள் தெரியப்படுத்துவது என்னவென்றால், நாம் பயிற்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கொழுப்புகள் கரைவதில்லை. இப்படிச் செய்வதற்கு பதில், நாம் உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் நமது உடம்பிலுள்ள கொழுப்புகள் எல்லா இடங்களிலும் சீராகக் குறையும் போது நமது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பும் கரைந்து தொந்தி குறையும்.

கருத்து:2 வாரத்துக்கு இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்தாலே நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு போதுமானது.

இதுவும் தவறான கருத்து. எப்படி விட்டமின்கள் நமது உடலுக்கு தினசரி தேவையோ, அதுபோல மிதமான உடற்பயிற்சியும், நமக்கு தினசரி தேவை. ஏனென்றால், உடற்பயிற்சிகளால் ஏற்படும் நல்ல மாற்றங்களை 48 முதல் 72 மணி நேரங்கள் வரைதான் நமது தசைகளால் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆகவே நமது தசைகளும், அவற்றுடன் தொடர்புடைய நமது இரத்த, சுவாச, செரிமான உறுப்புகளும் உறுதியாகவும், நல்ல நிலையில் இயங்க குறைந்தது வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

கருத்து:3 எடையைக் குறைப்பதற்கு வியர்வை வெள்ளம் போல் கொட்டும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இதுவும் ஒரு தவறான கருத்து. வியர்வையானது உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதற்கு மட்டுமே உதவும். அது நமது எடையைக் குறைக்க உதவாது. வேர்வை பொங்க கடுமையான உடற்பயிற்சி செய்த பிறகு நமது உடல் எடை குறைந்தாலும் அது உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தற்காலிக எடை குறைவே ஆகும். இதை விடுத்து உடல் தசைகளுக்கு கடுமையான பயிற்சி கொடுக்காமல் மிதமாக பயிற்சிக் கொடுத்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

கருத்து:4 நடப்பது நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று

உண்மை. நடக்கும் போது இரத்த ஓட்டம் சீராக உடலில் எல்லா பாகங்களுக்கும் கிடைக்கிறது. இதனால் திசுக்களுக்குத் தேவையான சக்தி (கலோரிகள்) கிடைப்பதால் நமது உடல் நலம் நன்றாக இருக்கும்.

நாம் ஒரே இடத்தில் வெகுநேரம் உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ வேலை செய்பவராக இருந்தால், நமது கால்களில் உள்ள இரத்தக் குழாய்களுக்கு அங்குள்ள இரத்தத்தை திரும்பவும் இதயத்துக்கு அனுப்ப போதுமான அளவு அழுத்தம் கிடைப்பதில்லை. இதனால் இரத்த ஓட்டம் உடலின் எல்லா பாகங்களுக்கும் சீராக இருப்பதில்லை. நடக்கும் போது நமது கால்களில் உள்ள தசைகள் இயங்கி, அருகிலுள்ள இரத்தக் குழாய்களை அழுத்தி இரத்தத்தை இதயத்துக்கு அனுப்பத் தேவையான சக்தியை அளிக்கின்றன. ஆகவே தினமும் 2 அல்லது 3 கி.மீட்டர் தூரம் நடப்பது மிகவும் சிறந்த உடற்பயிற்சி ஆகும்.

கருத்து:5 ஒரு மைல் தூரம் ஒடும்போது நாம் அதே அளவு தூரம் நடப்பதைக் காட்டிலும் அதிகமான கலோ¡¢களை எ¡¢க்கிறோம். இதனால் நமது உடல் எடை விரைவாகக் குறைகிறது.

மிகத் தவறான கருத்து. நாம் ஒடினாலும், நடந்தாலும், நாம் செல்லும் தூரம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் நாம் ஒரே அளவு சக்தியைத் தான் செலவு செய்கிறோம். இங்கு வேகம் ஒரு பொருட்டல்ல. ஆனால் 30 நிமிடங்கள் நாம் ஓடும்போது, அதே 30 நிமிடங்கள் நடப்பவரைக் காட்டிலும் அதிக தூரம் கடக்கிறோம். தூரம் அதிகமாவதால் நாம் செலவு செய்யும் சக்தியும், எரிக்கும் கலோரிகளும் அதிகமாகின்றன. எனவே அவரவர் வயது மற்றும் உடல் திறனுக்கேற்றவாறு நமது உடற்பயிற்சியை அமைத்துக் கொள்ளல் அவசியம்.

கருத்து:6 தசைகள் வி¡¢வுபடுத்த செய்யும் உடற்பயிற்சிகளை வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செய்தால் தசைகளுக்கு வலிவும், வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.

இதுவும் தவறான கருத்து. இம்மாதிரியான பயிற்சிகளை மிகவும் மெதுவாக செய்யவேண்டும். உதாரணமாக குனிந்து நிமிர்வது, இடுப்பு தசைகளை முறுக்கும் (Twisting) பயிற்சிகள், மற்றும் குனிந்து விரல்களால் பாதங்களை தொடுவது முதலான பயிற்சிகளை வேகமாகச் செய்யும்போது தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு வலியும், தசை நார்கிழிதல் முதலான மோசமான விளைவுகள் ஏற்படும். ஆகவே தசைகளை தளர்வாக வைத்துக் கொண்டு மெதுவாக ஆனால் திரும்ப, திரும்ப செய்யும்போது தசைகளுக்கு வலிவும், பொலிவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.

கருத்து:7 நமது சுவாசமும், இதயத் துடிப்பும், உடற்பயிற்சி செய்து முடித்த 3-5 நிமிடங்களுக்குள் சீராக வேண்டும்.

சரியான கருத்து. உடற்பயிற்சி முடிந்து 5 நிமிடங்களுக்கு மேலாகியும், சீரான மூச்சு திரும்பவில்லை என்றால் நாம் மிக அதிகமாக தசைகளுக்கு பயிற்சி கொடுத்து விட்டோம் என்று பொருள். அளவுக்கதிகமான உடற்பயிற்சியானது நமது தூக்கத்தை கெடுப்பதுடன், அடுத்த நாள் களைப்பையும், சோர்வையும் உண்டாக்கிவிடும். ஆகவே உடற்பயிற்சியை மிதமாகவும், குதூகல உணர்வுடனும் செய்வது அவசியம்.

கருத்து:8 ஒரு நாளில் குறைந்த பட்சம் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும்?

20 நிமிடங்களாவது நாம் ஒரு நாளில் உடற்பயிற்சி செய்வது அவசியம் கழிவு மண்டலங்களின் இயக்கம், செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கம், முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன. நாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400 தசைகளுக்கும் நீட்டவும், மடக்கவும் பயிற்சி கொடுப்பதாக இருக்க வேண்டும். இதற்கு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வது போதாது. குறைந்தது 20 நிமிடங்களாவது இந்த தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் தான் நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் "14 நாட்களில் கட்டுடல் நிச்சயம்" போன்ற விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள். வனப்பான உடல் பொலிவைப் பெறுவது என்பது, நாம் உடற்பயிற்சி ஆரம்பித்த போது நமது ஆரோக்கியம், உடல் தகுதி முதலியவை (Physical Fitnes) எப்படி இருந்தது என்பதைப் பொறுத்து அமையும். சிலருக்கு சில வாரங்களோ வேறு சிலருக்கு சில மாதங்களோ கூட ஆகலாம். ஆனால் ஒன்று நிச்சயம். எவராக இருப்பினும், நாளை, நாளை மறுநாள் என்று தள்ளிப் போடாமல் உடற்பயிற்சியை மிதமாகவும், தவறாமலும், ஒழுங்காகவும் செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் கட்டுடலுடனும், முழு உடல் தகுதியுடனும், ஆரோக்யமாக வாழலாம்.

                                                                        

Monday, December 14, 2009

மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வயிற்று வலி நீங்க...



மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வயிற்று வலி போன்ற தொல்லைகள் மற்றும் சீரான மாதவிலக்கு இல்லாமல் அவஸ்தைப்படும் பெண்களுக்கு எளிய முறையில் ஒரு வைத்தியம் உள்ளது.


7 ,8 மிளகை எடுத்து பொடித்து அதே அளவு வெள்ளை கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணிரில் போட்டு கலக்கி கொள்ளுங்கள்.இதே அடுப்பில் வைத்து அரை டம்ளர் அளவு ஆகும்வரை சுண்டக் காய்ச்ச வேண்டும்.

அதன் பிறகு இறக்கி,வடிகட்டி,ஆறவைத்து குறிப்பிட்ட அந்த மூன்று நாட்களுக்கு அதிக்காலையில் வெறும் வயிற்றில் அரை டம்ளர் அளவு அந்த கசாயத்தை குடிக்க வேண்டும்.இதனால் மாதவிலக்கு சம்பத்தபட்ட சகல கோளாறுகளும் நிங்கும்.செய்து பாருங்கள் பலன் உண்டு.

Thursday, December 10, 2009

கணவ‎ர்மார்களே! மனைவிமார்களே!

கணவ‎ர்மார்களே! மனைவிமார்களே! ‏இளைஞர்களே! யுவதிகளே! ‏இந்தக் கட்டுரை (அல்லது பாடம் எ‎ன்றும் எடுத்துக் கொள்ளலாம்!) முழுக்க முழுக்க உங்களுக்கே!

உடற்பயிற்சிகளில் பலவகை உண்டு. காற்றோட்டத்தில் செய்வது (aerobic), ‏உள்ளரங்கில் செய்வது (unaerobic), உடல் களைப்படையும் வரை செய்வது, வேர்வையே சிந்தாமல் செய்வது, எனப் பற்பல வகைகள் ஒவ்வொரு வயதினருக்கேற்ற வகையில்; அவர்களது உடல்நிலையைப் பொறுத்த வகையில்.

நாமளும் ஒரு உடற்பயிற்சி ‏எப்படி செய்வது என்று இப்போது பார்க்கப் போகிறோம். ‏இந்த உடற்பயிற்சிக்குப் பெயர் 'கீகெல் எக்ஸர்ஸைஸ்'. 'பெல்விக் ஃப்ளோர் எக்ஸர்ஸைஸ்' எ‎ன்றும் கூறலாம்.

டாக்டர். அர்னால்ட் கீகெல் (Dr. Arnold Kegel) எ‎ன்பவர் உருவாக்கிய ‏இந்த உடற்பயிற்சிக்கான முறைமைகளை வகுத்துத் தந்த‎மையால் அவரது பெயரிலேயே இது அழைக்கப்படுகிறது. இன்று உலகத்தில் எ‎ன்ன புதிதாக எ‎ன்ன கண்டுபிடிக்கப்பட்டாலும் அது ஏதோ ஒரு வகையில் நம் மு‎ன்னோர்கள் கண்டுபிடித்து, உருவாக்கி சொல்லி / எழுதி வைத்துவிட்டுச் செ‎ன்றதாகவே ‏இருக்கிறது எ‎ன்று சொ‎ன்னால் அது மிகையாகாது.

சொல்ல வந்ததைத் சொல்லாமல் கதை எ‎ன்ன வேண்டிக் கிடக்கிறது எ‎ன்கிறீர்களா? விஷயத்திற்கு வருகிறே‎ன். கீகெல் இதைக் கண்டுபிடித்து சொ‎ன்னாலும் நம் சித்தர்கள் கண்டுணர்ந்து நமக்கு அறிவித்துச் செ‎‎ன்ற 'விந்தைக் கட்டும் வித்தை'தா‎ன் இது. விந்து மட்டுமல்ல, அது உற்பத்தியாகும் பகுதியையும், அந்தப் பகுதி சார்ந்த நரம்பு முடிச்சுகளையும், தசைப் பகுதிகளையும் வலுவாக்கும், உறுதி சேர்க்கும் விஷயம்தா‎ன் இந்த கீகெல் (அ) பெல்விக் ஃப்ளோர் (Pelvic Floor) எக்ஸர்ஸைஸ்.

இந்தப் பயிற்சி ‏தம்பதியருக்கும், இளம்பருவத்தினருக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும்.

நமது அடிவயிற்றுக்கும் கீழே உள்ள பகுதிதா‎ன் பெல்விக் ஃப்ளோர் எனப்படுவது. ‏ இதிலுள்ள ப்யூபோசைக்யூஸ் (pubococcygeus) எ‎ன்னும் தசைப்பகுதியை சுருக்கி விரித்து, இறுக்கி இளக்கி விடுவதுதா‎ன் இந்தப் பயிற்சியி‎ன் நோக்கம். ஏற்கெனவே, இதே சாரத்தில் 'இளமையி‎ன் ரகசியம்' எ‎ன்ற தலைப்பில் யோகிராஜ் வேதாத்திரி மகரிஷியி‎ன் எளிய வகை காயகல்ப பயிற்சியை அடிப்படையாகக் கொண்டு ஒரு கட்டுரை எழுதியிரு‎ந்தேன்.

http://www.nilacharal.com/tamil/success/beauty_secrets_334.asp

கர்ப்பி‎ணிப் பெண்டிருக்கு குழந்தைப் பிறப்பு சிரமமே இல்லாமல் மிக எளிதாக அமைய ‏இந்தப் பயிற்சி பெரிதும் உதவுகிறது. ‏முந்தைய தலைமுறைகளில், தாய்மை அடையும் பெண்கள் தங்கள் நிறைமாத கர்ப்ப காலம் வரை கடினமாக உழைத்தவர்கள். காட்டு வேலை, மேட்டு வேலை செய்து பிழைத்த அந்தக் காலத்து ஜனங்கள் எட்டு பிள்ளை, பத்து பிள்ளை எ‎ன்று சுகப்பிரசவமாகவே பெற்றெடுத்து, குடும்பத்தை உருவாக்கச் சொ‎ன்னால் சிறு கிராமங்களையே அநாயாசமாக உருவாக்கியவர்கள்!!

பழம் பெருமை இருக்கட்டும்! இக்காலத்திலோ அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. வீட்டு வேலைகளைச் செய்ய சகலத்திற்கும் உபகரணங்கள் வந்து விட, பிள்ளையை அலுங்காமல் குலுங்காமல் பாதுகாக்க வேண்டும் எ‎ன்ற அதீத கவனிப்புகளும் கூடுதலாகி விட, உடலுழைப்பு குறைந்து எளிதான குழந்தைப் பிறப்பு எ‎ன்பது சிக்கலான ஒன்றாகி, மருத்துவரி‎ன் கத்திக் கபடாக்களி‎ன் தயவில் வெளியுலகை தரிசிக்கிறது.

தாய்மையடைதல், குழந்தைப் பிறப்பு, பிரசவ காலங்களில் எடை கூடுதல், சிசேரிய‎ன் போ‎ன்றவை ‏ இந்த பெல்விக் தசைகளை வலுவிழக்கச் செய்கி‎ன்றன. வலுவிழந்த வீணை நரம்புகளை ‏இழுத்துக் கட்டி இசைப்பதுதானே நியாயம்? நரம்பு போச்சி; போனால் போகட்டும் எ‎ன்று தூக்கி பரண் மேல் கடாசப்படுவதற்கா வீணை? நம் உடலும் வீணை போலத்தானே!

எல்லாம் சரி.. நியாயம்தா‎ன் என ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். நல்லது. இ‏னிமேல் என்ன செய்ய வேண்டும். அந்த எக்ஸர்ஸைஸ் எப்படி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் போது அதை ‏இறுக்கி அடக்கிப் பாருங்கள். விடுங்கள்; மீண்டும் அடக்கிப் பாருங்கள். ‏இவ்வளவுதா‎ன் இந்தப் பயிற்சி. இப்போது நீங்கள் கட்டுப்படுத்தும் தசைப்பகுதிதா‎ன், பெல்விக் பகுதி. ‏ இனிமேல் சிறுநீரை அடக்காமல் சாதாரணமாக இ‏ருக்கும்போது இதைச் செய்யுங்கள்.

முத‎ன்முறை பழகும்போது, அடிவயிற்றையும் சேர்ந்து எக்குவது போல இ‏ருக்கும்; தொடைப்பகுதி தசைகளும் ‏இறுகுவதை உணரலாம். அவ்வாறு செய்வதைத் தவிர்த்து மிகச் சரியாக பெல்விக் தசைகளை மட்டும் ‏இனம் கண்டு இறுக்கி விரித்தால், ஓரிரு மாதங்களிலேயே இளமை ஊஞ்சலாடுவது கண்கூடாக உணர்வீர்கள்.

‏இந்த கீகெல் எக்ஸர்ஸைஸ் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். டிவி பார்த்துக் கொண்டு, பஸ்ஸில் பிரயாணம் செய்து கொண்டு, வகுப்பில் பாடம் கேட்டுக் கொண்டு, கதை எழுதிக் கொண்டு, கார் ஓட்டிக் கொண்டு - எ‎ன எந்த நிலையிலும் இதை செய்யலாம். யாருக்கும் தெரியாது.

இதைச் செய்யும் வழிமுறைகளை இன்னும் கொஞ்சம் விளக்கமாகக் காண்போம்.

1. முத‎ன் முதலில் ஆரம்பிக்கும்போது நின்று கொள்ளுங்கள். நாற்காலியில் உட்கார்ந்து கொண்டும் செய்யலாம்.

2. மெல்ல பெல்விக் தசைகளை ‏இறுக்குங்கள், மூ‎‎ன்றிலிருந்து ஐ‎ந்து வினாடிகள் போதும்.

3. மெல்ல ‏இறுக்கத்தைத் தளர்த்துங்கள். அதற்கு ஒரு மூ‎ன்று வினாடிகள் எடுத்துக் கொள்ளுங்கள்.

4. ‏இதே போல பத்து முறை செய்யுங்கள்.

5. ஒரு நாளில் ‏இது போல ஐந்து முறை செய்து வாருங்கள்.

6. முக்கியமாக, ‏இயற்கை உபாதைகள் கழித்த பி‎ன்போ, சாப்பிடுவதற்கு மு‎ன்னரோ, அல்லது சாப்பிட்டு மூன்று மணி நேரம் ஆன பி‎ன்னரோ, தண்ணீர் குடிப்பதற்கு மு‎ன்னரோ செய்வது மிகவும் நல்லது. அதாவது, இதைச் செய்வதற்கு மு‎ன்னர் வயிறு காலியாக ‏இருத்தல் நலம்.

7. ஒரு நாளில் ஐந்து முறை எ‎ன்பது பத்து முறையாக சிறிது காலம் கழித்து உங்கள் உடலுக்கு அது பொருந்தி வந்தால் உயர்த்திக் கொள்ளுங்கள்.

8. ஆரம்ப காலங்களில் அந்த இடத்தில் சூடு அதிகரிக்கும். அதீத சூடா‎னால் எண்ணிக்கைகளைக் குறைத்துக் கொள்ளவும்.

9. தினமும் செய்யலாம்; அல்லது வாரத்திற்கு நா‎ன்கு நாட்கள் மட்டும் கூட செய்யலாம்.

10. தினமும் ஒரு தடவைக்கு ‏இருபது கவுண்ட் என பத்து தடவை கூட அதிகபட்சமாக செய்து வரலாம்.

இவ்வாறு சரியா‎ன பொழுதில், சரியான அளவு செய்து வந்தால் எந்நேரமும் புத்துணர்வுட‎ன் காணப்படுவது போல உணர்வீர்கள். ‏இளமை அதிகரிக்கிறதல்லவா!! வியர்க்க விறுவிறுக்க செய்ய வேண்டியதில்லை; தனியாக நேரம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை; மற்றவர்கள் பார்த்து விடுவார்களோ எனக் கூச்சப்படத் தேவையில்லை.

இவையெல்லாம் கர்ப்பிணிப் பெண்களுக்குத்தானே.. அப்புறம் ஏ‎ன் எங்களையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்கிறீர்கள் எ‎ன்று கணவர்மார்களும், பருவ வயதினரும் கேட்கிறீர்களா?

ரைட்.. இந்த பெல்விக் எக்ஸர்ஸைஸ் குழந்தை பிறப்பை மட்டும் எளிமைப்படுத்துவதல்ல, பாலுறவுகளில் கணிசமான அளவு ‏இன்பத்தைக் கூட்டுகிறதாம்! உறவு கொள்ளும் காலம் அதிகரிக்கிறதாம்! உறவி‎ன் போது பெல்விக் தசைகளை‏ சுருக்கி விரிக்கும்போது விந்து வெளிப்படும் நேரம் நம் கட்டுப்பாட்டில் ‏இருக்குமாம்! அதனால் உச்சநிலை (orgasm) நீடிக்கும் எ‎ன்கிறார்கள். தளர்ந்த தசைகளே பெரும்பாலும் விந்து முந்துதலுக்குக் காரணம் எ‎ன்று சொல்லப்படுகிறது.

மேலும், விந்து கெட்டிப்படுதலும் அதிகரிக்கிறதாம். சக்தி வாய்ந்த உயிரணுக்கள் உருவாவதற்கும் வழிவகை ஏற்படுகிறதாம். குழந்தையில்லாத் தம்பதியருக்கு இந்தப் பயிற்சி குறிப்பிடத்தக்க அளவில் கைகொடுக்கிறதாம்.

அதற்காக, இது மட்டுமே போதும், எல்லா செக்ஸ் பிரச்சினைகளையும் தீர்த்து விடலாம் எ‎ன்று சொல்வதற்கில்லை எ‎ன்கிறார் அர்னால்ட் கீகெல். ஆ‎னால் ‏இன்பமான நேரங்களை அதிகரிக்க ‏ இதுவும் பெருமளவில் உதவக்கூடும் எ‎ன்று சொல்ல வேண்டும் எ‎ன்கிறார் அவர். நல்ல செக்ஸர்ஸைஸ்.. சாரி எக்ஸர்ஸைஸ்தானே!!

தூக்கத்தில் விந்து தானாகவே வெளிப்படுதல் குறையும் எனவும், பருவ வயதினரி‎ன் சுயஇன்ப வேட்கை குறைந்து பிற விஷயங்களில் கவ‎னம் செலுத்த ஏதுவாக அமையும் என்றும் கூறுகிறார்.

அதோடல்லாமல் இந்தப் பயிற்சி சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுவதால், பல வகை நோய்களிலிருந்தும் நம்மை அப்பாற்படுத்துகிறது. 'மலச்சிக்கல் இல்லையேல் உடலில் எந்தச் சிக்கலும் இல்லை' என்பது மு‎ன்னோர் சொலவடை.

ஆரம்ப காலங்களில் இதைத் தொடர்ந்து செய்வதற்கு மறந்து போகக்கூடும். சிறு டைரியைப் போட்டு செயல்பாடுகளை எழுதிக் கொள்வது நல்லது. தொடர்ந்த பழக்கத்திற்கு வந்த பி‎ன்னர், அது தேவையில்லை. த‎ன்னிச்சையாக செயல்படுத்த ஆரம்பித்து விடுவீர்கள்!

வாழ்க வளமுட‎ன்!

                                                                        -ரிஷிகுமார்.

பிரமிட் தியானம்...

ஒரு மனிதனின் மனம் எவ்வாறு செயல்படுகிறதோ அதே போல அவன் வாழ்க்கையும் அமைகிறது. மனம் குழம்பிய நிலையில் சோர்வாக, மந்தமாக இருக்குமேயானால் அவன் வாழ்வும் குழம்பித்தான் போகிறது. தெளிவான மனம் தெளிந்த கருத்தை அள்ளித் தருகிறது.


அமைதியான மனதை அடைய என்ன வழி?

"தியானம்" தான். தியானம் ஒன்று மட்டுமே நம் மனதைப் பண்படுத்தி நம் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

இப்போது "விடக்கா" என்றச் சொல்லைப் பற்றிச் சொல்கிறேன். பாலி மொழியில் "டக்கா" என்றால் தர்க்கம் எனப்படும். " விடக்கா" என்றால் மனிதனின் அலைபாயும் மனதைக் குறிக்கும். அன்றாட வாழ்க்கையில் கடந்து போன சம்பவங்கள் திரும்பத் திரும்ப நினைவில் வந்து நம்மை மூழ்க வைக்கும். இந்த நிலையை விடக்கா என்று சொல்லலாம். இந்த நிலை நமக்குள் இருக்கும் நமக்குள் இருக்கும் சக்தியை உணரவிடாமல் செய்கிறது. "பிரமிட் தியானம்" இந்தச் சக்தியைக் கொடுக்கிறது. இதை "ஆனாபானா சதி "என்ற பெயரில் அழைக்கின்றனர். இதை ஒழுங்காகச் செய்தால் இந்த "விடக்கா "என்ற பலதரப்பட்ட எண்ண ஓட்டங்களிலிருந்து விடுபடலாம். மனம் சலனமற்ற நிலையை அடைகிறது.

ஆனாபானாசதி, பாலி மொழியில் "ஆனா" என்றால் உள்ளே இழுக்கும் மூச்சு. "அபானா" என்றால் வெளியே விடும் முச்சு. "சதி" என்றால் உடன் இருத்தல். அதாவது உள்மூச்சு வெளிமூச்சுடன் நாம் உடன் இருக்க வேண்டும். அப்படியே ஒன்ற வேண்டும். அதையே உன்னிப்பாய் கவனிக்க வேண்டும். இயற்கையாக சுவாசித்தலைக் கவனிக்க வேண்டும். இந்த தியானம் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

இதைச் செய்யும் முறை :

வசதியான விதத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றாகக் கோர்த்துக் கொண்டு கண்களையும் மூடிக் கொள்ளுங்கள். எல்லா உறுப்புக்களையும் தளர்த்திக் கொள்ளுங்கள். மனதால் எல்லா உறுப்புக்களும் தளர்ந்து விட்டதை உணருங்கள். பின் தியானம் ஆரம்பம்.

மூச்சு உள்ளே, வெளியே செல்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். எண்ணங்கள் வந்து போகலாம். அது தானாகவே வந்து போய், பின் அடங்கி விடும். அதைக் கட்டுப்படுத்தாதீர்கள். எண்ணங்களின் மேல் இருக்கும் கவனிப்பை விடுத்து சுவாசத்தின் மீது கவனம் செலுத்துங்கள்.

நம் மூக்கு தான் பிரமிட் என்று எண்ண வேண்டும். கொஞ்ச நேரத்தில் மன அழுத்தம் குறைந்து மனம் மலர்ந்து விரிவதைப் பார்க்கலாம். இதைச் செய்வதால் பிராணசக்தி நம் உடலில் பெருகுகிறது. மனம் தெளிவு பெறுகிறது. உணர்ச்சிப் பெருக்கில் நல்ல மாற்றம் உண்டாவது நமக்குத் தெரிகிறது. ஒரு சாந்த நிலை ஏற்படுகிறது. ஆன்மா ஊக்கப்படுகிறது. இந்தத் தியானம் ஆரம்பத்தில் பத்து நிமிடங்கள் செய்யலாம். பின் நன்கு பயிற்சி ஆனபின், 60 நிமிடம் வரை செய்யலாம்.

எகிப்து தேசத்தின் பிரமிட்கள் சுமார் 5000 வருடங்கள் பழமையானவை. இறந்த உடல்கள் இங்கு கெடாமல் இருப்பதாகச் சொல்கிறார்கள். . பிரமிட்டின் கீழே தூங்குபவர்களுக்கு ஹைபர்டென்சன், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் மறைகின்றன.

விஞ்ஞானி லியால் வாட்சன் சொல்கிறார், "சிறிது நேரம் இதன் கீழ் அமர்ந்து மௌனமாகக் கண்களை மூடினாலும் கூட அது பலனைக் கொடுத்து விடுகிறது. மன அழுத்தம் மிகப்பெருமளவில் குறைந்து விடுகிறது"

பிரமிட் வடிவ டப்பாவில் நகைகள் அப்படியே புதுப் பொலிவுடன் இருக்கின்றன. சிறிது நீரை இதனுள் வைத்துப் பின் முகம் கழுவ, முக சுருக்கம் மறைகிறது. முக லோஷன் போல் உதவுகிறது. காய்கறிகள் பிரமிட்டில் வைக்க அப்படியே வாடாமல் இருக்கின்றன, உணவுப் பொருட்களும் கெடுவதில்லை. தவிர, மருந்துகளும் பிரமிட் டப்பாவில் வைக்க கூடுதல் நன்மை அளிக்கின்றனவாம்.

தலைவலிக்கு பிரமிட் போன்று அட்டையில் வடிவம் அமைத்து தலையில் தொப்பி போல் வைத்துக் கொள்ள, தலைவலி மறைகிறது. சிலர் வீடுகளிலும் இந்த மாதிரி வடிவம் அமைத்துக் கொள்கிறார்கள். நம் தமிழ் நாட்டுக் கோயில்களில் கோபுரங்களைக் காணலாம். அதே போல் எல்லாக் கேரளக் கோயில்களும் பிரமிட் வடிவத்தில் அமைந்தவையே.

தமிழ் நாட்டில் கோயம்பத்தூரில் வடவள்ளி என்னும் இடத்தில் பெரிய பிரமிட் கட்டிடம் உள்ளது. இதனுள் அமர்ந்து பலர் தியானம் செய்கிறார்கள். இதில் மூன்று மாடிகள் உள்ளன. மூன்றும் பிரமிட் வடிவம் தான். இந்தத் தியானம் செய்யும் முறை மிக எளிது என்பதால் எல்லோரும் இதைச் செய்ய முடியும். இத்தனை உபயோகம் தரும் இதை நாம் வாழ்க்கையில் பழக்கப்படுத்திக் கொள்ளலாமே!

                                             -விசாலம்.

Tuesday, December 8, 2009

வாழ்க்கையை முழுமையாக வாழ எளிய சுய-மனோவசிய பயிற்சி

இந்த பிரபஞ்சத்தில் நாம் வாழும் ஒவ்வொரு வினாடித் துளிகளும் நமக்கென்றே பரிசளிக்கப்பட்ட மிக அழகான தருணங்கள். ஒவ்வொரு தருணத்திலும் பல்வேறு அனுபவங்கள், அதற்குள் பொதிக்கப்பட்ட சின்ன சின்னச் சந்தோஷங்கள் என வியாபித்திருக்கின்றன. அவற்றைத் தேர்வு செய்யும் சுதந்திரமும் நம் கையில் இருக்கிறது.

ஆனால், நாமோ நம்முடைய அன்றாடத் தேவைகளுக்காக ஓட ஆரம்பித்து, நமது எதிர்காலம், நமது வருங்கால சந்ததியினரின் தேவைகள் என ஓடிக் கொண்டே இருக்கிறோம். வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான குறிக்கோள். ஒரு இலக்கை குறித்துக் கொண்டு ஆரம்பித்த ஓட்டம் காலப் போக்கில் மாறி விடுகிறது. சிலர் குறித்த இலக்கை அடைகிறார்கள். சிலர் அடைவதில்லை. பலருக்கு அடைந்தும் திருப்தியில்லை. உண்மையில் வெற்றியோ மன அமைதியோ - எதனையும் அடையக் கூடிய சக்தி நம்முள்ளேதான் உள்ளது.

நம் உண்மையான வழிகாட்டியான ஆழ்மனதை (sub-conscious) எளிய சுயமனோவசிய பயிற்சிக்குப் பழக்கி நாம் விரும்பும் நல்ல மாற்றத்தை நம் வாழ்க்கையில் கொண்டு வரலாம். தியானத்தின் போது இருக்கும் மனநிலைதான் ஆழ்மன சுயமனோவசியப் பயிற்சியின் மனநிலையும்.

இதோ பயிற்சிக்கான எளிய வழிகள்:

• முதலில் ஒரு அமைதியான இடத்தில் சற்று வசதியாக அமர்ந்து கொள்ளவும்.

• பிறகு கண்களை மூடி, மூச்சை நன்றாக உள் இழுத்து, சில வினாடிகள் வைத்திருந்து, பின் வெளியே விடவும். இதே போன்று மூன்று முறை செய்யவும்.

• பிறகு, தலையிலிருந்து பாதம் வரை மெதுவாக கவனத்தைக் கொண்டு செல்ல வேண்டும். முதலில் ஒவ்வொரு தசையும் ஓய்வாக உணரும்படியாக, 'ரிலாக்ஸ்' என்ற ரம்மியமான கட்டளையுடன், உச்சந்தலையில் ஆரம்பித்து முன் மண்டை, முகம், கழுத்து என அடி வரை அவசரமில்லாமல் கவனத்தை கொண்டு செல்ல வேண்டும். நமது உடலின் ஒவ்வொரு பாகத்தின் தசையும் ரிலாக்ஸ் ஆவதை கண்களுக்குள் காட்சியாகவும் உருவகம் செய்யலாம்.

 பயிற்சியின்போது வெளியிலிருந்து எண்ண அலைகள் தாக்காமல் இருக்க, நம்மைச் சுற்றி ஒரு வெள்ளை ஒளி சூழ்ந்து பாதுகாப்பதாக கற்பனை செய்து கொள்ளவும்.

• உடலின் ஒவ்வொரு பாகத்தின் தசையும் ஓய்வாக உணர்ந்து, ஒரு பாதுகாப்பு கவசத்தையும் உருவாக்கிய பிறகு, பத்திலிருந்து ஒன்று வரை எண்ணிக் கொண்டே மேலிருந்து கீழ் நோக்கி, மாடிப்படி வழியாகவோ அல்லது எலிவேட்டர் (Elevator) மூலமாகவோ இறங்குவதாக கற்பனை செய்யவும். ஒவ்வொரு எண்ணை எண்ணும்போதும் இன்னும் ஆழமாக, இன்னும் ஆழமாக என்று கூறிக்கொண்டே இறங்கவும். (கவனம் சிறிது பிசகுவது போல உணர்ந்தால், பத்திலிருந்து ஒன்று வரை எண்ணிக் கொண்டே இறங்குவதை இரண்டு முறை செய்யலாம்.)

• இப்பொழுது நீங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்தமான, மிக அழகான, மிக இனிமையான ஒரு இடத்திற்கு வந்து விட்டதை உணருங்கள். அந்த இடம் உங்கள் குழந்தைப் பருவத்தைக் கழித்த இடமாகவோ அல்லது உங்கள் விடுமுறை நாட்களில் செல்லும் இடமாகவோ அல்லது ஒரு கற்பனை இடமாகவோ கூட இருக்கலாம். மெதுவாக உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு பொருளையும் பாருங்கள். மிருதுவாக அவற்றை தொட்டுப் பாருங்கள். சுற்றிக் கேட்கும் இனிமையான ஒலி, ஒருவிதமான நறுமணம் ஆகியவற்றை உணருங்கள். இந்த அனுபவம் மனக் கண் முன் தெளிவான உயிரோட்டமுள்ள காட்சியாகட்டும்.

• இப்பொழுது, உங்கள் குறிக்கோளைக் கற்பனை செய்யத் தொடங்கலாம். அந்தக் குறிக்கோள் கற்பனையில் காட்சியாகவோ, செயலாகவோ அல்லது வார்த்தை வடிவாகவோ இருக்கலாம். குறிக்கோள் கற்பனை பலமுறை செய்யவும்.

 பிறகு, அந்த குறிக்கோள் முழுமை அடைவதை பல நிலைகளாக்கி, ஒவ்வொரு நிலைக்கும் சென்று, அந்த ஒவ்வொரு நிலை வெற்றி தரும் அனைத்து உணர்வுகளையும், அமைதியாக முழுமையாக அனுபவிக்கவும்.

• இதில் மிக முக்கியமானது, பயிற்சி பலன் கொடுக்க, நாம் உபயோகிக்கும் அனைத்து வார்த்தைகளும் நேர்மறையானவையாக இருக்க வேண்டும்.

• பயிற்சி முடிந்தவுடன், ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணிக் கொண்டே, 'மிக உற்சாகமாக, சந்தோசமாக இருக்கிறேன்' என்று கூறிக் கொண்டே கண்களை மெதுவாகத் திறக்கவும்.

நம்மில் பலருக்கு அலாரம் அடிக்கும் முன்னே அல்லது அடித்து முடிக்கும் முன் எழும் பழக்கம் இருக்கக்கூடும். அதேபோல் பயிற்சி ஆரம்பிக்கும்போது நம் மனத்திற்குள் குறிப்பிட்ட நிமிடப் பயிற்சி என்று சொல்லி விட்டால் போதும். நம் உடலில் உள்ள பயோகிளாக் (bio-clock) அதை தானே செட் செய்து கொள்ளும். அந்த நேரம் முடிந்ததும் தானாகவே பயிற்சியிலிருந்து நீங்கள் வெளியேறுவதை உணர்வீர்கள்.

பயிற்சியில் பதிவு செய்ய சில எடுத்துக்காட்டுகள்:

• நான் எப்பொழுதும் உற்சாகத்துடன், மகிழ்ச்சியுடன் இருப்பேன்.

• இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

• என்னுடைய நோய் எதிர்ப்பு சக்தி சரியான முறையில் வேலை செய்து என்னை ஆரோக்கியமாக வைக்கும்.

• நான் என்னைச் சுற்றியுள்ள அனைவரிடம் அன்பாக நடந்து கொள்வேன்.

• எனக்கு உடற்பயிற்சி செய்வது மிகவும் பிடிக்கும்.

• நான் என் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தி அதிக மதிப்பெண் பெறுவேன்.

பதிவு செய்யும் தகவல்களை விருப்பம்போல் அமைத்துக் கொள்ளலாம். அதே போல், ஆரம்பத்தில் ஒரு வாரத்திற்கு ஒரு விஷயம் என ஆரம்பித்து, பின் நாட்களைக் குறைத்தோ அல்லது கூட்டியோ கொள்ளலாம்.

ஆரம்ப காலத்தில் இந்தப் பயிற்சி தனியான அமைதியான இடத்தில் செய்ய ஆரம்பித்து, பின் இதை நாம் பயணம் செய்யும்போது கிடைக்கும் நேரத்திலோ, வேலையின் இடையில் கிடைக்கும் சில நிமிடங்களிலோ கூட செய்யலாம். சில நிமிடங்கள் கண்ணை மூடிச் செய்யும் பயிற்சி பொதுவாக மற்றவர்கள் பார்வையிலும் கவனிப்புக்குரியதாகாது.

சம தரையில் படுத்துக் கொண்டு, கண்களை மூடி உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் கவனம் செலுத்துதல் மற்றும் அதை அன்பாக நேசிப்பதாக உணர்வது என்பது போன்ற சுயமனோவசிய பயிற்சி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருப்பதால் பல யோகா மையங்களில் இப்பொழுது இது பயிற்றுவிக்கப்படுகிறது.

இந்த எளிய பயிற்சி மூலம் மிகப் பெரிய வெற்றி அடைகிறோமோ.. இல்லையோ, விரக்தி, மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வு இல்லாத ஒரு வாழ்க்கையை முழுமையாக, அதே சமயம், பிறரைக் காயப்படுத்தாத வகையில், சந்தோசமாக வாழலாம்.

                                                      - ஹேமா மனோஜ்.

மூலம்: இணையம்

Friday, December 4, 2009

மோர்குழம்பு...

 

கிச்சன் டிப்ஸ்...

1. வாழைக்காய் நறுக்கும்போது கையில் ஏற்படும் பிசுக்கு நீங்க சிறிது தயிரால் கையைக் கழுவலாம்.

2. காலிபிளவர், கீரை இவற்றை சமைப்பதற்கு முன்பு வெந்நீரில் சிறிது உப்பு சேர்த்து அதில் சிறிது நேரம் போட்டு வைத்தால் அவற்றில் உள்ள புழு, மண் அடியில் தங்கிவிடும்.

3. குருமா, தேங்காய் சட்னி இவற்றிற்கு அரைக்கும்போது முந்திரி பருப்பு சில சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.

4. அடைக்கு அரைத்த மாவில் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.

5. ஜவ்வரிசியை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அடை, வடை, தோசை செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறுமொறுவென்றிருக்கும்.

6. அடை, பக்கோடா செய்யும்போது புதினா இலை சேர்த்து செய்தால் வாசனையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.

7. தக்காளியின் தோல் நீக்க தக்காளியின் மேல்பக்கமும் கீழ்ப்பக்கமும் கத்தியால் சிறிது கீறிவிட்டு 10 நொடிகள் சுடுநீரில் போட்டு எடுத்தால் தோல் சுலபமாகக் கழன்று விடும்.

8. சப்பாத்தி மாவுடன் சோயா மாவும் சேர்த்து சப்பாத்தி செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புரோட்டின் சத்தும் கிடைக்கும்.

9. சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து போய்விட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சேமியா தனித்தனியாகிவிடும்.

10. குலோப்ஜாமூன் செய்யும்போது உருண்டை கல் போலாகிவிட்டால் ஜீராவுடன் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் மென்மையாகிவிடும்.

11. கட்லெட் செய்ய 'பிரெட் கிரம்ப்ஸ்' கிடைக்கவில்லையெனில் ரவையை மிக்சியில் அரைத்து பயன்படுத்தலாம்.

12. கூடையில் வைத்திருக்கும் உருளைக்கிழங்கு முளை விடாமல் இருக்க, கூடவே, கூடையில் ஒரு ஆப்பிள் பழத்தையும் போட்டு வையுங்கள்.
                                                
                                                         - ஆர்.கே.தெரஸா

எப்படி சமைப்பது?

எந்த உணவையும் தவறான முறையில் சமைத்தால் கெடுதிதான்.


1. மீன், பருப்பு வகைகளைப் பொரித்து உண்பதை விட வேகவைத்து உண்பதே மிகச்சிறந்தது. வைட்டமின் 'ஈ' (E) சத்து இவற்றில் அதிகம் உள்ளது. சமைத்தவுடன் சாப்பிடுவது சாலச்சிறந்தது.

2. தக்காளி, குடைமிளகாய், எலுமிச்சை ஆகியவற்றில் வைட்டமின் 'சி' (C) சத்து அதிகமுள்ளது. இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. அதிகச்சூட்டில் சமைக்கக் கூடாது. செப்புப் பாத்திரத்தில் சமைக்கக்கூடாது.

'3. அவரை, பீன்ஸ் போன்றவற்றை அதிக தண்ணீர் சேர்க்காமல் தண்ணீர் தெளித்து வேகவைக்க வேண்டும். எண்ணெய் அதிகம் சேர்க்காமல் தாளித்து சாப்பிடலாம்.

4. பால், கேரட் ஆகியவற்றில் வைட்டமின் 'ஏ' (A) சத்து அதிகமுள்ளது. இவற்றை அதிக சூட்டிலோ, அதிக நேரமோ சமைத்தால் சத்துக்கள் அனைத்தையும் இழந்துவிடும்.

5. கீரை வகைகளை நன்கு கழுவியபின் நறுக்க வேண்டும். நறுக்கியபின் கழுவினால் அதிலுள்ள சத்துக்கள் தண்ணீருடன் போய்விடும். கீரையை அதிகம் தண்ணீர் சேர்க்காமல் வேக வைக்க வேண்டும்.

6. மட்டன், சிக்கன் இவற்றை பொரிப்பதைவிட நன்கு வேக வைத்து சாப்பிடுவதே நல்லது. சிக்கனை தயிரில் ஊறவைத்து சமைத்தால் அதிலுள்ள நச்சு நீங்கிவிடும்.

7. பாயசம், சர்க்கரைப்பொங்கல் இவற்றில் தேன் சேர்ப்பது தவறு. தேனை ஒருபோதும் சூடுபடுத்தக்கூடாது. பிசின் போல குடலில் ஒட்டிக்கொள்ளும். விஷம் கொண்டதாகிவிடும்.           
                                                              - ஆர்.கே.தெரஸா.

உனக்குள் உள்ளது சக்தி, - சித்ரா பாலு.

நாம் வாழ்க்கையில் தினசரி எத்தனையோ பேரைச் சந்திக்கிறோம். அவர்களிடம் 'நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது?' என்று கேளுங்கள். அவர்களுடைய பதில் என்னவாக இருக்கும் தெரியுமா? 'ஏதோ போகிறது', 'என்னவோ ஓடிக்கிட்டு இருக்கு', 'எப்படியோ தள்ளிக்கிட்டு இருக்கேன்' என்ற தொனியில்தான் இருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் இது மாதிரியான பதில் சொல்கின்றவர்கள் 60 வயதினர் மட்டுமல்ல; பதினேழு பதினெட்டு வயது கல்லூரி மாணவர்களும்தான்!


இதற்குக் காரணம் என்ன என்று யோசிப்போமா?...

அம்மாவுக்குப் பிடித்த டிரஸைப் போட்டுக் கொண்டு, அப்பாவுக்குப் பிடித்த பாடத்தைப் படித்துக் கொண்டு, கணவனின் விருப்பத்திற்கேற்ப பிள்ளை பெற்றுக்கொண்டு, குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ப வாழ்ந்துகொண்டு... இப்படி அடுத்தவர்களுக்காக வாழும் மனப்பான்மையினால் இந்தச் சலிப்பு ஏற்படுகின்றதா? இருக்கலாம்.

ஒவ்வொரு மனிதனும் தன் மனதிற்குப் பிடித்த மன நிறைவான, தன்னிறைவான வாழ்க்கையை வாழத்தான் விரும்புகிறான்.ஒரு திருப்தியான - எதிர்பார்த்து விரும்பிய வாழ்க்கை எல்லோருக்கும் கிடைக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பலருக்கு எது தன்னிறைவான வாழ்க்கை என்று தெரிவதில்லை. பணமாக இருக்குமோ, பதவியாக இருக்குமோ, அதிகாரமாக இருக்குமோ என்று ஒவ்வொன்றாகத் தேடித் தேடி, கானல்நீரைத் தேடி ஓடும் மான்கள் போல ஏமாந்து நிற்கின்றனர்.

தன்னிறைவான - மனத்திற்குப பிடித்த வாழ்க்கையை அமைத்துக் கொள்வது எப்படி?

முதலில் உங்களுக்கு உங்களைப் பற்றிய தெளிவான பார்வை வேண்டும்!

என்ன தெளிவு?

உங்களுள் ஒளிந்திருக்கும் தனித்திறமைகள் என்னென்ன, உங்களுடைய ஆழ்மன ஆர்வம் என்ன, நீங்கள் மதித்துப் போற்றக் கூடியவை என்னென்ன என்பவை பற்றித் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

கண்டுபிடித்து விட்டீர்களா?

இப்போது அவற்றை எப்படி ஆக்கபூர்வமாக ஆதாய வழியில் பயன்படுத்தலாம் என்று யோசியுங்கள்.

இந்தக் கண்டுபிடிப்புகளில் நீங்கள் வெற்றி அடைந்தால், அதுவே உங்களை உயர்த்தக் கூடிய ஒரு நெம்புகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை.

சரி.. உங்கள் மனதில் உடனடியாக ஒரு வினா எழ வேண்டுமே!

ஏன் உங்களுடைய திறமை அல்லது ஆழ்மன ஆர்வத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்?

இதற்கு பதில் யோசிப்பதற்கு முன் இன்னொரு கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்!



ஆழ்மன ஆர்வம் என்பது என்ன?

அதுதான் சக்தி... வீரியம். இப்போது புரிந்ததா? உங்கள் ஆழ்மன ஆர்வம் கண்டுபிடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை!

ஆம்! உங்களுடைய அடிமனதில் ஒளிந்திருக்கும் பேரார்வம்தான் சக்தியை எழுப்புகிறது! அந்த சக்தி, நீங்கள் விரும்பக்கூடிய மனநிறைவான வாழ்க்கையைத் தரும்.

எப்படி இந்த ஆழ்மன ஆர்வத்தை அறிந்து கொள்வது?

உங்களுக்குள் பல கேள்விகளை எழுப்பி விடை காண்பதன் மூலம் உணரலாம்.
நீங்களும் வாழ்க்கையில் கேள்வி கேட்டிருப்பீர்கள்! வாழ்க்கையில் 'எனக்கு வேண்டியன யாவை' என்று. இந்தத் தவறான கேள்விதான் மனித சமுதாயத்தின் பொருள் தேடலுக்குக் காரணமாக அமைகின்றது. இந்தத் தேடலில் நீங்கள் எதிர்பார்க்கும் மனநிறைவு கிடைக்கின்றதா என்றால் நிச்சயமாக இல்லை. அதனால்தான் வீட்டிலும் வேலை பார்க்கும் இடங்களிலும் மனம் நிறைவு அடையாமல் போராட்டத்தில் இருக்கிறது.

ஆழ்மன ஆர்வத்தைத் தெரிந்து கொள்ள நீங்கள் உங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் எவையெவை தெரியுமா?

1. நான் யார்? எதற்காகப் படைக்கப்பட்டுள்ளேன்?

2. நான் மற்றவர்களுக்கு அதிகமாக கொடுக்க விரும்புவது எது?

3. எனக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செயல் எது?

4. மற்றவர்கள் என்னை எதற்காக நாடுகின்றனர்?

5. நான் எதற்காகப் பாராட்டப்படுகின்றேன்?

6. என்னுடன் நெருக்கமாக உள்ளவர்கள் என்னுடைய ஆழ்மன ஆர்வம் எது என்று கூறுகின்றனர்?

7. எந்த மனிதரால், எந்த இடத்தால், எந்தப் பொருளினால், எந்தச் சிந்தனையால் கவரப்படுகின்றேன்?

இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் உங்களைப் பற்றி நீங்கள் உணர்ந்து கொள்ள ஓரளவு துணையாக இருக்கும்.

இத்தனை பாடுபட்டு ஆழ்மன ஆர்வத்தை அறிந்து கொண்டு என்ன செய்யப்போகிறோம்?

இறைவனின் படைப்புகளில் எதுவுமே குறிக்கோள் இன்றி படைக்கப்பட்டதல்ல. ஒரு உதாரணத்தைப் பாருங்கள்!

மனம் ஒன்றி அன்போடு வாழ்ந்த தம்பதியருள் மனைவி இறந்து விடுகின்றாள். மனதைக் கல்லாக்கிக் கொண்டு கொள்ளி வைக்கும் கணவன், ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு மனைவியைப் பற்றி யோசிக்கின்றான். 'என் மீது முழுமையாக அன்பு வைத்திருந்தாய். என்னுடைய கனவுகளுக்கு உறுதுணையாக இருந்ததோடு அவற்றை செயல்படுத்த முழுச் சுதந்திரம் கொடுத்தாய். உன்னைப் பிரிந்திருப்பது எனக்குத் துன்பந்தான். ஆனால் உன்னுடைய அன்பு, அரவணைப்பு, ஆன்மா இவையனைத்தும் என்னைச் சுற்றியே இருக்கும்' என்று நினைத்தவாறு கொள்ளி வைக்கிறான்.

அந்த மனைவி இறந்த பின்னரும், கணவனுக்கும் அவள் குழந்தைகளுக்கும் இனிமையான நினைவுகளை விட்டுச் சென்றிருக்கிறாள்.

இறந்த பின்னரும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு நீங்கள் ஒரு ஈடுகட்ட முடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள் என்றால் அதுதான் உங்கள் வாழ்வின் பயனாகும்.

Wednesday, December 2, 2009

தவறைத் திருத்துவது எப்படி?

* உடல், உயிர், அறிவு... இம்மூன்றும் உங்களுக்கு சொந்தம் கிடையாது. நீங்கள் உண்பதால் வளரும் உடலும், உயிரும், அனுபவ தேடலால் கிடைக்கும் அறிவும்கூட, இறைவனால் மட்டுமே உங்களுக்கு கிடைக்கிறது. மற்றபடி உங்களுக்கும், அதற்கும் சிறு சம்பந்தம் கூட கிடையாது. ஆகவே, நீங்கள் பெற்றிருக்கும் உடல்பலம் மற்றும் புகழ், பெயருக்காக கர்வம் கொள்ளாதீர்கள். உங்களால் உண்டாவது எதுவும் இல்லை என்ற உண்மையை புரிந்துகொண்டு கர்வத்தை விட்டுவிடுங்கள்.

* நீங்கள் ஒரு உயர்ந்த கட்டடத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். அங்கிருந்து கீழே இறங்க வேண்டுமென நினைக்கிறீர்கள். அதற்காக உடனேயே, மேலிருந்து குதித்துவிட முடியாது. படிகளின் வழியாக இறங்கி வருவதுதான் சரியான வழியாக இருக்கும். இதைப்போலவே தவறு செய்துவிட்டு, திருந்த வேண்டுமென நினைப்பவர்கள்

உடனேயே, உணர்ச்சி வசப்பட்டு "திருந்திவிட்டேன்' என்று சொன்னால் மட்டும் போதாது. அவ்வாறு சொல்பவர்களை, முழுமையாக திருந்திவிட்டதாக ஏற்கவும் முடியாது. மனதை படிப்படியாக அமைதிப்படுத்தி, இறைவனின் மீது செலுத்த முயற்சி செய்ய வேண்டும். அப்போது தான் மனம் திருந்தும். தவறுகள் ஏற்படாது.

* நீங்கள் இறைவனிடம் பக்தி செலுத்தி, நன்னிலை பெறுவதற்காகவே இவ்வுலகில் படைக்கப்பட்டிருக்கிறீர்கள். இறைவனிடம் பக்தி செலுத்துபவர்கள் தான் மேன்மையான நிலையை அடைய முடியும். உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உடல் வாகனம் போன்றது. அந்த வாகனத்தை பழுதுபடுத்திவிடாமல், செம்மையாக பராமரித்து, மனதையும், உடலையும் இறைவனிடம் செலுத்த வேண்டும். அப்போதுதான் நீங்கள் உங்களது கடமையை முழுமையாக நிறைவேற்றியவர் ஆவீர்கள்.

                                                                                                            -வேதாத்திரி மகரிஷி

Sunday, November 29, 2009

இந்திரா காந்தி காதல் திருமணம்...

காதலிப்பவர்கள் அனைவரும் தைரியமானவர்களா? அல்லது தைரியமானவர்கள் அனைவரும் காதலிக்கிறார்களா?

இலவசங்களின் மறுபக்கம்.

இலவச திட்டங்களால் குறையும் மனிதஉழைப்பு









மிழக அரசு வழங்கும் இலவசப் பொருட்களால், கிராமப்புறங்களில் மனித உழைப்பு குறைந்து வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் மக்களை கவர்ந்து ஓட்டு பெறுவதற்காக, வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. வெற்றி பெற்றதும் எதிர்க்கட்சிகளின் ஏளனத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்பதால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுகின்றனர். இதன் விளைவு தான், இன்று தமிழக மக்களிடையே ஆட்டிப் படைத்து வரும் சோம்பேறித்தனம்.

சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய இலவசங் களை வைத்தே எளிதில் குடும்பம் நடத்தி விட முடியும் என்ற புதிய கலாசாரம், தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இலவச "டிவி', காஸ், மண் ணெண்ணெய், குடிசைக்கு மின் சாரம், சைக்கிள், பாடநூல் உள் ளிட்ட பல திட்டங்களை செயல் படுத்தி வருகின்றன. இவற்றில் மாதந்தோறும் பணத் தை ஈட்டி தருவதற்கென்றே சில இலவசங்கள் வழங்கப்படுகின்றன.

நகரங்களில் வசிப்பவர்களுக்கு போதியளவு சமையல் காஸ் கிடைப்பதில்லை. ஆனால், கிராமப்புற மக்களுக்கு சமையல் காஸ் இணைப்பை அரசு இலவசமாக வழங்குகிறது. இதைப் பயன்படுத்த பலருக்கு தெரியாத காரணத்தாலும், கூடுதல் செலவு பிடிக்கும் என்பதாலும் இயற்கையில் கிடைக்கும் விறகில் சமையல் செய்து கொண்டு, அரசு வழங்கும் காஸ் சிலிண்டரை விற்பனை செய்து காசாக்கி வருகின்றனர்.

இதற்காக, 20 நாட்களுக்கு ஒருமுறை கிடைக்கின்ற காஸ் சிலிண்டரை 275 ரூபாய்க்கு வாங்கி ஓட்டலில் விற்றால், 525 ரூபாய் உடனடியாக பணம் கிடைக்கிறது. ரேஷன் அட்டை மூலம் கார்டு ஒன்றுக்கு கிடைக்கும் 10 லிட்டர் மண்ணெண்ணெய், லிட்டர் 8.60 ரூபாய்க்கு வாங்கி 25 ரூபாய்க்கு விற்பனை செய்வதன் மூலம் மாதம் ஒன்றுக்கு 164 ரூபாய் கூடுதலாகக் கிடைக்கிறது.

சாதாரண தொழிலாளர்கள் பெரும்பாலானோருக்கு முதியோர் பென்ஷன் தொகையாக மாதம் 400 ரூபாய் அரசு வழங்குகிறது. நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் மாதத்திற்கு சராசரியாக 1,000 ரூபாய் கிடைக்கிறது. இவற்றின் மொத்த கூடுதல், மாதம் ஒன்றுக்கு 2,000 ரூபாயை எட்டுகிறது. இதுதவிர முதியோர்களுக்கு இலவச அரிசி, வேட்டி, சேலை, பொங்கல் பண்டிகை காலங்களில் பொங்கல் பொருட்கள், கர்ப்பிணி பெண்களுக்கு சத்துப் பொருட்கள் சாப்பிட கடைசி மூன்று மாதமும், குழந்தை பிறந்த பின்னர் மூன்று மாதமும் 6,000 ரூபாய் உதவித்தொகை, பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு இலவச உணவு, புத்தகம், திருமண உதவி என அனைத்து மே அரசு வழங்குகிறது.

மாதந்தோறும் அரசு மூலம் கிடைக்கின்ற இலவசங்கள் தான் அடித்தட்டு மக்களின் மனதை புரட்டிப் போட்டுள்ளது. "உழைத் தால் தான் உணவு' என்பதை பொய்யாக்கும் வகையில், உழைக்காவிட்டாலும் உணவு என அரசின் திட்டங்கள் மாற்றியுள்ளது. அரசின் இந்த இலவசங்கள் மூலம் கிடைக்கும் 2,000 ரூபாயில் கிலோ ஒரு ரூபாய் வீதம் 20 கிலோ அரிசி, மானியத்தில் கிடைக்கும் கோதுமை, ரவை, மைதா, மளிகை போன்ற பொருட்களை ரேஷன் கடைகளிலேயே 200 ரூபாயில் வாங்கி விடலாம். மீதியுள்ள 1,800 ரூபாயில் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய, இதர பொருட் கள் வாங்கி எளிதில் குடும்பத்தை ஓட்ட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், கிராமங்களில் மாடு உழவு, களை எடுப்பது, அறுவடை போன்ற விவசாய வேலைகளுக்கு ஆட்கள் வருவதில்லை. என்ன தான் இயந்திரமயமாக்கலில் அரசு ஈடுபட்டாலும், இயந்திரத்தை இயக்குவதற்கும் மனித ஆற்றல் தேவை. இதனால், மனித ஆற்றல் பயன்படுத்தாத சவுக்கு, கரும்பு, பாமாயில், மூங்கில் போன்ற பயிர்களுக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். இதனால், உணவு உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலகளவில் மக்கள் தொகையில் இரண்டாம் இடம் வகிக்கும் நம் நாட்டுக்கு, அன்னிய நாட்டில் இருந்து உணவை இறக்குமதி செய்து சமாளிக்க முடியும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதால், அரசு வழங்கும் இலவசங்களை தகுதி உள்ளவர்களுக்கு வழங்கினால், உணவுக்காக அன்னிய நாட்டிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படாது.

குறைந்த விலைக்கு விற்கப்படும் அரசின் இலவச பொருட்கள் : அரசு வழங்கும் இலவசப் பொருட்கள் பல குடும்பங்களில் தேவையை விட கூடுதலாக இருப்பதால், குறைந்த விலைக்கு கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ரேஷன் கார்டை வைத்து தான் இலவசங்கள் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரே குடும்பத்தில் மூன்று சகோதரர்கள் இருந்தால், அவர்களுக்கு தனித்தனியே ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.

ஆனால், மூன்று வீடுகள் இல்லை. இது போன்ற குடும்பத்திற்கு ஒரு "டிவி' தான் பார்க்க முடியும். தேவையற்று கிடக்கும் இரண்டு "டிவி'க்களை 1,000 முதல் 1,200 ரூபாய் வரை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலையை பெரும்பாலான மக்கள் உடுத்துவதில்லை. இவை அனைத்தும் பாத்திரங்கள் விற்பனை செய்பவர்களிடம் வேட்டி, சேலை ஜதை ஒன்று வெறும் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

                (நன்றி. தினமலர் நாளிதழ். தேதி: ஆகஸ்ட் 16,2009.)

மெல்ல மறையும் பின்னல் அழகு!!!



ங்கே சென்றது நம் பாரம்பரிய பின்னல் முடியலங்காரம்? எங்கள் கிராமத்துப் பெண்மணிகள் முடியை அழுத்தி வாரி சிக்கெடுத்து, எண்ணை வார்த்து, தேங்காய் நார், கலர் கலராக சணல், சில்க் ரிப்பன் என்று அவரவர் வசதிக் கேற்றபடி நுணியில் சேர்த்துப் பின்னிப் பூவைத்து அழகாக நடந்து வருவர்! ஆனால் இப்போது? ஹும். "ஆத்தாடி மாரியம்மா!" என்று சிலிர்த்துப் பேயாடிக் கொண்டு பவனி வருகின்றனர். இரவில் பார்த்தால் பயமாக இருக்கிறது!


பள்ளி செல்லும் நாளில் இரட்டைப் பின்னல், பின் ஒத்தை. காலேஜ் நாட்களிலோ, "இதென்ன, கட்டுப் பெட்டியைப் போல் தலை முடியைப் பின்னுவது. அவிழ்த்து விடு. அது நம் விடுதலை மனப்பான்மையை முழுதும் பிரதிபலிக்கட்டும்!"

பிறெகென்ன, தலைவிரி கோலம்தான். மேலை நாட்டைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டு அவர்கள் மனத்தில் அது அழகு சேர்ப்பதாகவும், அப்டுடேட் நாகரிகமாக இருப்பதாகவும் கனவு காண்கின்றனர். சிக்குப் பிடித்துக் கொண்டு காணச் சகிக்க வில்லை என்பதுதான் உணமை!

பின்னல் போய் வந்தது "போனி டெயில்". பின் முடி கொட்டி நூடில்ஸானவுடன் பரட்டைத்தலைதான் மிஞ்சும்!

உண்மை நிலை இப்படியிருக்கும் போது கொஞ்சம் கனவாவது காண்போமே!



‌டிய‌ வாரிய‌ த‌லை
முத்தில்லா கொலுசு
ஒற்றைப் பின்னல்
கை நிறைய‌ வ‌ளைய‌ல்
க‌ட்டிக் கொள்ள‌ சேலை
சாயம் இல்லா உதடு
மை இல்லா கண்கள்
நகம் இல்லா விரல்கள்
க‌வ‌லை இல்லா சிரிப்பு

நல்லெண்ணெய் தேய்த்து விட்டு
நன்றாக ஊற விட்டு
சிகைக்காய்த் தூளெடுத்து
சிகையெங்கும் பரவ விட்டு
வாசனைப் பொடி போட்டு
வாகாக அலசி விட்டு
சாம்பிராணிப் புகை போட்டு
சந்தனம் போல் மணக்க விட்டு
பாசமுடன் விரல்களினால்
பட்டுப் போல் கோதி விட்டு
அழகாக வகிடெடுத்து
அளவாகப் பிரித்தெடுத்து
அம்மா இடும் பின்னலில்தான்
அம்மம்மா எத்தனை ரகம்!

ஆயிரங் கால் பின்னல்
அழகான ஒற்றைப் பின்னல்
பள்ளிக் கென்றே பக்குவமாய்
மடித்துக் கட்டும் இரட்டைப் பின்னல்
பின்னாலே பாலம் கட்டும்
பாரமில்லா சைக்கிள் பின்னல்
கூட்டமாய்ப் பூக்கள் தைத்த
குஞ்சலம் வைத்த பின்னல்…

                                              நன்றி: கவிநயா

Sunday, November 22, 2009

நம்பிக்கையை வளர்த்து கொள்ளுங்கள்...

சாய்பாபாவின் 84 வது பிறந்த நாளை ஒட்டி அவர் மக்களுக்கு வழங்கும் அறிவுரைகளைக் கேளுங்கள். : * அன்பே சிவம். சிவமே அன்பு. அன்புள்ள இடத்தில் ஆண்டவன் இருப்பார். ஆழ்ந்த அன்பு கொண்டு மக்களுக்கு அன்பு செய்யுங்கள். உங்களிடம் ஊற்றெடுக்கும் அன்பினை தொண்டாக மாற்றுங்கள்.

* நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். வெளியுலக வாழ்வில் எத்தனையோ சூழ்நிலைகள் நம்மைப் பாதிக்கின்றன. அப்போது அச்சூழ்நிலை நம்மைத் தாக்காதபடி, நம்பிக்கையே கவசம் போல் பாதுகாக்கும்.

* நல்லனவற்றை தேடிச் சென்று கேளுங்கள். நல்லதை மட்டுமே காணுங்கள். நல்ல செயல்களைச் செய்யுங்கள். அப்போது நீங்கள் இறையருளைப் பூரணமாகப் பெறுவதற்கு தகுதி உடையவராவீர்கள்.

*மிருகவுணர்ச்சி மேலோங்கினால், நாம் அழிவுப் பாதைக்குச் சென்று விடுவோம். தீமையை நன்மையால் வெல்வதைப் போல, மிருக உணர்ச்சியைக் களைந்து தெய்வீக உணர்வினை உள்ளத்தில் பரவவிடுங்கள்.

* மேலான செல்வம் இறையருள் மட்டுமே. கடவுளிடம் எள்ளளவும் சந்தேகம் கொள்ளாமல் முழுமையாகச் சரணாகதி அடைந்து விட்டால், கண்ணை இமை காப்பதுபோல நம்மைக் காத்து கரை சேர்ப்பான்.

* தயிரை மத்தினால் கடையக், கடைய மோர் தனியாகவும், வெண்ணெய் தனியாகவும் பிரியத் துவங்கும். அதுபோல, ஆன்மிக சக்தியால் உள்ளத்தைக் கடைந்தால் அசத்தியம் விலகி சத்தியமாகிய கடவுள் வெளிப்படுவார்.

* முற்றும் உணர்ந்தவர்கள் மவுனமாக இருப்பார்கள். அவர்களின் ஒரே மொழி அமைதி மட்டுமே. பேச்சில் நிதானத்தைப் பழகிக் கொள்ளுங்கள். மவுனத்தைப் பழகப் பழக நம்மிடம் உள்ள ஆற்றல் வெளிப்படத் துவங்கும்.

* கடவுள் நம்பிக்கை வேண்டாத பரபரப்பு, பயம், அறியாமை, கவலை ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் வேர்களைக் களைந்துவிடும். கடவுளை நம்புபவர் முகத்தில் கவலை ரேகைகள் படர்வதில்லை. நடப்பன யாவும் நல்லதற்கே, நடப்பதெல்லாம் அவன் விருப்பப்படி தான் என்ற சிந்தனை மேலோங்கும்.

* அடுத்தவர் மீது குற்றம் காணவும், குறை சொல்லவும் நமக்கு உரிமை இல்லை. அவர்களிடம் கோபப்படவும் உரிமை கிடையாது. நம்மை நாமே தூய்மையாக்கிக் கொண்டு நல்லவனாக வாழ முயற்சிக்க வேண்டும்.

* நம் வாழ்நாள் பனிக்கட்டி போல உருகிக் கொண்டே போகிறது. பிறவி எடுத்ததன் நோக்கத்தை உணரத் தலைப் படுங்கள். கடவுளோடு நம்மை இணைத்துக் கொள்ளும் மேலான நிலைக்கு முன்னேறுங்கள்.

* எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். ஒவ் வொருவர் வாழ்விலும் நான்கு நாட்களே சிறப்பான நாட்கள். பக்தர்கள் ஒரே இடத்தில் கூடி கடவுளின் பெருமையைப் பாடும் நாள், பசித்தவர்களுக்கு பசியாற உணவிடும் நாள், சாதுக்கள், நல்லவர்களைச் சந்திக்கும் நாள், தனிமனிதனுக்கு ஞானம் பிறக்கும் நாள்.

*வெற்றி பெறும்போது, பலரும் கடவுளை மறந்து விட்டு தன் முயற்சியால் வெற்றி வந்ததாக எண்ணி ஆணவம் கொள்கின்றனர். தோல்வியின் போதோ நம்பிக்கை இழந்து கடவுளை நிந்திக்கிறார்கள். ஆனால், உண்மையான பக்தி உள்ளவன் தன் மனச்சமநிலையை எப்போதும் இழப்பதில்லை.

* மனிதன் இயற்கையிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பல இருக்கின்றன. பசு பால் தந்து உலகைக் காக்கிறது. ஆறு நீரைத் தந்து உயிர்களைக் காக்கிறது. அறிவில் குறைந்த பறவை, விலங்கினங் களிடமிருந்து பொது நலமனப் பான்மையை மனிதர்கள் பெற்று வாழ வேண்டும்.

Saturday, November 21, 2009

மனிதம் பேசும் எதுவும் மகத்தானது...

மனிதம் பேசும் எதுவும் மகத்தானது. கீழேயுள்ள காட்சிப்பதிவும், கதைசொல்கின்றது. மனித மான்பு மடடுமன்றி, தனம்பிக்கையையும், எழுச்சியையும் எடுத்துரைக்கிறது.


இது ஒரு விளம்பரப்படம் என்பது இறுதியில்தான் தெரிகிறது. இது தாய்லாந்தில் உருவாக்கப்பட்ட Pantene சம்பபூவுக்கான தொலைக்காட்சி விளம்பரப்படம். 2008 இல் வெளிவந்தது.

இசையால் வசமாகாத இதயம் எது ???

இசையால் வசமாகாத இதயம் எது ?. யாரையும் வசீகரித்துவிடும் மகத்துவம் வாய்ந்தது இசை. இயற்கையில் தோற்ம் பெற்று, இயற்கையையே மருகிப் போகச் செய்யவும் இசையால் முடியும்.

இசை ஒரு சுகானுபவம் என்பதையும் தாண்டி, சுக மருத்துவம் என்ற மான்பினையும் பெற்று வருகிறது. அன்மைக்கால மருத்துவ ஆராச்சிகளில் இசையால் நோய்களைக் குணப்படுத்தும் வழிவகை பற்றிய ஆய்வுகளும் இடம்பெறுகின்றன. இசையின் நுட்பங்கள் தெரிந்த இரு பிரபலங்கள் ஒன்றாக இணைந்து தரும் ஒரு இசைக்கோலத்தை இங்கே பார்ப்பபோம்.

மான்டலின் சிறிநிவாஸ், ட்ரஸ் கலைஞர் சிவமணி ஆகியோர் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வழங்கியது.


She without arm, he without leg...

Sunday, November 15, 2009

Fulfillment - This moment gives birth to Next mome...

பகவத் கீதை ஒரு வீடியோ தொகுப்பாக ( Part_1 - 64 )...

Friday, November 13, 2009

மகர ஜோதி பொய், ஐஸ் லிங்கம் பொய், பக்தி பரவசமும் பொய்...

“சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்” என்று ஐயப்பன் கோயில் தலைமைப் பூசாரியின் குடும்பத்தைச் சேர்ந்த ராமன் நாயர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை ஒட்டி பதில் சொல்லியாக வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் கோயிலின் தலைமைத் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு. அவர் சார்பில் அறிக்கை வெளியிட்ட அவரது பேரனும் கோயில் தந்திரியுமான ராகுல் ஈஸ்வர், “வனத்துறை அதிகாரிகளும், தேவசுவம் போர்டு (அறநிலையத்துறை) அதிகாரிகளும், போலீசும் கூட்டாகச் சேர்ந்து கொளுத்தும் தீப்பந்தம்தான் மகரவிளக்கு” என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

‘இந்த அளவுக்கு குட்டு உடைந்த பிறகும் மார்க்சிஸ்டு அரசு மகரஜோதியைக் கொளுத்துமா?’ என்ற கேள்விக்கு “சபரிமலையில் மகரவிளக்கு வெளிச்சம் எப்படி உருவாகிறது என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும். ஆனால் பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது” என்று பதிலளித்திருக்கிறார் மார்க்சிஸ்டு முதல்வர் அச்சுதானந்தன். யாரை யார் விசாரிப்பது? பந்தம் பிடிப்பவனை பற்ற வைப்பவன் விசாரிப்பதா? “தீவட்டியைத் தொடர்ந்து கொளுத்துவோம். தீவட்டிக் கொள்ளையைத் தொடர்ந்து நடத்துவோம்” என்பதுதான் அச்சுதானந்தனுடைய கூற்றின் பொருள்.

மகரஜோதி அம்பலமாவது இது முதல் முறையல்ல. பந்தம் கொளுத்திய மின்வாரிய ஊழியர்களைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள் கேரள மாநில பகுத்தறிவாளர் சங்கத்தினர். “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா, அரசாங்க வருமானத்துக்கு ஆப்பு வைக்காதீங்கப்பா” என்று அன்பு வேண்டுகோள் விடுத்து அன்று பகுத்தறிவாளர்களை அமுக்கினார் அந்நாள் மார்க்சிஸ்டு முதல்வர் ஈ.கே. நாயனார்.

கோயில் தந்திரி கண்டரரு மோகனரு, தனது லீலாவிநோதங்கள் மூலம் ஐயப்பன் மகிமையைக் கந்தலாக்கியது தனிக்கதை. அவருக்கு வேதம், மந்திரம் போன்ற வெங்காயம் எதுவும் தெரியாதென்பதும் விலைமாதர் வீட்டு முகவரிகள் மட்டுமே தெரியும் என்பதும் அவரிடம் நடந்த விசாரணையில் அம்பலமானது. இப்போது தலைமைத் தந்திரியின் ஒப்புதல் வாக்குமூலம் வந்திருக்கிறது.

தெற்கே தீவட்டி பிசினஸ்; வடக்கே பனிக்கட்டி பிசினஸ். காஷ்மீரில் அமர்நாத் எனுமிடத்தில் குளிர்காலத்தில் ஒரு குகைக்குள்ளே பெரிய ‘குச்சி ஐஸ்’ வடிவத்தில் உருவாகும் பனிக்கட்டியைத் தரிசிப்பதற்கு ஆண்டுதோறும் 4 லட்சம் பக்தர்கள் அங்கே சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த பக்தர்களை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்க 40,000 சிப்பாய்களை மாதக்கணக்கில் காவல் வைக்கிறது அரசு.

மேற்படி சிவலிங்கத்திற்கும் வந்தது சோதனை! “முன்னர் சுமார் 12 அடி உயரம் இருந்த பகவான் தற்போது 6 அடிக்கும் கீழே போய்விட்டார். காரணம் புரியவில்லை” என்று சென்ற ஆண்டு அபாயச்சங்கு ஊதினார் அந்தக் கோயிலின் நிர்வாக அதிகாரி. பகவானைக் கண்டு பக்தர்கள் உருகலாம், பக்தர்களைக் கண்டு பகவான் எப்படி உருகமுடியும்? “பக்தர்கள் விடும் மூச்சுக்காற்றின் வெப்பத்தைப் பனீசுவர பகவானால் தாங்கமுடியவில்லை” என்றன சில பத்திரிகைகள். பக்தர்களின் மூச்சை நிறுத்த முடியாதே! “குகைக்கு அருகில் அடுப்பு பற்றவைத்து பக்தர்கள் சப்பாத்தி போடுகிறார்கள். சூடு தாங்கமுடியாமல்தான் பகவான் கசிந்துருகுகிறார்” என்றன வேறு சில பத்திரிகைகள். புவி சூடேறுதல்தான் காரணம் என்றனர் வேறு சிலர்.

காரண காரியங்கள் குறித்த அறிவுப்பூர்வமான ஆய்வுகள் தொடர்வது ஆன்மீகத்துக்கு ஆபத்து என்பதால் குப்தா கமிசன் என்றொரு கமிசனைப் போட்டு ஆராயச் சொன்னது அரசு. பகவான் கரையாமலும், பக்தர்கள் கூட்டம் கலையாமலும் பாதுகாக்கும் பொருட்டு குகைக்கு குளிர் சாதன வசதி செய்து சிவபெருமானை ஸீரோ டிகிரியில் பாதுகாப்பது; பக்தர்கள் சப்பாத்தி போட 100 ஏக்கர் வனப்பகுதியைக் கோயிலுக்கு தானம் கொடுத்து அடுப்புச் சூட்டிலிருந்து ஆண்டவனைப் பாதுகாப்பது என்று முடிவு செய்தது அரசு. இந்த 100 ஏக்கர் தானத்துக்கு எதிராகக் காஷ்மீரே பற்றி எரியத் தொடங்கி, அதன் விளைவாக அம்மாநில காங்கிரசு அரசு இப்போது உருகிக் கொண்டிருக்கிறது.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, ‘அமர்நாத் பனிலிங்கம் செயற்கையானதல்ல’ என்று கொட்டை எழுத்தில் செய்தி போடுகிறது தினமணி (24.6.08).

இயற்கையாக உருவான எல்லாம் வல்ல இறைவனை செயற்கையாகப் பாதுகாப்பது ஏன் என்ற கேள்விக்கு மட்டும் அவர்கள் பதில் சொல்லவில்லை.

“”இராமன் பாலம் என்பது இயற்கையாக அமைந்த மணல்திட்டு”" என்று சொன்னால், ‘இல்லையில்லை, அது இராமனால் கட்டப்பட்டது, செயற்கையானது எனவே தெய்வீகமானது’ என்று கத்துகிறார் இராம. கோபாலன். ‘அமர் நாத் பனிலிங்கம் செயற்கையானது’ என்று சொன்னால் ‘இல்லையில்லை, அது இயற்கையானது எனவே தெய்வீகமானது’ என்கிறார்கள். வடக்கே இயற்கை தெய்வீகம்! தெற்கே செயற்கை தெய்வீகம்!

மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவதற்காக ஆளும் வர்க்கம் உருவாக்கிய மடமைகள் உடைபடும்போது மதவாதிகள் பதறுகிறார்கள்; அதற்குக் காரணம் இருக்கிறது. ஆனால் அற்புதம் என்றும் தெய்வீகம் என்றும் தாங்கள் இதுகாறும் நம்பிக் கொண்டிருந்தவை அயோக்கியத்தனமான மோசடிகள் என்று ஆதாரப்பூர்வமாகத் தெரியும்போது பக்தர்கள் பதறியிருக்க வேண்டாமா?

“கடன் பட்டதும், காவியணிந்ததும், மதுமாமிசம்மனைவியைத் துறந்ததும், காடு மலைகளில் நடையாய் நடந்ததும் கேவலம் ஒரு தீவட்டியைத் தரிசிக்கத்தானா?” என்று குமுறியிருக்க வேண்டாமா? ‘அது தீவட்டியில்லை, தெய்வீகத் தீபம்தான். நாங்கள் நம்பமாட்டோம்’ என்று நக்கீரனுக்குப் பேட்டி கொடுக்கிறார்கள் ஐயப்பசாமிகள். “பகவானை எண்ணி பனியைச் சகித்ததும், பயங்கரவாதிகளை எண்ணிப் பயந்து செத்ததும், 12,000 அடி உயரம் மூச்சு வாங்க மலையேறியதும் ஒரு குச்சி ஐஸைத் தரிசிக்கத் தானா?” என்று கொதித்திருக்க வேண்டாமா? அந்தக் குச்சி ஐஸைப் பாதுகாக்க பாரத் பந்த் நடத்துகிறது பாரதிய ஜனதா. அதற்கும் கூட்டம் சேருகிறது.

பகுத்தறிவின் ஒளி பட்டவுடனே மூடநம்பிக்கை இருள் அகலவில்லையே ஏன்? ‘மகரஜோதி பொய்’ என்பதை அந்தக் கோயிலின் தந்திரியே பிரகடனம் செய்த பின்னரும் அய்யப்பன்மார்கள் திருந்தவில்லையே ஏன்? இந்த பக்தர்களை ‘மூட நம்பிக்கைக்குப் பலியானவர்கள்’ என்று மட்டும் நாம் கருதமுடியுமா? என்ன வகை பக்தி இது?

மூடநம்பிக்கை, பகுத்தறிவு, ஏமாற்றுபவன்ஏமாற்றப்படுபவன் என்ற வகைப்பாடுகளின் வரம்பைத்தாண்டி ஒரு விநோதக் கலவையாக உருப்பெற்று வருகிறது இந்த ‘பக்தி’. காமவெறி பிடித்த பித்தலாட்டக்காரனாக அர்ச்சகன், இந்தப் பித்தலாட்டத்துக்குப் பந்தம் பிடிக்கும் அரசு, அதற்குக் காவல் நிற்கும் போலீசு, ஐயப்ப சீசனில் திருடுவதற்காகவே மாலை போட்டுக் கொள்ளும் பிக்பாக்கெட்டுகள், டாஸ்மாக் கடைகளில் அய்யப்பன்மார்களுக்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கும் தனிக் கோப்பைகள், சுத்தம் கருதி சாக்கனாக் கடைகளில் அவர்களுக்கு மட்டும் இலை போட்டுப் பரிமாறப்படும் புரோட்டாக்கள்..! மோசடியும் சுயமோசடியும் சரிவிகிதத்தில் கலந்து உருவாகியிருக்கும் இந்தக் கூட்டுக் களவாணித்தனத்தில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார் என்று பிரித்தறிய முடியவில்லை.

புதுப்பட ரிலீஸ் அன்று கட் அவுட்டுக்குப் பால் அபிசேகம் செய்யும் ரசிகனின் பரவசம், நூறு ரூபாய்ஒரு குவாட்டர் என்று கறாராக ரேட் பேசிக் கொண்டு லாரியில் ஏறி வந்து ‘தலைவா’ என்று உணர்ச்சி வசப்படும் தொண்டனின் மனக்கிளர்ச்சி, இலஞ்சத்தை அழுதுவிட்டு அப்புறமும் அதிகாரியிடம் ‘ங’ போல் வளையும்’ நெளிவு சுளிவு, மொய் எழுதும் வயிற்றெரிச்சலை மறைத்தபடி திருமண வீட்டில் மலர்ந்து மணம் பரப்பும் புன்னகைகள்..! அன்றாட வாழ்வில் நாம் காணும் இந்த ‘உணர்ச்சிகள்’ எல்லாம் அமர்நாத் யாத்ரீகர்களின் பரவசத்தையும் அய்யப்பன்மார்களின் மனக் கிளர்ச்சியையும் பிரதிபலிக்கவில்லையா?

இந்த மத உணர்ச்சி ஒரு மயக்கமென்றால், அது ஆட்படுத்தப்பட்ட மயக்கம் மட்டுமல்ல, விரும்பி ஆட்படும் மயக்கம். இது தெய்வீக அபினி மட்டுமல்ல, லவுதீக அபினியும் கூட. இது புனித யாத்திரை என்ற முகமூடி அணிந்த இன்பச் சுற்றுலா. இந்தப் போலி பக்தியை ஆன்மீக அனுபவமாக ‘உணர்ந்து’ மயங்கும் பொருட்டு ஒரு ‘தெய்வீக கிளைமாக்ஸ்’ பக்தனுக்கே தேவைப்படுகிறது.

எனவேதான் பக்தன் பதறுவதில்லை. சாம்சங் ரெப்ரிஜிரேட்டரையே கருவறையாக்கி, அதற்குள் பனி லிங்கம் ஒன்றை உறையவைத்து, ஆண்டுக்கு ஒரு முறை திறந்து காட்டினாலும் ‘ஹர ஹர மகாதேவா’ என்று கன்னத்தில் போட்டுக்கொள்ள இந்த பக்தர்கள் தயார்! மகரஜோதிக்குப் பதில் சிலிண்டரை வைத்து ‘ஸ்பிக் ஜோதி’யைக் கொளுத்திக் காட்டினாலும் அதனைத் ‘தரிசிக்கும்’ பொருட்டு விரதமிருக்கவும், இருமுடி சுமக்கவும் அய்யப்பன்மார்கள் தயார்!

‘டென் கமாண்ட்மென்ட்ஸ்’ என்ற திரைப்படத்தில் பார்த்த ஒரு காட்சி இங்கே நினைவுக்கு வருகிறது. பல வகையான விக்கிரக வழிபாடுகளில் மூழ்கியிருக்கும் யூத மக்களிடம் “இவையெல்லாம் கடவுளல்ல, உண்மையான கடவுளின் செய்தியை நான் உங்களுக்குக் கொண்டுவருகிறேன்” என்று கடவுளைத் தேடி மலைக்குச் செல்வார் மோசஸ். போனவர் திரும்புவதற்குத் தாமதமாகவே, “ஒரு கடவுளில்லாமல் இன்னும் எத்தனை நாள்தான் நாம் காத்திருக்க முடியும்?” என்று விசனப்பட்ட மக்கள் ஒரு எருமைக்கிடா பொம்மையைக் கடவுளாக்கி அதைத் தலையில் வைத்துக் கூத்தாடத் தொடங்குவார்கள்.

அந்தக் கூத்தும் இந்தக் கூத்தும் ஒன்று போலத் தோன்றினாலும் ஒன்றல்ல. அது அச்சத்திலும் மவுடீகத்திலும் மனிதகுலம் ஆழ்ந்திருந்த, அறிவியல் வளராத காலம். அது பல் முளைக்காத குழந்தையின் மழலை. இன்று நாம் காண்பதோ கிழவனின் மழலை. “ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான்தான் என்று, அந்தப் பொய்யில் உயிர்வாழ்வேன்” என்று மன்றாடும் காதலனைப் போல, ‘எங்களுக்கு ஒரு மாயையை வழங்கு’ என்று இறைஞ்சுகிறார்கள் இந்த பக்தர்கள்.

சென்னை தீவுத்திடலில் அமர்நாத்தைப் போலவே பனிக்கட்டி லிங்கத்தை உருவாக்கி ‘சென்னையில் அமர்நாத்’ என்று விளம்பரம் செய்யப்படுகிறது. ராட்டினம் ஏறப்போன பொருட்காட்சிக் கூட்டம் உடனே பக்தர்களாக உருமாறி அந்த செயற்கை லிங்கத்தைப் பரவசத்துடன் வழிபடுகிறது. திருப்பதி வரை சென்று தரிசிக்க முடியாத பக்தர்களுக்காக ‘சீனிவாச திருக்கல்யாணத்தை’ சென் னையிலேயே நடத்தி, ‘சென்னையில் ஒரு திருப்பதி’ என்று விளம்பரம் செய்கிறது திருப்பதி தேவஸ்தானம். ‘கோயிந்தா கோயிந்தா’ என்று அங்கேயும் கூட்டம் அலைமோதுகிறது.

ஷாம்பு பாட்டில் வாங்கும் வசதியில்லாதவர்களுக்காக இப்போது சாஷேக்களில் தொங்குகிறார் கடவுள். நுகர்வு தரும் சிற்றின்பத்துக்கும் ஆன்மீகப் பேரின்பத்துக்கும் இடையில் நிலவுவதாகச் சொல்லப்படும் சீனப்பெருஞ்சுவர் மாயமாக மறைந்து விட்டது. இந்தப் பேரின்பமென்பது சிற்றின்பத்தின் வாலில் தடவப்பட்டிருக்கும் ஆன்மீக வாசனைத் தைலம். தமது இஷ்ட தெய்வங்கள் மீது இந்த பக்தர்கள் கொண்டிருக்கும் ஈடுபாடு, தமது இஷ்ட பிராண்டுகள் மீது நுகர்வோர் கொண்டிருக்கும் ஈடுபாட்டையே பெரிதும் ஒத்திருக்கிறது.

இது உத்திரவாதமில்லாத பரலோக இன்பவாழ்வை இலட்சியமாகக் கொண்டு இகலோகத் துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் இலக்கண வகைப்பட்ட ஆன்மீகமல்ல; உத்திரவாதமான இன்பத்துக்கான தேட்டம். ‘பக்தி’ என்று புனைபெயர் சூட்டிக் கொண்ட பிழைப்புவாதம். ஜோதியோ, லிங்கமோ, பக்திப் பரவசமோ அனைத்தும் இங்கே பிஸ்கெட் பாக்கெட்டுகளின் பளபளப்பான மேலுறைகள் மட்டுமே.

கஞ்சாச் செடியின் போதையைத் தெய்வீகமென்றும் பேரின்பமென்றும் தவமென்றும் எண்ணிக் கொண்டிருந்த கருத்து மயக்கமல்ல இது. ‘கஞ்சாவே பேரின்பம்’ என்று அறிவுப்பூர்வமாகத் தேர்ந்து தெளிந்த விழிப்பு நிலை. சொல்லப்போனால் இது வேறு ஒரு வகைப் பகுத்தறிவு. சுயநலத்துக்காகத் தெரிந்தே தன்னை மடமையில் ஆழ்த்திக் கொள்ளும் பகுத்தறிவு. கல்லையும் மரத்தையும் கண்டு அஞ்சி வணங்கிய மூடநம்பிக்கையைக் காட்டிலும் அபாயகரமான பகுத்தறிவு.

‘மாலை போடுவது மடமை’ என்று நீங்கள் சாடினால், ‘ஒரு மண்டலம் விரதமிருப்பதும், புலால் மறுப்பதும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்’ என்று அறிவியல் பூர்வமாக விளக்கி உங்களைத் திகைப்படையச் செய்வார்கள் இந்த பக்தர்கள். ‘பனிலிங்கம் பொய்’ என்று நீங்கள் கூறினால், “இந்த விசயம் உங்களுக்கு இப்போதுதான் தெரியுமா, எனக்கு ஏற்கெனவே தெரியும்” என்று சொல்லி உங்களை அதிர்ச்சியில் உறைய வைப்பார்கள். நீங்கள் அறிந்திராத மேலும் இரண்டு ஆன்மீக மோசடிகளை உங்களுக்கு விளக்கி, தங்களது உலக ஞானத்தின் மேன்மையை உங்களுக்குக் குறிப்பாலுணர்த்துவார்கள்.

அல்லது “மகரஜோதியும் பனிலிங்கமும் மட்டுமா, உலகமே மோசடிகளால்தான் நிறைந்து இருக்கிறது” என்று தத்துவஞானத்தின் தளத்துக்கு விவாதத்தை தள்ளிச் செல்லுவார்கள். லஞ்சம், வரதட்சிணை, சாதி, வாஸ்து, சாமியார்கள், ராசிக்கல் என நியாயப்படுத்த முடியாத எல்லா அயோக்கியத்தனங்களையும் கொள்கையளவில் மறுப்பதற்கும், நடைமுறையில் அவற்றுடன் அனுசரித்துச் செல்வதற்கும் என்ன விதமான நியாயப்படுத்தல்களை சமூக வாழ்வில் நாம் எதிர்கொள்கிறோமோ, அவற்றைத்தான் பக்தர்களும் பயன்படுத்துகிறார்கள். பிழைப்புவாதமும் காரியசாத்தியவாதமும் பழகிவிட்டதால், அந்த வாதங்கள் அனைத்தையும், ‘பழகிய சைக்கிளை பழகிய ரோட்டில் ஓட்டும் இலாவகத்துடன்’ பயன்படுத்தி பகுத்தறிவை முறியடிக்கிறார்கள் இந்த பக்தர்கள்.

‘டபுள்யூ.டபுள்யூ.எஃப்’ என் றொரு அமெரிக்க மல்யுத்தத்தைத் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். அதில் இரண்டு மாமிசமலைகள் மோதிக்கொள்வார்கள். நாக்கூசும் வார்த்தைகளால் ஏசிக் கொள்வார்கள். கொலைவெறியுடன் கட்டிப் புரளுவார்கள். எனினும் அது உண்மையான சண்டையல்ல. யார் வெல்ல வேண்டும் யார் தோற்க வேண்டும் என்பதை முன்னரே தீர்மானித்து நிகழ்ச்சியை நடத்தும் முதலாளிகள் காட்சிப்படுத்தும் நாடகம் அது. இரசிகர்களுக்கும் இது தெரியும். இருந்தாலும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி சண்டையை ரசிக்கிறார்கள். ‘குத்து.. கொல்லு’ என்று வெறிகொண்டு கூச்சலிடுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார்? நடிகன் யார், ரசிகன் யார்? தீவட்டி கொளுத்துபவன் யார், கன்னத்தில் போட்டுக் கொள்பவன் யார்? கண்டரரு யார், காணதவரு யார்? குருசாமி யார், கன்னிச்சாமி யார்?

இது ஒரு வகைப் ‘பகுத்தறிவு’. இதுதான் நம் முன் பக்திவேடம் பூண்டு ஆடுகிறது. வெறும் கருத்துப் போராட்டத்தால் இதனை வீழ்த்த முடியாது. இதன் இதயம் ஆன்மீகத்தில் இல்லை ; லௌகீகத்தில் இருக்கிறது சமூக வாழ்க்கையின் எல்லாப் பரப்புகளிலும் வேர் பரப்பியிருக்கும் இந்தப் ‘பகுத்தறிவை’ எதிர்த்துப் போராடுவதென்பது ‘ஒரிஜினல் மூடநம்பிக்கையை’ எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும் கடினமானது.

Thursday, November 12, 2009

பாட்டுக் கேட்கலாம்...

Tamil News & Entertainment Web Portal

Sunday, November 1, 2009

மனதை நல்ல விஷயங்களில் செலுத்துவோம்...

* எண்ணங்களின் பிறப்பிடம் மனம். மனதின் இயக்கத்தை "எண்ணம்' என்ற சொல்லால் குறிக்கிறோம். எண்ண ஓட்டத்தை உணர்ந்து, விழிப்புடன் இருந்தால் வாழ்வு உயரும். அறியாமல் அதன் போக்கிற்கு விட்டு விட்டால் வாழ்க்கை தாழ்வடையும்.

* எண்ணத்தின் சக்தி அளப்பரியது. அது எங்கும் செல்லும் வலிமை கொண்டது. விழிப்பு நிலையில் இல்லாமல் அலட்சியமாக இருந்தால் அசுத்தமான எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்கும்.

* தவறான எண்ணங்களில் இருந்து தப்பிக்கும் வழி எப்போதும் மனதை நல்ல விஷயங்களில் செலுத்துவதைத் தவிர வேறில்லை. விருப்பமே இல்லாவிட்டாலும் கூட, நல்லவர்களோடு தான் நாம் பொழுதைக் கழிக்க வேண்டும்.

* எண்ணங்களை கையாளத் தொடங்கி விட்டால் எல்லாமே இன்பமயம் தான். பூரணமான அமைதி நிலை பெற்ற மனதில் ஆனந்தம் நிலைத்து நிற்கும். எண்ணமே நம் வாழ்வைச் செதுக்கும் சிற்பி என்றால் அது மிகையில்லை.

* எண்ணங்களைப் பொறுத்தே நம் சொற்கள் அமைகின்றன. எண்ணமும், சொல்லும் ஒன்றுபடும்போது செயல்களும் உயர்ந்தவையாக அமைந்து விடும். எண்ணம், சொல், செயல் இவை மூன்றும் எப்போதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

-வேதாத்ரி மகரிஷி

Friday, October 30, 2009

சாகித்ய அகாதமி விருது பெற்ற படைப்புக்கள்


Wednesday, October 14, 2009

குருவுக்கும் நாம் அடிமையல்ல!

யார் மீது ஆன்மிக உணர்வு பெறுகிறோமோ அவரே நமக்கு உண்மையான குரு. ஆன்மிகப் பெருவெள்ளம் நம்மிடம் பாய்வதற்கான கால்வாய் அவர். தனிமனிதரை நம்புவது பலவீனத்திலும் உருவவழிபாட்டிலும் தான் கொண்டுபோய்விடும். ஆனால், ஆழ்ந்த குரு பக்தி நம்மைவிரைவில் முன்னேறச் செய்யும். உண்மையான குரு இருந்தால் அவரை மட்டுமே வணங்கு. அது மட்டுமே நம்மை கரை சேர்க்கும்.பகவான் ராமகிருஷ்ணர் குழந்தையைப் போல தூய்மையானவர்.

அவர் ஒரு போதும் பணத்தை தன் மனதாலும் தொட்டதில்லை. காமசிந்தனை அவரிடத்திலிருந்து முற்றிலும் நீங்கிவிட்டது. பெரிய மகான்கள் தங்கள் சிந்தனையை முழுமையாக ஆன்மிகத்திலே செலுத்தி விடுவர். உண்மையான ஞானியிடத்தில் பாவத்தை பார்க்க இயலாது. ராமகிருஷ்ணரின் கண்கள் தீயவற்றைக் காண இயலாத அளவுக்கு தூய்மை பெற்றிருக்கின்றன.

இத்தகைய பரமஹம்சர்கள் உலகில் இருப்பதால் தான் உலகம் செயல்படுகிறது. அவர்கள் அனைவரும் இறந்து விடுவார்களானால், உலகமே சுக்கல் சுக்கலாக நொறுங்கி மண்ணாகி விடும். குருவிற்கு கடமைப்பட்டிருக்கிறோம் என்பதற்காக அடிமைப்பட வேண்டியதில்லை. குரு நமக்கு உதவுபவர் என்ற கருத்தை மட்டுமே கொண்டிருக்க வேண்டும். உங்களுக்குள் நீங்களே முயன்று உண்மையைத் தேடுங்கள்.-விவேகானந்தர்

இதயம் துடிப்பது எதற்காக?

* தன்னடக்கம் பழகாதவர், துர்நடத் தையுள்ளவர்கள், மனதில் அமைதி இல்லா தவர்கள், தியானம் பழகாதவர்கள் ஆகிய இவர்கள் பெரும் படிப்பாளி களாக இருந்தாலும் கடவுளை அடையத் தகுதி இல்லாதவர்கள் ஆவார்கள்.

* உலகத்தை இருக்கின்றபடி ஏற்றுக் கொள்ளுங்கள். தீமையை எண்ணி வருத்தம் கொள்ளா தீர்கள். திருத்தம் செய்வதாக இருந்தால் முதலில் உங்கள் மனதை சீர்திருத்தம் செய்யுங்கள்.

* எத்துன்பம் வந்தாலும் அமைதியாகப் பொறுத்துக் கொள்ளுங்கள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர் கள் நாம் என்ற எண்ணத்துடன் பெருமிதஉணர்வு கொள்ளுங்கள்.

* இதயம் துடிக்கும் சப்தம் எங்கோ வெளியில் கேட்ப தாக எண்ணாதீர்கள். நம் உள்ளத்தில் இறைச்சக்தி உறைந்திருக்கிறது என்பதற்கு அடையாளமாகத் தான் நம் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது.

* ஆனந்தம் நம் உள்ளத்தில் எந்த அளவுக்கு மறை முகமாக உண்டாகிறதோ, அந்த அளவுக்கு நாம் ஆன்மிக வாழ்வில் முன்னேற்றம் உடையவர்களாக இருக்கிறோம்.

* சுதந்திர உணர்வைத் தன்னிடத்தில் உணர்பவன் நெஞ்சில் அன்பு ஊற்றெடுக்கும். அடிமைப்புத்தி கொண்ட மனிதன் யாரையும் நேசிக்க முடிவ தில்லை.

வாழ்வில் அர்த்தம் வேண்டும்...

* நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று கூறு. நீ உறுதியுடன் இருந்தால் கொடிய விஷம் கூட சக்தியற்றதாகிவிடும்.

* நீ வலிமை உள்ளவனாக இருந்தால் நீ ஒருவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமானவன் ஆவாய்.

* மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளரவளர அதிக அளவில் அறிவாற்றல் வளரும். சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காத்து விடுதலை பெறச் செய்யும்.

* உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே குடி கொண்டிருக்கின்றன. உனது மனம், இதயம், ஆன்மா என்ற மூன்றினையும் அர்ப் பணித்து செய்யும் செயல்கள் நிச்சயம் வெற்றி பெறும்.

* மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே ஆண் டவன் உன்னைப் படைத்திருக்கிறான். அந்தச் செயல் களைச் செய்து வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கு.

* நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். வலிமை உடையவன் நீ என்று நினைத்தால் வலிமை உடையவனாகி விடுவாய்.

* ஒரு நல்ல லட்சியத்தைத் தேர்ந்தெடுத்து முறையான வழியைக் கைக்கொண்டு வெற்றி வீரனாக விளங்கு. நீ வாழ்ந்து முடிந்த பின் ஓர் அழியாத அறிகுறி எதையாவது விட்டுச் செல்

வெற்றிக்கு சிறந்த வழி...

* எத்தகைய கல்வி நல்லொழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன்னுடைய சுயவலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை.

* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்குத் தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கை ஆகும். நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை பிறருக்கு நன்மை செய்வது மட்டும் தான்.

* சிந்தனையின் தொண்ணூறு சதவீத ஆற்றல் சாதாரண மனிதர்களால் வீணடிக்கப்படுகிறது. எனவே, தொடர்ந்து மனிதன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான்.

* நாம் வாழும் காலமோ குறுகியது. இளமையும், வலிமையும், வளமையும், அறிவுக்கூர்மையும் கொண்ட வர்களே இறைவனை அடையத் தகுதி உடையவர்கள். அதனால், இளமையிலேயே கடவுளை அறிய முற்படுங்கள்.

* ஒரு கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு கருத்தையே உங்கள் வாழ்க்கை மயமாக்குங்கள். அதையே கனவு காணுங்கள். மூளை, தசைகள், நரம்புகள் என்று ஒவ்வொரு அவயங்களிலும் அந்தக் கருத்தே நிறைந்திருக்கட்டும். வெற்றிக்கு இதுதான் சிறந்த வழி.

முழு பொறுப்பையும் சுமப்போம்...

* சிங்கங்களே! எழுந்து வாருங்கள். வீணான மயக்கங்களை உதறித்தள் ளுங்கள். நீங்கள் சுதந்திரமானவர்கள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர் கள்.

* பலவீனத்திற்கான பரிகாரம், அந்த பல வீனத்திற்கான காரணத்தை சிந்திப்ப தல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்.

* உலகம் வேண்டுவது ஒழுக்கமே. கொழுந்து விட்டெரியும் அன்பும், தன்னலமில்லாத பண்பும் யாரிடம் இருக்கிறதோ அவரை இம்மண்ணுலகமே வேண்டி நிற்கிறது.

* எழுந்து நில்லுங்கள். தைரியமாயிருங்கள். பலமுடைய வராகுங்கள். உங்கள் மீதே முழுப் பொறுப்புகளையும் சுமந்து கொண்டு வாழப் பழகுங்கள்.

* சிரத்தை தான் நமக்குத் தேவை. மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதற்குக் காரணமே இந்த சிரத்தை தான். சிரத்தை உடையவன் வெற்றி பெறுகிறான். சிரத்தை இல்லாதவன் தாழ்ந்தவனாகிறான்.

* ஒரு குறிக்கோளை எடுத்துக் கொள்ளுங்கள். அதையே கனவு காணுங்கள். அதன் நோக்கியே வாழ்க்கை நடத்துங்கள். அந்த கருத்தை உயிர்மூச்சாகக் கொண்டு செயல்படுங்கள். வெற்றி பெறுவீர்கள்.