Saturday, May 22, 2010

மன அழுத்தத்தை குறைப்பதற்கான உடற்பயிற்சி...

பரபரப்பான இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லா துறையிலும் எல்லா பணிகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே சுழன்று கொண்டிருக்கிறார்கள்.

மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருவதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதுவே மன அழுத்தத்தை குறைப்பதற்கான தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது.

இந்த மன அழுத்தத்தை குறைக்க சில வகையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.இருக்கையில் அமர்ந்தவாறே இந்த உடற்பயிற்சியை செய்யலாம்.

1..தலையை இடதுபக்கமாக சாய்த்து இடதுபக்க காது தோற்பட்டையில் படும்படி சாய்த்து நன்றாக அழுத்தத்தை கொடுக்கவும்.வலது கையை தலையில் சிறிது அழுத்துவதன் மூலம் அழுத்தத்தைக் கொடுக்கலாம்.

2.இதே போன்று சமநிலையான ,இறுக்கமற்ற நிலையில் தலையை வலது பக்கமாக சாய்த்து வலதுபக்க காது தோற்பட்டையில் படும்படி சாய்த்து நன்றாக அழுத்தத்தை கொடுக்கவும்.

3.ஒரு நிலையில் இருந்து கொண்டு கண்களை இமைக்காது இடமிருந்து வலதுபக்கமாக தலையை சுழற்றவும், இவ்வாறே ஒரு நிலையில் இருது கொண்டு கண்களை இமைக்காது வலதுபக்கமிருந்து இடது பக்கமாக தலையை சுழற்றவும்.

4. இடது கையை மடித்து நெஞ்சுப்பகுதிக்கு மேலாக வலபக்க தோற்பட்டையில் படும்படி செய்து அழுத்தத்தை கொடுக்கவும்.

5. வலது கையை மடித்து நெஞ்சுப்பகுதிக்கு மேலாக இடதுபக்க தோற்பட்டையில் படும்படி செய்து அழுத்தத்தை கொடுக்கவும்.

6.இருக்கையில் அமர்ந்தவாறே குனிந்து உங்களது பாதங்களை தொடவும்.

7.இருக்கையில் அமர்ந்தவாறே கைகளை முன்நோக்கி நீட்டி இருகைகளையும் ஒன்று சேர்த்து பாதங்களைத் தொட முயற்சித்து அழுத்தத்தை கொடுக்கவும்.

8.வலதுகயை நீட்டி தூக்கி பெருவிரல் மற்றும் நடுவிரல்களுக்கு மாறி மாறி அழுத்தத்தை கொடுக்கவும், இதேபோல் இடது கைக்கும் செய்யவும்.

இந்த பயிற்சிகளை நீங்கள் வாரத்தில் 3- 4 தடவைகள் செய்யலாம் மேலும் 15-30 செக்கன்கள் வரை இதை செய்து வந்தால் மன அழுத்தம் குறையும்

Wednesday, May 19, 2010

நம்பிக்கையே நமக்கு ஆதாரம்.

* நாம் எந்த அளவிற்கு இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறோமோ அந்த அளவிற்கு இறைவனது அருள் நமக்காகச் செயல்பட்டு உதவும். நாம் இறைவனை நாடினால் அது இறைவனுக்காகவே இருக்க வேண்டுமே ஒழிய வேறு எதற்காகவும் இருக்கக்கூடாது.

* மனிதனது அனைத்து முயற்சிகளுக்கும் ஆதாரமாக இருப்பது நம்பிக்கை. ஒரு மனிதனுடைய நம்பிக்கை எப்படியோ, அப்படியே அவன் வாழ்க்கைநிலை அமையும் என்று கீதையில் கிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

* குறிக்கோள் இல்லாத வாழ்வு என்பது பரிதாபகரமான வாழ்வாகும். ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோள் இருக்கவேண்டும். அந்த குறிக்கோள் உயர்ந்ததாகவும், விசாலமானதாகவும், பெருந்தன்மை உடையதாகவும், சுயநலமில்லாததாகவும் இருக்க வேண்டும்.

* தூய ஆன்மிக வாழ்வு வாழ்வதற்கு கடவுளைத் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் ஈடுபாடு அற்றுப் போகத் தேவையில்லை. அறிவியல், கலைகள், விளையாட்டு,வாழ்க்கை என்று ஆன்மிகம் தவிர்த்த மற்றவற்றின் வேர்களை வெட்டிவிடாதீர்கள்.

* இறைவன் ஆனந்தமயமானவன். ஆனால், இறைவனிடம் ஆனந்தம் மட்டுமில்லை. எல்லாமே இறைவன் தான். சாந்தம், வீரம், மேன்மை, மோட்சம், ஞானம், ஆற்றல், வசீகரம் என்று அனைத்தின் வடிவமாகவும் இறைவனே இருக்கின்றான்.

                                                            -அரவிந்தர்

கடவுளுக்கு நெருக்கமாவது எப்படி?

* மனிதர்களை நேசி. அவர்களுக்குத் தொண்டு செய். ஆனால், அவர் களின் பாராட்டுதலுக்கு ஆசைப்படாமல் இருப்பதில் கவனமாக இரு.

* நம்மை நெறிப்படுத்தும் மிகப்பெரிய வழிகாட்டி இறைவன் மட்டுமே. ஏனென்றால் நம்மை எப்போது அடிக்கவேண்டும்; எப்போது அணைக்க வேண்டும் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.

* உலகில் வெறுமனே கடமை ஆற்றாமல் இருப்பதால் ஒரு பயனும் இல்லை. நல்ல லட்சியங்களுக்காக நாம் வாழ வேண்டும். நற்பணிகளைச் செய்ய வேண்டும். அதற் காகத் தான் இறைவன் நம்மை அனுப்பி இருக்கிறான்.

* உன்னைத் தூய்மையாக்கும் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைத்து விடு. உன்னிடம் இருக்கும் தீயவற்றை அறவே அகற்றும் பொறுப்பு அவருடையது.

* கடவுளின் கண்களுக்கு அற்பமானது என்று எதுவுமில்லை. உன் கண்களுக்கும் அற்பமானது என்று எதுவும் இருக்க வேண்டாம்.

* உத்தமச் செயல்களைச் செய்ய நினைத்தால் உடனடி யாகச் செய்வது சிறந்தது. பிறருக்காக வாழ்பவன் கடவுளுக்கு நெருக்கமானவனாகிறான்.

                                                            - ஸ்ரீ அரவிந்தர்.

இரக்கமின்றி ஆராய்ந்து பார்!

மனிதன் வலிமையை விரும்புகிறான். ஆனால் அவன் பலவீனத்திற்கு ஆட்படுகின்றான். மனிதன் சுகத்தை விரும்புகிறான். ஆனால், துன்பம் துயரங்களில் சிக்கி அல்லல்படுகின்றான். பிறர் நலம் பேணுதல், கடமை, இல்லறம், தேசபக்தி, உயிர்களிடத்தில் அன்பு ஆகிய இக்குணங்கள் நம் உயிரோடு கலக்க வேண்டும். உன்னை நீயே இரக்கமின்றி ஆய்ந்து பார்; அப்போது நீ பிறரிடம் பரிவுடனும், இரக்கத்துடனே நடந்து கொள்வாய். உன் கண்களைத் திறப்பாயாக. உண்மையில் உலகம் எத்தகையது என்பதைக் காண். பயனற்ற இன்பக் கற்பனைகளை விட்டொழி. அருகிலுள்ளது, தொலைவிலுள்ளது என்னும் வேறுபாடு இறைவனின் பார்வையில் இல்லை. தற்காலம், கடந்த காலம், எதிர்காலம் என்பதும் இல்லை. இவையெல்லாம் உலக ஓவியத்தைக் காண்பதற்கு வசதியாக நாம் ஏற்படுத்திக் கொண்டவையே. ஒரு எறும்பின் உயிரைக் காப்பாற்றுவது என்பது, ஒரு பேரரசை நிறுவுவதை விடச் சிறந்த செயல். தெய்வீகத் திருநிலையே மனித இனத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட இலக்காகும். அந்த நல்ல நிலையை வாழ்வில் பெறுவதற்காகவே நமக்கு இந்தப் பிறவியைக் கொடுத்துள்ளார்.
 
                                                        - ஸ்ரீ அரவிந்தர்.

சத்தமாய் பேசுபவருக்குரிய பதில்...

* வலிமை, ஆனந்தம் போன்ற குணங்களின் பிறப்பிடமாக அமைதி உள்ளது. அத்தகைய அமைதி ஒவ்வொருவரின் உள்மனதிலும் உள்ளது. எனவே, அதனை வேறு எங்கேயோ இருப்பதாக எண்ணி வெளியில் தேட வேண்டாம். தெளிவாக ஆராய்ந்து முடிவெடுக்கும் திறனுள்ள மனம், அமைதியின் வடிவமாக இருக்கும். அமைதியாக இருப்பவர்கள் எந்த செயலையும் சிறப்பாகவும், குறையில்லாமலும் செய்பவர்களாகவுமே இருப்பார்கள். எனவே, மனதில் இருக்கும் அமைதியை உணர்ந்து கொண்டு செயலாற்றுங்கள்.

* மனதிற்குள் மறைந்திருக்கும் ஞானத்தை வெளிப்படுத்த அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். உங்களிடம் யாரும் சத்தமிட்டு பேசினால், நீங்களும் பதிலுக்கு அப்படியே பேச வேண்டுமென்பதில்லை. அவரது பேச்சிற்கு அமைதியை பதிலாக கொடுங்கள். அதிலேயே அவர் எதிர்பார்க்கும் பல பதில்கள் புதைந்திருக்கும். அதனை புரிந்து கொள்ளும்வரையில்தான் அவர் சத்தமிட்டுக் கொண்டிருப்பார். எதிர்பார்த்த விடை கிடைத்துவிட்டால் அமைதியாக சென்று விடுவார். ஏனென்றால், அமைதியானது விவரிக்கமுடியாத பல அர்த்தங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

* எந்த செயலையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யுங்கள். நீங்கள் செய்யும் சிறு செயல்கூட இறைவனின் கருணையால்தான் நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தியானம் செய்து இறைவனை வழிபடுவதால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன், அர்ப்பணிப்பிலும் கிடைக்கும். ஏனெனில் அர்ப்பணிப்பும் ஒரு தியானம்தான்.

                                                                - ஸ்ரீ அரவிந்தர்.

ஒரு அடி வைத்தால் போதும்...

மனிதனின் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதாரமாக இருப்பது நம்பிக்கை. ஒரு மனிதனுடைய சிரத்தை, நம்பிக்கை எப்படியோ அதைப் பொறுத்துத் தான் அவனது வாழ்க்கை அமையும் என்று கீதை நமக்கு போதிக்கிறது. நம் வாழ்க்கை குறிக்கோள் இல்லாவிட்டால் பயனற்றதாகிவிடும். ஆனால் குறிக்கோள் என்பது வெறும் பெயரளவில் இருக்கக் கூடாது. மிகவும் உயர்ந்ததாக, சுயநலமற்றதாக இருக்க வேண்டும்.

நாம் இறைவனுடன் தொடர்பு கொண்டு அவனது திருக்கரங்களில் நம்மை ஒப்படைத்து விட்டால் அவன் தன்னுடைய சொந்த சக்தியையே நம்முள் ஊற்றுவான். யாருக்கு எதைக் கொடுத்தாலும் எல்லா உயிர்களிடத்தும் கோவில் கொண்டுள்ள இறைவனுக்கே கொடுக்கிறோம் எனும் உணர்வுடன் கொடுக்க வேண்டும். கடவுளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தாலும் போதும். உடனே அவர் நம்மை நோக்கி நூறு அடிகள் எடுத்து வைப்பார். இடையூறு எப்போதும் நம் உள்ளத்தில் தான் இருக்கிறதே ஒழிய, நம் சுற்றுச்சூழலில் இல்லை. ஆனால், நம்மைத் தொடரும் இடைஞ்சல்கள் யாவும் நமக்கு வெளியில் இருந்து வருவதாகவே தவறாக எண்ணுகிறோம். கருணையும், இனிமையும் தெய்வத்தின் குணங்கள் ஆகும். இந்நல்ல குணங்களை ஏற்றுக் கொள்ளும் மனிதன் தானும் தெய்வநிலைக்கு உயர்வான்.

வீரமும் வேண்டும் அன்பும் வேண்டும்...

* நம்பிக்கையற்ற மனம் எப்போதும் சந்தேகிக் கவே செய்யும். காரணம் அது புரிந்து கொள்ளவில்லை என்பதுதான். நம் மனத்தின் மீது வேண்டுமானால் நமக்குச் சந்தேகம் இருக்கலாம். ஆனால், இறைவனின் வழி நடத்தலில் சந்தேகம் வேண்டாம்.

* நாம் அன்பு செய்யலாம், இரக்கம் கொள்ள லாம், எந்த உணர்வையும் வெளிப்படுத்த லாம். ஆனால், இறைவனை தவிர வேறெந்த சக்திக்கும் அடிமையாகி விடக் கூடாது.

* வீரத்தையும் அன்பையும் விட்டு விடாதீர்கள். உங்கள் ஆன்மாவை அழிவிலிருந்து காக்கக் கூடியது இந்த இரண்டு நற்குணங்களும் தான். இவற்றால் வாழ்வை சந்தோஷமாக மாற்றிக் கொள்ளுங்கள்.

* முதியவர்களிடம் அனுபவம் இருந்தாலும், இளையவர்கள் அவர்களை வென்று விடுகின்றனர். காரணம் இளையவர்களிடம் உள்ள வேகமும், புதிய அறிவும் வெல்லப்பட முடியாதது. அதுவே பழசாகிறபோது தனது சிறப்பை இழந்து விடுகிறது.

* சிலருக்கு அற்பங்கள் அற்புதமாகி விடுகின்றன. சிலருக்கோ அற்புதங்கள் அற்பமாக விடுகின்றன. அதுதான் புனிதர்களுக்கும், தலை சிறந்த புனிதர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

* நாம் மரணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால் அப்போது வாழ்வும் முற்றுப்பெற்றுவிடும். மரணத்தை வீழ்த்த நம்மால் முடியாது. ஆனால், வாழ்க்கையை உன்னதமாக்க முயன்றால் அது கைகூடுகிற காரியம்

                                                  - ஸ்ரீ அரவிந்தர்.

குறித்த நேரத்தில் வேலையைச் செய்க!

* நாம் இறைவனுடன் தொடர்பு கொண்டு அவனது திருக்கரங்களில் நம்மை ஒப்ப டைத்து விட்டால், அவன் தன்னுடைய சொந்த சக்தியை நம்முள் ஊற்றுவான். இறைவனுடன் ஒன்றாகி விடுவதன் மூலம் எல்லாப் பொருள்களிலுமுள்ள எல்லையற்ற ஆனந்தத்தைச் சுதந்திரமாக அனுபவிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

* இறைவன் ஆனந்தமயமானவன். ஆனால், இறைவனிடம் ஆனந்தம் மட்டும் இல்லை. வேறு எத்தனையோ இன்பங்கள் அவனிடத்தில் உள்ளன. சாந்திக்காக, முக்திக்காக, ஞானத்திற்காக, ஆற்றலுக்காக இறைவனை நாடலாம்.

* எந்த அளவிற்கு இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறோமோ, அந்த அளவுக்கு இறைவனது அருள் நமக்காகச் செயல்பட்டு பக்கபலமாகத் துணை நிற்கும். நம் தன்னம்பிக்கைக் கும், சுயஆற்றலுக்கும் பின்னால் தெய்வ சக்தி இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

* குழந்தைக்கு நாம் கொடுக்கும் பொருளின் மதிப்பு தெரியாததைப் போல இறைவனிடமிருந்து நாம் பெறுவதின் மதிப்பு நமக்குத் தெரிவதில்லை. அதனால் மனிதனால் கடவுளிடம் நன்றியறிதலுடன் இருக்க முடிவதில்லை.

* குறித்த நேரத்தில் குறித்த வேலையைச் செய்வது என்பது பெரிய சக்தியாகும். அதனால் நமது நேரமும், செயல்பாடுகளும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரும்.

                                                         - ஸ்ரீ அரவிந்தர்.

ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அரவிந்தர்.

* உலகில் இருப்பதால் மட்டுமே பயனில்லை. நல்ல லட்சியத்தை உருவாக்கிக் கொண்டு அதற்காக வாழவேண்டும். நம்மால் முடிந்த நற்பணிகளைச் செய்ய வேண்டும். அதற்காகத் தான் நாம் மனிதனாக பிறந்திருக்கிறோம்.

* பிறரை நாம் நேசிக்காமல், நம்மை மட்டும் பிறர் நேசிக்க வேண்டும் என்று கோருவது இயற்கைககு புறம்பானதாகும்.
* நீ எவரையாவது ஏளனம் செய்யும் போது உன் உள்ளத்தை உற்று நோக்கு. உன் மடமையைக் கண்டு சிரிக்கத் தோன்றும்.
* இறைவனின் மாவீரனாக உன்னை எண்ணிக் கொள். அப்போது தான் உன்னால் முழுமுயற்சியோடு உலகில் போராட முடியும்.
* பிறர் தீயதென்று சொல்வதை நீங்களும் தீயதென்று தள்ளாதீர்கள். கடவுள் எதை வேண்டாம் என்று தள்ளியிருக்கிறாரோ அதை நீங்கள் அகற்றுங்கள்.
* உன் ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு செயலும் உனக்குள் இருக்கும் கடவுளுக்கு நீ அளிக்கும் காணிக்கையாகட்டும்.
* சோர்வு உங்களைச் சோர்வடையச் செய்து விடக்கூடாது. அதை விலக்க முற்பட வேண்டும்.
* உத்தமச் செயல்களை செய்ய நினைப்பவர்கள், அதை உடனடியாகச் செய்து விட வேண்டும்.

                                             -அரவிந்தர்

Sunday, May 16, 2010

வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உறுதி: விஞ்ஞானி தகவல்...

லண்டன் : 'ஏலியன்ஸ்' என்றழைக்கப்படும் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உறுதி; ஆனால் அவர் களை, மனிதர்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்கக் கூடாது' என, பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார். ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாவது: பிரபஞ்சத்தில், 10 ஆயிரம் கோடி நட்சத்திர மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்திலும் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில், பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன என்று கூறுவது தவறு.

என்னுடைய கணித அறிவின்படி, வேற்று கிரகவாசிகள் உள்ளனர் என்பது தெரிகிறது. அவர்கள் எந்த உருவத்தில் உள்ளனர் என்பதைக் கண்டறிவது தான் சவாலான விஷயம். அவர்கள் நுண்ணுயிரிகளாகவும் இருக்கலாம். புழுவாகவும் இருக்கலாம். அவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த உருவங்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதற்கு, நம் உயிரினத்தின் வளர்ச்சியை உதாரணமாகக் கொள்ளலாம்.

தங்கள் கிரகத்திலுள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி விட்டு, தற்போது வேறு இடத் தில் வசிப்பதாக நான் கருதுகிறேன். அது போன்ற வேற்று கிரகவாசிகள், மற்ற கிரகங்களுக்கு நாடோடிகள் போல நுழைந்து, அவ்வுலகத்தைக் கைப்பற்றவும் தயாராக இருக்கலாம். ஆனால், அவர்கள் இவ்வுலகில் நுழைந்தால், அவர்களுக்கு அது வெற்றியாக அமைய வாய்ப் பில்லை. இவ்வாறு ஸ்டீபன் ஹாக்கிங் கூறினார்.

Wednesday, May 5, 2010

இலங்கை பாராளுமன்றை அதிர வைத்த கன்னி உரை...

இலங்கை நாடாளுமன்றத்தில் 2010 தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு சார்பாக வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்களின் கன்னிப் பேச்சு இன்று பாராளுமன்றத்தை அதிரவைத்தது.

அந்த உரையின் ஒலி வடிவம் மற்றும் எழுத்து வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

கெளரவ சபாநாயகர் அவர்களே! மதிப்பிற்குரிய சக உறுப்பினர்களே! என்னை தங்கள் பிரதிநிதியாக உங்கள் முன் அனுப்பி இருக்கும் எமது மக்களின் சார்பிலும் எனது சார்பிலும் எனது வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் முதலில் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.


இறந்துபோன உறவுகளின் எலும்புத்துண்டங்கள் என் பாதங்களை முத்தமிட அழிந்துபோன எம் தேசத்தின் சாம்பல் மேட்டிலிருந்து எனது மக்களின் நிரந்தர பூர்வீக வாழ்வியல் உரிமைக்கான அங்கீகாரம் மக்களின் அங்கீகாரத்தோடு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தமது கெளரவமிக்க உயிரினும் மேலான உரிமைக்காக காலமெல்லாம் போராடி தவமிருக்கும் தமிழ்பேசும் மக்களிடமிருந்து வருகின்றேன்.

இரண்டாவது உலக யுத்தம் முடிவடையும் தறுவாயில் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டு சரணடையும் நிலையிலிருந்த போதிலும் அணுகுண்டு வீச்சுக்குட்படுத்தப்பட்டு இரு பெரும் நகரங்களையும் இரண்டு லட்சம் மக்களையும் இழந்து இன்றுவரை கதிர்வீச்சு தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபடாத போதிலும் மீண்டுமொரு பொருளாதார வல்லரசாக இடிச்சு பெருப்பித்திருக்கும் இரசாயன தேசத்தின் அன்பளிப்பான இக்கட்டிடத்தொகுதியில் இருந்து என் கன்னி உரையை எதிர்காலம் பற்றிய உயர்வான நம்பிக்கையுடன் ஆரம்பிப்பதில் பெருமையடைகின்றேன்.

தோற்கடிக்கப்பட்டவர்கள் எல்லோரும் தோற்றுப்போனவர்கள் அல்லர், அழிக்கப்பட்டவர்கள் எல்லோரும் அழிந்துபோனவர்களும் அல்லர் என்பதற்கு உலக வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் உண்டு.

துருக்கிய பேரரசாலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளாலும் காலத்திற்கு காலம் அழிக்கப்பட்டு வெறும் கற்குவியலாக்கப்பட்ட உரோமானிய தேசம். அந்தக் கற்களையே தம் மூலதனமாக்கி சீமெந்து உற்பத்தியில் பெரும் சாதனையீட்டி இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றது. அந்தக் கற்களில் எழுதப்பட்ட சோக காவியங்கள் இன்று வசந்த கீதங்களாக மாற்றப்பட்டுவிட்டன.

ஒரு தேசமோ ஒரு இனமோ இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு பேரழிவுகளுக்கு முகங்கொடுக்கும்போது மீளெழுவதற்கு இன்னுமொரு பாதை உண்டு என்பதை ஜப்பானியர்களும் உரோமானியர்களும் இன்று முழு உலகத்திற்கும் நிரூபித்துவிட்டனர்.

நாம் பயங்கரவாதிகளாக பட்டம் சூட்டப்பட்டோம். உலக வல்லரசுகளும் பிராந்திய வல்லரசும் எமது இராணுவ பலத்தையும் எமது சந்ததியையும் அழிப்பதற்கு உரிய நியாயப்பாட்டை எம்மை பயங்கரவாத பட்டியலில் சேர்த்துக்கொண்டதன் மூலம் ஏற்படுத்திக்கொண்டன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தமிழ்மக்களுக்கெதிராக ஒரு பெரும் யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

பல்லாயிரம் தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். இன்னும் பல ஆயிரமவர் ஊனமாக்கப்பட்டனர், காணாமல் போனோரின் தொகை இன்னமும் கணக்கிடப்படவில்லை, பலகோடி பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. சூறையாடப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் இழந்து அகதிகளாக வெறுங்கைகளுடன் முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்டோர் தொகை லட்சங்களாக உயர்ந்தது.

இப்பேரழிவின் பின்னால், இலங்கை அரசுக்கு உலக வல்லரசுகளும் பிராந்திய வல்லரசும் மறைமுகமாகவும் நேரடியாகவும் பெரும்பங்களிப்பை வழங்கின. இன்று இப்போரின் எம்மீது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவும், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும் குற்றம் சுமத்தி சிங்கள தேசத்தின் கழுத்தை நெரிக்க, வல்லரசுகள் தங்கள் கரங்களை நீட்டுகின்றன. அதாவது எங்களை அழிக்க உங்களுக்கு தோள்கொடுத்தவர்கள் இன்று உங்களை அடிமைப்படுத்த எங்களைப் பாவிக்கின்றனர்.

மதிப்பிற்குரிய எங்கள் சகோதர்களே! எங்களுக்கெதிராக உங்களையும் உங்களுக்கெதிராக எங்களையும் பாவித்து எங்கள் எல்லோரையும் அடிமைகொள்ள முயலும் இவர்களின் வழியில் நாம் தொடர்ந்து விழத்தான் வேண்டுமா?

நாம் ஒரு தேசத்தின் இரு தேசிய இனங்களாக அங்கீகரிக்கப்பட்டதுண்டு. நாங்கள் எங்களையும், எங்கள் தேசத்தையும் தற்காத்துக்கொள்ள வேண்டாமா? இரு இனங்களுக்குமிடையேயான புரிந்துணர்வும் நல்லடக்கமும் வேறு இப்போது அவசியம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நமது இராணுவ வலிமை அழிக்கப்பட்ட பின்பு, எமது உரிமைகளுக்கான போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்பு, எங்கள் பலவீனமான நிலைமையை மீறி மேலாதிக்கம் செலுத்துவதன் மூலம் ஒரு ஐக்கியத்தை உருவாக்கிவிட முடியும் என்ற ஒரு தவறான பார்வை உங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கலாம்.

இத்தகையதோர் பார்வையும் அதன் வேர்களில் இருந்து எழுந்த சிந்தனைப்போக்குமே நமது அறுபது வருட போராட்டத்திற்கும் முப்பது வருட ஆயுதப்போராட்டத்திற்கும் அடிப்படை என்ற உண்மையை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய காலமிது. மீண்டும் குருதி சிந்தும் நாட்களை உருவாக்கும் காரணிகளை தயவுசெய்து உங்கள் எண்ணங்களிலிருந்து தூக்கி தூர வீசிவிடுங்கள். அடக்குபவர்களுக்கும் அடக்கப்படுபவர்களுக்கும் இடையே ஐக்கியம் நிலவியதாக வரலாறு இல்லை. நிம்மதி கிடைத்ததாக உதாரணங்கள் இல்லை. நாங்கள் நாங்களாகவும் நீங்கள் நீங்களாகவும் கரங்கோத்து நின்று எங்கள் தேசத்தைக் கட்டியெழுப்புவோம்.

எங்கள் கழுத்தை உங்கள் கரங்கள் நெரிக்கவேண்டாம். உங்கள் கரங்களை எங்கள் பற்கள் காயப்படுத்த வேண்டாம். உங்களுக்கென ஒரு பாரம்பரிய வாழ் நிலம், மொழி, பொருளாதாரம், தனித்துவமான கலாச்சாரம் உண்டு. எமக்கும் இவை அனைத்தும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

அன்புக்குரியவர்களே! இலங்கை மக்களாகிய நாங்களும் நீங்களும் பேரழிவுகளைச் சந்தித்த அதேவேளையில் அந்நிய ஆயுத வியாபாரிகளும் தரகர்களும் கோடிகோடியாக இலாபம் வைத்து எம்மைக் கொள்ளையடித்தார்கள். இதுமட்டுமா போரின்போதும் அதன்பின்பும் எமக்குப் பலவித நெருக்கடிகளைக் கொடுத்து எமது மூலவளங்களையும் மனித உழைப்பையும் கொள்ளையிடுகின்றார்கள்.

புல்மோட்டையில் இல்மனைட் வளமும் கொள்ளையடிக்கப்படுகின்றது. வடக்கின் சுண்ணக்கல் வளமும் எண்ணெய் வளமும் இந்தியாவால் அபகரிக்கப்பட திட்டம் தீட்டப்பட்டுவிட்டன. இன்னொருபுறம் எண்ணெய் வளத்தைக் கொள்ளையிட ரஷ்யா ஒப்பந்தம் எழுதிவிட்டது. சேது சமுத்திர திட்ட மூலம் எமது கடல்வாழ் உயிரினங்களின் வளம் அழிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் கரங்களுக்கு போய்விட்டது. சுதந்திர வர்த்தக வலயம் அந்நிய முதலீடுகளைக் கவர்தல் என்ற பெயரில் எமது மக்களின் மனித உழைப்பு மலிவான விலையில் கொள்ளையிடப்படுகின்றது.

இலங்கை "பெண்களின் சொர்க்கம்" என்ற விளம்பரம் செய்யப்படும் அளவிற்கு உல்லாசப் பயணத்துறை என்ற பெயரில் கலாச்சார பாரம்பரியமூட்டல்களால் பெண்கள் கேவலப்படுத்தப்படுகின்றனர். பதினான்காயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர் சிறுமியர் வெளிநாட்டவரின் பாலிய வக்கிரத்திற்கு பலியாகி எதிர்காலத்தை இழக்கின்றார்கள்.

ஆம், எங்கள் மூலவளங்களும் மனித உழைப்பும் கொள்ளையிடப்பட்டு எமது தேசம் ஒட்டாண்டி நிலைக்கு தள்ளப்படுகின்றது. இப்பேராபத்தில் இருந்து எம்மை நாம் மீட்க நாம் உரிமை கொண்டு ஐக்கியப்பட்டு எழுச்சிபெற வேண்டும். இந்நாட்டில் பெரும்பான்மை சிறுபான்மை என எதுவுமில்லை என்பது வெறும் வெற்றுக்கோசமாக இருந்துவிடக்கூடாது. இனியும் அடக்குபவர்களோ அடக்கபடுபவர்களோ இல்லை என மிளிரப்படவேண்டும் என்பதே நமது அவாவாகும்.

நிற்க, இப்படியான ஒரு புறச்சூழலில் இப்போரின் கொடுமைகளையும் அதன் பின்னரான காலத்தில் கொடுமைகளையும் அனுபவித்துக்கொண்டிருக்கும் கிளிநொச்சி முல்லத்தீவு மாவட்ட மக்களின் இடர்களை கவனித்து களைவதில் முக்கிய பணி எனக்கு அதிகமாக உள்ளதாகவே நான் உணர்கின்றேன்.

நாம் போருக்கு நேரடியாகவே முகங்கொடுத்தவர்கள். இந்த போர் எங்கள் மீது விமானங்கள் குண்டுகளை வீசியது, எறிகணைகள் எங்கள் உடல்களை துளைத்தன. துப்பாக்கி வேட்டுக்கள் எங்களை துளை போட்டன. மரணம் எங்களை விரட்ட விரட்ட இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து ஓடினோம், போகுமிடம் தெரியாமலேயே வெட்டவெளிகளில் வீதியோரங்களிலும் கூடார வாழ்க்கையை ஏற்றோம். மீண்டும் மீண்டும் போர் எங்களை துரத்திய போதும் ஓடினோம். இருப்பினும் மரணங்களைத் தவிர்க்க முடியவில்லை. உடலுறுப்புக்கள் இழப்பதை தவிர்க்க முடியவில்லை. இறந்த உடல்களை எடுத்து புதைக்கவும் வழியின்றி ஓடினோம். உணவில்லை குடிக்க நீரில்லை இயற்கை கடன்களை கழிக்க இடமில்லை, அடுத்த நிமிட உயிர்வாழ்வு பற்றிய நம்பிக்கைக்கு இடமில்லை, முள்ளிவாய்க்காலுக்குள் மூன்றரை லட்சத்திற்கு மேற்பட்டோர் முடக்கப்பட்டோம்.

உலகின் நற்பண்புகளுக்கும் மனிதாபிமானமாக காட்டப்பட்ட நடவடிக்கைகள் எங்களை மரணக்குழிகளுக்குள் தள்ளின. இறந்தவர் போக எஞ்சியோர் நந்திக்கடல் தாண்டினோம். வவுனியாவில் அகதிமுகாமுக்குள் எங்கள் வாழ்வு முடக்கப்பட்டது. உணவுக்களஞ்சியமான வன்னிமண்ணில் உற்பத்தியைப் பெருக்கி மற்றவருக்கு உண்டி கொடுத்த நாம் ஒருபிடி சோற்றுக்கு கையேந்தி வரிசையில் நின்றோம். இன்று எம்மில் ஒரு பகுதியினர், ஆறு தகரங்களுடனும் ஆறுமாத நிவாரண பொருட்களுடனும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டோம். ஏனையோர் இன்னும் முகாம்களில்.

போர் முடிந்து ஓர் வருடம் ஓடிப்போய்விட்டது. எம் துயரங்கள் முடிய இன்னும் எத்தனை வருடங்கள் போகும் என்பது எமக்குள்ள கேள்வி. போராளிகள் என்ற பெயரில் இன்னமும் பல ஆயிரமவர் தடுப்புமுகாம் அவலங்களுக்குள் தவிக்கின்றனர். பெற்றோர்கள் தம் பிள்ளைகளைப் பார்த்துவிட மணிக்கணக்காக மழையிலும் வெயிலிலும் காத்துநிற்கின்றனர். இன்னும் எத்தனையோ பெண்களும் பிள்ளைகளும் எங்கேயென்று அறியமுடியாது உறவினர் அலைந்து திரிகின்றனர். ஒவ்வொரு நாளும் காயப்பட்டு சிகிச்சைக்காக உலங்குவானூர்தியில் ஏற்றப்பட்ட எத்தனையோ பேரை தேடி விளம்பரங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இச்சபையில் பெருமைக்குரிய உறுப்பினர்களே! ஒரு ஜனநாயக தேசத்தில் இதுதான் எங்கள் வாழ்வு. இதிலிருந்து நாம் மீளெழ வேண்டும். அந்நிய தேசங்கள் நமது நாட்டின் மூலவளங்களையும் மனித வளங்களையும் கொள்ளையடிப்பதுடன் எமது இறைமையை நிறைவேற்றுவதுடன் பாதுகாக்கவும் நாம் உங்களுடன் ஒன்றிணைய காத்திருக்கின்றோம். ஆனால் நாம் மனிதர்களாக வாழும்போது மட்டும்தான் அது சாத்தியப்படும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாம் எல்லோரும் இந்நாட்டு மக்களென மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் வார்த்தைகளை நேசிக்க முயலுங்கள். உரிமை பறிக்கப்பட்டவர்களும் உரிமை பறிப்பவர்களும் ஒரே சகோதரர்களாக எப்படி வாழமுடியும்? எங்கள் சகோதர்களே! மக்கள் சார்பில் மீண்டும் நான் உங்களைக் கேட்பது, மீண்டும் எங்கள் வாழ்வை ஆரம்பிக்க எமக்கு வழிவிடுங்கள். உருளும் உலகப்பந்தின் இந்த அழகிய மாங்கனித் தீவிலே கிறிஸ்துவுக்கு முற்பட்ட கால வரலாற்று சிந்தனையை கைவிட்டு, இருபத்தோராம் நூற்றாண்டுக்குரிய நவீன சிந்த்னையின்படி இனப்பிரச்சினையை அணுகவேண்டும். சிங்கள மக்களும் தமிழ்பேசும் மக்களும் இலங்கைத் தீவின் இணை உரிமையாளர்களும் இணைப் பங்காளர்களும் என்ற மனப்பாங்குடன் ஒரு புதிய அரசியலை அணுக அரசாங்கம் தயாராக வேண்டும்.

தற்போது சிங்கள மக்களிடம் தமிழரை வெற்றிகொண்ட மனப்பாங்கும், தமிழரிடம் வேதனையும் வெறுப்பும் நிறைந்த நிலையும் காணப்படுகின்றது. ஒரே நாடு ஒரே மக்கள் என்று சொல்லிக்கொண்டே பூநகரி வெற்றி விழாவையும், கிளிநொச்சி வெற்றி விழாவையும், முள்ளிவாய்க்கால் வெற்றி விழாவையும் கொண்டாடிய தினமும், இனிவரும் நாட்களில் மே மாதம் 12ம் திகதி முதல் 18ம் திகதிவரை கொண்டாடப்படவுள்ள இராணுவ வெற்றிவிழாவும், தமிழர்களின் மனங்களை எப்படி உடைத்து சிதறிடிக்கப்போகின்றது என்பதை சிந்தியுங்கள். இராணுவத்தால் தீவு நிரம்பி வழிந்து ஒன்றுபட்டது போல் காணப்பட்டாலும், மனத்தால் தீவு இரண்டுபட்டே இருக்கின்றது. புத்தபகவான் பரிநிர்வாணம் அடைவதற்காக தவமிருந்தார் என்ற மகிமை சிங்கள மக்களுக்கு தெரியும்.

சுதந்திர இலங்கையில் இதுவரை இரண்டரை லட்சத்திற்கும் மேலான உயிர்களை இழந்து தமிழ்மக்கள் தமது உரிமைக்காக தவமிருக்கின்றார்கள் என்ற உண்மையை சிங்கள சகோதரர்களும் இந்த உலகமும் புரியும் நாள் வந்திருக்கின்றது. தன் சொந்த சகோதர இனத்துடன் அதிகாரங்களைப் பங்கிட்டுக் கொள்ள தயாரில்லாமல், அந்நிய நாடுகளிடம் கையேந்தி தனது சொந்த தமிழ் மக்களுக்கெதிரான அரசியலை வலைவீசி வரும் அரசாங்கங்கள் நடத்தியதன் விளைவாய் இலங்கைத் தீவை அந்நிய அரசுகளின் காலடிக்குள் சிக்குண்டிருப்பதையும் ஆட்சியாளர்கள் உணர இன்னும் எவ்வளவு காலம் எடுக்குமோ தெரியாது.

ஒரு இனத்தை எந்த இனம் ஒடுக்குகின்றதோ அந்த இனமும் அமைதியாக இருக்க முடியாது. அந்த நாடும் சுபீட்சம் அடைய முடியாது. அத்துடன் எம் ஓரினத்தை ஒடுக்க எடுத்த நடிவடிக்கைகளின் விளைவால் அந்நிய தேசங்களிடம் அடிமைப்பட்டு போகவும் நேரும். சுதந்திரமும் சுபீட்சமும் நிறைந்த இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமென்றால், அது ஏனைய இனங்களின் தனித்துவ உரிமைகளை அங்கீகரிப்பதிலும் அவர்களுடன் அதிகாரங்களை பங்கிட்டுக்கொள்வதிலுமே அதனை ஆரம்பிக்க வேண்டும். அதற்கான துணிச்சலையும், தூரப்பார்வையையும், இன்றைய அரசாங்கம் முன்னெடுக்குமா என்பதே இன்றைய கேள்வியாகும்.

முதிர்ந்த அரசியல் அனுபவமிக்க சம்பந்தர் ஐயா தலைமையில் இதற்கான வாய்ப்பை அளிக்க எமது கட்சி தயாராக உள்ளது. இத்தகைய அரிய வரலாற்று வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்ல தீர்வை ஏற்படுத்தி, புதிய இலங்கையை கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக வேண்டும். இதனை தவறவிட்டால், வரலாறு தான் விரும்பும் இன்னொரு திசைக்கு தீர்வை இட்டுச் செல்லும் என்பது திண்ணம்.

சுனாமியாலும் யுத்தத்தாலும் அழிந்து சின்னாபின்னப்பட்டிருக்கும் தமிழ்பேசும் மக்களின் மனங்களைப் புரிந்து அவர்களின் துன்பங்களைப் பகிர்ந்து அவர்களின் தனித்துவமான உரிமைகளை புரிந்து அதற்கேற்ப நியாய பூர்வமானதும் நீதியானதுமான தீர்வை காணவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. நாம் இரு சுதந்திரமான தேசிய இனங்களாக ஒரு நாட்டின் மக்களாக ஒன்றிணைந்து நம் தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற பிரகடனத்தை மனமுவந்து நாம் அனைவரும் நினைப்போம் என்று கூறி என் கன்னி உரையை நிறைவு செய்கின்றேன்.

மின்னஞ்சல் - shritharan08@hotmail.com

படிவம்  CLICK HERE...