கணவர்மார்களே! மனைவிமார்களே! இளைஞர்களே! யுவதிகளே! இந்தக் கட்டுரை (அல்லது பாடம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்!) முழுக்க முழுக்க உங்களுக்கே!
உடற்பயிற்சிகளில் பலவகை உண்டு. காற்றோட்டத்தில் செய்வது (aerobic), உள்ளரங்கில் செய்வது (unaerobic), உடல் களைப்படையும் வரை செய்வது, வேர்வையே சிந்தாமல் செய்வது, எனப் பற்பல வகைகள் ஒவ்வொரு வயதினருக்கேற்ற வகையில்; அவர்களது உடல்நிலையைப் பொறுத்த வகையில்.
நாமளும் ஒரு உடற்பயிற்சி எப்படி செய்வது என்று இப்போது பார்க்கப் போகிறோம். இந்த உடற்பயிற்சிக்குப் பெயர் 'கீகெல் எக்ஸர்ஸைஸ்'. 'பெல்விக் ஃப்ளோர் எக்ஸர்ஸைஸ்' என்றும் கூறலாம்.
டாக்டர். அர்னால்ட் கீகெல் (Dr. Arnold Kegel) என்பவர் உருவாக்கிய இந்த உடற்பயிற்சிக்கான முறைமைகளை வகுத்துத் தந்தமையால் அவரது பெயரிலேயே இது அழைக்கப்படுகிறது. இன்று உலகத்தில் என்ன புதிதாக என்ன கண்டுபிடிக்கப்பட்டாலும் அது ஏதோ ஒரு வகையில் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து, உருவாக்கி சொல்லி / எழுதி வைத்துவிட்டுச் சென்றதாகவே இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
சொல்ல வந்ததைத் சொல்லாமல் கதை என்ன வேண்டிக் கிடக்கிறது என்கிறீர்களா? விஷயத்திற்கு வருகிறேன். கீகெல் இதைக் கண்டுபிடித்து சொன்னாலும் நம் சித்தர்கள் கண்டுணர்ந்து நமக்கு அறிவித்துச் சென்ற 'விந்தைக் கட்டும் வித்தை'தான் இது. விந்து மட்டுமல்ல, அது உற்பத்தியாகும் பகுதியையும், அந்தப் பகுதி சார்ந்த நரம்பு முடிச்சுகளையும், தசைப் பகுதிகளையும் வலுவாக்கும், உறுதி சேர்க்கும் விஷயம்தான் இந்த கீகெல் (அ) பெல்விக் ஃப்ளோர் (Pelvic Floor) எக்ஸர்ஸைஸ்.
இந்தப் பயிற்சி தம்பதியருக்கும், இளம்பருவத்தினருக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும்.
நமது அடிவயிற்றுக்கும் கீழே உள்ள பகுதிதான் பெல்விக் ஃப்ளோர் எனப்படுவது. இதிலுள்ள ப்யூபோசைக்யூஸ் (pubococcygeus) என்னும் தசைப்பகுதியை சுருக்கி விரித்து, இறுக்கி இளக்கி விடுவதுதான் இந்தப் பயிற்சியின் நோக்கம். ஏற்கெனவே, இதே சாரத்தில் 'இளமையின் ரகசியம்' என்ற தலைப்பில் யோகிராஜ் வேதாத்திரி மகரிஷியின் எளிய வகை காயகல்ப பயிற்சியை அடிப்படையாகக் கொண்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.
http://www.nilacharal.com/tamil/success/beauty_secrets_334.asp
கர்ப்பிணிப் பெண்டிருக்கு குழந்தைப் பிறப்பு சிரமமே இல்லாமல் மிக எளிதாக அமைய இந்தப் பயிற்சி பெரிதும் உதவுகிறது. முந்தைய தலைமுறைகளில், தாய்மை அடையும் பெண்கள் தங்கள் நிறைமாத கர்ப்ப காலம் வரை கடினமாக உழைத்தவர்கள். காட்டு வேலை, மேட்டு வேலை செய்து பிழைத்த அந்தக் காலத்து ஜனங்கள் எட்டு பிள்ளை, பத்து பிள்ளை என்று சுகப்பிரசவமாகவே பெற்றெடுத்து, குடும்பத்தை உருவாக்கச் சொன்னால் சிறு கிராமங்களையே அநாயாசமாக உருவாக்கியவர்கள்!!
பழம் பெருமை இருக்கட்டும்! இக்காலத்திலோ அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. வீட்டு வேலைகளைச் செய்ய சகலத்திற்கும் உபகரணங்கள் வந்து விட, பிள்ளையை அலுங்காமல் குலுங்காமல் பாதுகாக்க வேண்டும் என்ற அதீத கவனிப்புகளும் கூடுதலாகி விட, உடலுழைப்பு குறைந்து எளிதான குழந்தைப் பிறப்பு என்பது சிக்கலான ஒன்றாகி, மருத்துவரின் கத்திக் கபடாக்களின் தயவில் வெளியுலகை தரிசிக்கிறது.
தாய்மையடைதல், குழந்தைப் பிறப்பு, பிரசவ காலங்களில் எடை கூடுதல், சிசேரியன் போன்றவை இந்த பெல்விக் தசைகளை வலுவிழக்கச் செய்கின்றன. வலுவிழந்த வீணை நரம்புகளை இழுத்துக் கட்டி இசைப்பதுதானே நியாயம்? நரம்பு போச்சி; போனால் போகட்டும் என்று தூக்கி பரண் மேல் கடாசப்படுவதற்கா வீணை? நம் உடலும் வீணை போலத்தானே!
எல்லாம் சரி.. நியாயம்தான் என ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். நல்லது. இனிமேல் என்ன செய்ய வேண்டும். அந்த எக்ஸர்ஸைஸ் எப்படி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் போது அதை இறுக்கி அடக்கிப் பாருங்கள். விடுங்கள்; மீண்டும் அடக்கிப் பாருங்கள். இவ்வளவுதான் இந்தப் பயிற்சி. இப்போது நீங்கள் கட்டுப்படுத்தும் தசைப்பகுதிதான், பெல்விக் பகுதி. இனிமேல் சிறுநீரை அடக்காமல் சாதாரணமாக இருக்கும்போது இதைச் செய்யுங்கள்.
முதன்முறை பழகும்போது, அடிவயிற்றையும் சேர்ந்து எக்குவது போல இருக்கும்; தொடைப்பகுதி தசைகளும் இறுகுவதை உணரலாம். அவ்வாறு செய்வதைத் தவிர்த்து மிகச் சரியாக பெல்விக் தசைகளை மட்டும் இனம் கண்டு இறுக்கி விரித்தால், ஓரிரு மாதங்களிலேயே இளமை ஊஞ்சலாடுவது கண்கூடாக உணர்வீர்கள்.
இந்த கீகெல் எக்ஸர்ஸைஸ் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். டிவி பார்த்துக் கொண்டு, பஸ்ஸில் பிரயாணம் செய்து கொண்டு, வகுப்பில் பாடம் கேட்டுக் கொண்டு, கதை எழுதிக் கொண்டு, கார் ஓட்டிக் கொண்டு - என எந்த நிலையிலும் இதை செய்யலாம். யாருக்கும் தெரியாது.
இதைச் செய்யும் வழிமுறைகளை இன்னும் கொஞ்சம் விளக்கமாகக் காண்போம்.
1. முதன் முதலில் ஆரம்பிக்கும்போது நின்று கொள்ளுங்கள். நாற்காலியில் உட்கார்ந்து கொண்டும் செய்யலாம்.
2. மெல்ல பெல்விக் தசைகளை இறுக்குங்கள், மூன்றிலிருந்து ஐந்து வினாடிகள் போதும்.
3. மெல்ல இறுக்கத்தைத் தளர்த்துங்கள். அதற்கு ஒரு மூன்று வினாடிகள் எடுத்துக் கொள்ளுங்கள்.
4. இதே போல பத்து முறை செய்யுங்கள்.
5. ஒரு நாளில் இது போல ஐந்து முறை செய்து வாருங்கள்.
6. முக்கியமாக, இயற்கை உபாதைகள் கழித்த பின்போ, சாப்பிடுவதற்கு முன்னரோ, அல்லது சாப்பிட்டு மூன்று மணி நேரம் ஆன பின்னரோ, தண்ணீர் குடிப்பதற்கு முன்னரோ செய்வது மிகவும் நல்லது. அதாவது, இதைச் செய்வதற்கு முன்னர் வயிறு காலியாக இருத்தல் நலம்.
7. ஒரு நாளில் ஐந்து முறை என்பது பத்து முறையாக சிறிது காலம் கழித்து உங்கள் உடலுக்கு அது பொருந்தி வந்தால் உயர்த்திக் கொள்ளுங்கள்.
8. ஆரம்ப காலங்களில் அந்த இடத்தில் சூடு அதிகரிக்கும். அதீத சூடானால் எண்ணிக்கைகளைக் குறைத்துக் கொள்ளவும்.
9. தினமும் செய்யலாம்; அல்லது வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் கூட செய்யலாம்.
10. தினமும் ஒரு தடவைக்கு இருபது கவுண்ட் என பத்து தடவை கூட அதிகபட்சமாக செய்து வரலாம்.
இவ்வாறு சரியான பொழுதில், சரியான அளவு செய்து வந்தால் எந்நேரமும் புத்துணர்வுடன் காணப்படுவது போல உணர்வீர்கள். இளமை அதிகரிக்கிறதல்லவா!! வியர்க்க விறுவிறுக்க செய்ய வேண்டியதில்லை; தனியாக நேரம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை; மற்றவர்கள் பார்த்து விடுவார்களோ எனக் கூச்சப்படத் தேவையில்லை.
இவையெல்லாம் கர்ப்பிணிப் பெண்களுக்குத்தானே.. அப்புறம் ஏன் எங்களையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்கிறீர்கள் என்று கணவர்மார்களும், பருவ வயதினரும் கேட்கிறீர்களா?
ரைட்.. இந்த பெல்விக் எக்ஸர்ஸைஸ் குழந்தை பிறப்பை மட்டும் எளிமைப்படுத்துவதல்ல, பாலுறவுகளில் கணிசமான அளவு இன்பத்தைக் கூட்டுகிறதாம்! உறவு கொள்ளும் காலம் அதிகரிக்கிறதாம்! உறவின் போது பெல்விக் தசைகளை சுருக்கி விரிக்கும்போது விந்து வெளிப்படும் நேரம் நம் கட்டுப்பாட்டில் இருக்குமாம்! அதனால் உச்சநிலை (orgasm) நீடிக்கும் என்கிறார்கள். தளர்ந்த தசைகளே பெரும்பாலும் விந்து முந்துதலுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
மேலும், விந்து கெட்டிப்படுதலும் அதிகரிக்கிறதாம். சக்தி வாய்ந்த உயிரணுக்கள் உருவாவதற்கும் வழிவகை ஏற்படுகிறதாம். குழந்தையில்லாத் தம்பதியருக்கு இந்தப் பயிற்சி குறிப்பிடத்தக்க அளவில் கைகொடுக்கிறதாம்.
அதற்காக, இது மட்டுமே போதும், எல்லா செக்ஸ் பிரச்சினைகளையும் தீர்த்து விடலாம் என்று சொல்வதற்கில்லை என்கிறார் அர்னால்ட் கீகெல். ஆனால் இன்பமான நேரங்களை அதிகரிக்க இதுவும் பெருமளவில் உதவக்கூடும் என்று சொல்ல வேண்டும் என்கிறார் அவர். நல்ல செக்ஸர்ஸைஸ்.. சாரி எக்ஸர்ஸைஸ்தானே!!
தூக்கத்தில் விந்து தானாகவே வெளிப்படுதல் குறையும் எனவும், பருவ வயதினரின் சுயஇன்ப வேட்கை குறைந்து பிற விஷயங்களில் கவனம் செலுத்த ஏதுவாக அமையும் என்றும் கூறுகிறார்.
அதோடல்லாமல் இந்தப் பயிற்சி சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுவதால், பல வகை நோய்களிலிருந்தும் நம்மை அப்பாற்படுத்துகிறது. 'மலச்சிக்கல் இல்லையேல் உடலில் எந்தச் சிக்கலும் இல்லை' என்பது முன்னோர் சொலவடை.
ஆரம்ப காலங்களில் இதைத் தொடர்ந்து செய்வதற்கு மறந்து போகக்கூடும். சிறு டைரியைப் போட்டு செயல்பாடுகளை எழுதிக் கொள்வது நல்லது. தொடர்ந்த பழக்கத்திற்கு வந்த பின்னர், அது தேவையில்லை. தன்னிச்சையாக செயல்படுத்த ஆரம்பித்து விடுவீர்கள்!
வாழ்க வளமுடன்!
-ரிஷிகுமார்.
-

No comments:
Post a Comment