Sunday, February 7, 2010

சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை...

"நம் பிள்ளைகளுக்குப்

பல் முளைக்கும் முன்பே இந்த சினிமா

மீசை முளைக்க வைத்து விட்டது.

இந்த அழுக்குத் திரை

சலவை செய்யப்படுமா?

இல்லையெனில்...

மக்களைச் சுருள வைக்கும்

திரைப்பட சுருளையெல்லாம்

ஒரு தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம்'

- வைரமுத்து

கவியரசின் வரிகளுக்கு ஒப்புதல் அளிப்பது போல், "அனைத்து குற்றங்களுக்கும் காரணம் சினிமா' என, மதுரை ஐகோர்ட் நீதிபதி வி. தனபாலன், வழக்கு விசாரணை ஒன்றில், சாட்டையை சுழற்றியுள்ளார். இது, நம்மூர் சினிமாக்காரர்கள் காதில் விழவில்லை போலும்; இல்லையென்றால் கிளம்பியிருப்பர், கண்டனக் கூட்டமொன்று நடத்த. திரைப்படம் என்பது ஒரு உன்னதக்கலை தான்; மறுப்பதற்கில்லை; அது, நல்ல விஷயங்களை தரும் போது. இன்றைய தமிழ் சினிமா, எந்த உணர்வை மக்களிடம் அதிகம் பரப்புகிறது? காதலா, கடமையா, வன்முறையா, ஆபாசத்தையா, மூட நம்பிக்கையா என்று கேள்விகள் பலவற்றை எழுப்பினால், விடையை நான் சொல்லத் தேவையில்லை; உங்களுக்கே புரியும் சற்று சிந்தித்துப் பார்த்தால். "கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா' என்ற காலம் போய், "பிள்ளக் குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா?' என்ற ரீதியில் அல்லவா சென்று கொண்டிருக்கிறது நமது கலாசாரம்.

கலாசார சீரழிவு, வன்முறை, மாணவர்களிடையே ஹீரோயிசம் என, சமூகத்தை சீரழிக்கும் செயல்கள் அனைத்திற்கும் வித்திடுவதில், இன்றைய சினிமா முக்கிய இடத்தைப் பிடிப்தை யாராலும் மறுக்க முடியாது. நாகரிகமற்ற வார்த்தைகள், ஆபாசமான அசைவுகள், அருவறுப்பான காட்சிகள், இரட்டை அர்த்தமுள்ள ஜோக்குகள் ஆகியவற்றையே கதையம்சங்களாக கொண்டு பெரும்பாலான படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கு அர்த்தம், நல்ல படங்களே வெளிவருவதில்லை என்பதல்ல; அற்புதமான கதை, தொழில்நுட்ப நேர்த்தி, ஒளிப்பதிவு என, அனைத்து நல்ல அம்சங்களுடன் கூடிய படங்களும் வந்து கொண்டு தான் இருக்கின் றன. ஆனால், அப்படிபட்ட படங்கள் எத்தனை வெளி வருகின்றன என்பதே மிகப் பெரிய கேள்வி. ஒரு குடத்துத் தண்ணீரில், ஒரு சொட்டுப் பாலை கலந்தால் அது பாலாகிவிடுமா? முன்பெல்லாம் தியேட்டருக்குச் சென்றால் தான் சினிமா. ஆனால் இன்று? தொலைக்காட்சி மூலம் சினிமா நம் வீட்டுக்குள் நுழைந்து விட்டது. வீட்டுக்குள் வந்த சினிமா, எல்லா வித உறவுகளோடும் அமர்ந்து பார்க்கும் படியாகவா உள்ளது? அதிலும், தனியார் தொலைக்காட்சிகள் பலவும், போட்டி போட்டு சினிமா நிகழ்ச் சிகளை ஒளிபரப்பி, தொலைக் காட்சி யை தொல்லைக்காட்சிகளாக அல்லவா மாற்றிக் கொண்டிருக்கின்றன.

நம் தமிழ் சமூகத்தில், சினிமாவின் தாக்கம் பெருமளவு இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. நடிகைக்கு கோவில், நடிகன், "கட்-அவுட்'டுக்கு பாலாபிஷேகம், குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுக்க ஒரு நடிகை, வருமான வரியை கட்டச் சொல்லி ஒரு நடிகர், அவ்வளவு ஏன்... புத்தகக் கண்காட்சியிலும் நடிகர்களே! தீபாவளி, பொங்கல், என, அனைத்து விஷேச நாட்களிலும், நம் அனுமதி இருந்தாலும், இல்லாவிட்டாலும், "டிவி' மூலம் வீட்டுக்குள் புகும் சினிமாக்காரர்கள். இதாவது பரவாயில்லை... குடியரசு, சுதந்திர தின நாட்களிலும் நடிகர்களே! அந்தோ பரிதாபம்... இந்த நிலையைப் பார்க்க தேசத் தந்தை காந்தியுமில்லை; பாட்டுக்கொரு புலவன் பாரதியுமில்லை; இருந்திருந்தால், வாங்கிய சுதந்திரத்தை, "வாபஸ்' பெறக் கோரி, தேசத்தந்தை மீண்டும் ஒரு சத்தியாகிரகத்தை செய்தாலும் வியப்பதற்கில்லை. பள்ளி மாணவன் என்றால் அவனுக்கு ஆசிரியரை கலாய்க்கத் தெரிய வேண்டும்; கல்லூரி மாணவன் என்றால், அவனுக்கு கட்டாயமாக, "காதல்' வர வேண்டும். இது, சினிமாவின் எழுதப்படாத இலக்கணம். இந்த இலக்கணத்தை படிப்பதால் தானே, பள்ளி மாணவர்களும், "பன்ச்' டயலாக்குகளை பரவலாய் பேசுகின்றனர்.

"கருத்தம்மா' படமெடுத்தாலும், அதில், "செவத்தம்மாவை' போட்டால் தான் படம் ஓடும்; அதனால், ரசிகர்கள் ரசனை அறிந்து அவர்கள் கேட்பதையே நாங்கள் தருகிறோம் என்பதே இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் பதிலாக இருக்கும். அப்படியானால், இவர்கள் கூறுவது என்ன? தமிழனுக்கு ரசனையே கிடையாதா? ஆபாசத்தையும், அசிங்கத்தையும், பார்ப்பதையும், சிந்திப்பதையும் தவிர அவனுக்கு வேறு சிந்தனையே கிடையாதா? தமிழர்கள் உயர்ந்த விஷயங்கள் பலவற்றையும் ரசிப்பதே இல்லையா? இளைஞர்கள் மனதில் சுய முன்னேற்றம், சமூக பொறுப்புணர்வு பற்றிய சிந்தனையே இல்லையா? இல்லை ரசிப்பதற்கு தகுதியற்றவர்களா?

மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக, சமூக அக்கறையில்லாமல், வெட்டு, குத்து, ஆபாசத்தை அள்ளித் தெளிப்பதா? ஆரம்பத்தில் இது போன்ற படங்களை மக்கள் தாழ் பார்வையுடன் பார்த்தாலும், பின் அவற்றையும் வேறு வழியின்றி ஜீரணிக்கக் கற்றுக் கொண்டு விட்டனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. காவிரி பிரச்னைக்கும், ஈழத்தமிழர் படுகொலைக்கும் உண்ணாவிரதம் இருந்து பேராட்டம் நடத்தி, தமிழன் மீதும், தமிழகத்தின் மீதும் அக்கறை உள்ளவர்களாய் வேஷம் போடும் இவர்களுக்கு, தமிழ் சினிமாவால் இந்த சமூகம் பாழாய் போய்கொண்டிருப்பது தெரியாதா? "அம்மா-அப்பா வாயில சோத்தைப் போடு, அடுத்தவன் வாயில மண்ணைப் போடு' என, இவர்கள் பணம் சம்பாதிக்க, இளைஞர்கள் மட்டுமின்றி, குழந்தைகளையும் கெடுத்து, குடும்பங்களை நாசமாக்கி சமுதாயத்தை சீரழிக்கும், இதுபோன்ற படங்களை சென்சார் என்ன செய்ய போகிறது? கதைக்கு தேவையென்றால், ஆபாசத்தை அனுமதிப்போம் என்று இன்னும் கதை சொல்லிக் கொண்டு தான் இருக்கப் போகிறதா?

அப்படியானால், ஆபாசத்தை அள்ளித் தெளித்துக் கொண்டு இருக்கும் படங்கள் அனைத்துமே, உண்மையில் கதைக்கு தேவையானதாக தான் இருக்கிறதா அல்லது கரன்சிகள் கைமாறியதால் கதையோடு தொடர்புடையதாக்கப்பட்டதா? பாடல்கள், படங்கள் என அனைத்திலும் ஒழுக்க மீறல், ஆபாசம். இந்த ஒழுக்க மீறல்களையும், வக்கிரத்தையும் ஆட்சேபனை தெரிவிக்காமல், இன்னும் நாம் ஆதரித்து வந்தால், அவை போகப் போக மோசமான விளைவை சமுதாயத்தில் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. தமிழ் சினிமா... சில ஆண்டுகளுக்கு முன் அப்படி இருந்தது; தற்போது, இப்படி இருக்கிறது என்று இனியும் கூறிக் கொண்டிருக்காமல், வரும் காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கப் போவது யார்? பூனைக்கு மணிகட்டப் போவது யார்? கேளிக்கை வரியைக் கேலி கூத்தாக்கிய அரசாங்கமா? கறைபடிந்து, கண்களை மூடிக் கொண்டு இருக்கும் சென்சார் போர்டா? இனியும் இந்த நிலை தொடருமானால்... பொறுப்பதற்கில்லை... வாருங்கள் தோழர்களே கைகோர்ப்போம்; வைரமுத்து வரிகளை வாய்மையாக்க. anjalarajam@gmail.com

                   - இரா. ஆஞ்சலா ராஜம், சமூக நல விரும்பி

1 comment:

Unknown said...

really tur but who can give me & free me to do this social revelution..if i ready..but govt & social law is notn ready for give solutions ...via peacefull way & violent both...so just promote your blog for social awareness hobbies..thats all it.

thanking you

Post a Comment