Wednesday, February 24, 2010

சாதனை நாயகன் சச்சின் : ஒருநாள் போட்டியில் உலக சாதனையான இரட்டை சதம்.


சாதனை மன்னன் சச்சின்...

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, குவாலியரில் நேற்று (24-02-2010) நடந்த, இரண்டாவது ஒருநாள் போட்டியில், 147 பந்தில் 3 சிக்சர், 25 பவுண்டரி உட்பட 200 ரன்கள் எடுத்து, புதிய உலக சாதனை படைத்தார், இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். இதன்மூலம் இவரது சாதனை பட்டியலில், மேலும் ஒரு புதிய மைல்கல் சேர்ந்தது.

ஒருநாள் அரங்கில் அதிக ரன் மற்றும் அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் சச்சின், முன்னிலை வகிக்கிறார்.

சச்சின் (இந்தியா) : 442போட்டி  17598ரன்  46சதம்  93அரைசதம் எடுத்துள்ளார்.

இது குறித்து தெண்டுல்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

இரட்டை சதம் அடிப்பேன் என்று நான் நினைத்தது இல்லை. 175 ரன்னை தொட்ட போது தான் எனக்கு அந்த ஆர்வம் ஏற்பட்டது. அப்போது 42 ஓவர் தான் முடிந்து இருந்தது. இந்த வாய்ப்பு கிடைத்ததும் ஒவ்வொரு ரன்னாக எடுக்க முடிவு செய்தேன். ஏனென்றால் மறுமுனையில் டோனியின் அதிரடி ஆட்டத்தை வெகுவாக ரசித்தேன்.

200 ரன்னை அடித்ததை எப்படி உணர்வது என்றே எனக்கு தெரியவில்லை. 20 ஆண்டு காலமாக எனக்கு ஆதரவு தந்த இந்திய மக்களுக்கு இந்த இரட்டை சதத்தை அர்ப்பணிக்கிறேன்.

எனது ஆட்டம் மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. பந்து சரியான முறையில் மட்டையில் பட்டது. சாதனைக்காக நான் ஆடவில்லை. அது தானாக நடக்கிறது. நான் எப்போதுமே சாதனைக்காக ஆடியது கிடையாது. 200 ரன் எடுத்தது மிகவும் சிறப்பானது.

எனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் அனைவரையும் மதிக்கிறேன். அவர்களது வாழ்த்து எனக்கு மிகவும் முக்கியம். 199 ரன்னில் இருந்த போது நெருக்கடி எதுவும் இல்லை.

நான் 50 ஓவர்கள் வரை நின்றது மகிழ்ச்சியை தருகிறது. எனது உடல் தகுதிக்கு கிடைத்த நல்ல சோதனையாகும்.

நான் 150 ரன்னில் இருந்த போது 350 முதல் 360 ரன் வரை எடுக்க முடியும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் யூசுப்பதானும், டோனியும் அதிரடியாக ஆடி 400 ரன்னை குவிக்க காரணமாக இருந்தார்கள். யூசுப்பதான் ஆட்டத்தை மாற்றினார். டோனி அருமையாக நிறைவு செய்தார். தினேஷ் கார்த்திக் பேட்டிங்கும் சிறப்பாக இருந்தது.

இவ்வாறு டெண்டுல்கர் கூறினார்.

No comments:

Post a Comment