Friday, March 12, 2010

உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1,011 பேர் : நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி.

நியூயார்க் : இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி, உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளதாக, அமெரிக்காவின், "போர்ப்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவரின் சொத்து மதிப்பு, 1.39 லட்சம் கோடி ரூபாய். அமெரிக்க பத்திரிகையான, "போர்ப்ஸ்' உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

"போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளவர், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் ஸ்லிம். இவரின் சொத்து மதிப்பு, 2.56 லட்சம் கோடி ரூபாய். அமெரிக்காவைச் சேர்ந்த பில்கேட்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு, 2.54 லட்சம் கோடி ரூபாய். அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் பபெ என்பவர், 2.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துடன் மூன்றாவது இடத்திலும், இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி, 1.39 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துடன் நான்காவது இடத்திலும் உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த லட்சுமி மிட்டல், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், ஐந்தாவது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு, 1.37 லட்சம் கோடி ரூபாய்.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த எய்க் பட்டிஸ்டன் எட்டாவது இடத்திலும், அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் ப்ளூம்பெர்க் 23வது இடத்திலும் உள்ளனர். முகேஷ் அம்பானியின் சகோதரரான, அனில் அம்பானி, 65 ஆயிரத்து 760 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், இப்பட்டியலில் 36வது இடத்தில் உள்ளார். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளவர்களில் இரண்டு பேர் மட்டுமே இந்தியர்கள். கடந்த 2008ம் ஆண்டு, உலகில், 1,125 கோடீஸ்வரர்கள் இருந்தனர். கடந்தாண்டு உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக, கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 793 ஆக குறைந்தது. தற்போது உலகில் 1,011 கோடீஸ்வரர்கள் உள்ளனர். "போர்ப்ஸ்' பத்திரிகையின் தலைமை நிர்வாகி ஸ்டீவ் போர்ப்ஸ் கூறுகையில், " உலகப் பொருளாதார மந்த நிலை சீரடைந்து வருவது, இந்த பட்டியலில் எதிரொலித்துள்ளது' என்றார்.

இந்திய பெண்கள் இருவர்: உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த பெண்கள் இரண்டு பேர் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த "போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த சாவித்ரி ஜிண்டால் மற்றும் இந்து ஜெயின் ஆகிய இரண்டு பெண்கள் இடம் பெறுள்ளனர். இவர்களில், சாவித்ரி ஜிண்டால், 58 ஆயிரத்து 560 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துடன், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 44வது இடத்தில் உள்ளார். "பென்னட் கோல்மன் அண்ட் கோ' நிறுவனத்தின் தலைவர் இந்து ஜெயின் 13 ஆயிரத்து 440 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துடன் இப்பட்டியலில் 354வது இடத்தில் உள்ளார்.

No comments:

Post a Comment